Skip to main content

எங்களிடம் ஒரு மந்திரம் இருக்கு! செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி

Published on 03/02/2019 | Edited on 04/02/2019
vasanthakumar



தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
 

செயல் தலைவர் பதவியை எப்படி நினைக்கிறீர்கள்?
 

ராகுல்காந்தி இந்த பதவியை வழங்கியிருக்கிறார். நல்ல பதவியை தந்த அவருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, கட்சிக்காக மேலும் தீவிரவமாக உழைப்பேன். 
 

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டுள்ளாரே?
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை நியமிப்பதும், மாற்றுவதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரின் விருப்பம். அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்படுகிறோம். 
 

பாராளுமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?
 

காங்கிரஸ் - திமுக கூட்டணித்தான் நிலைப்பாடு. 
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி உள்ளது?
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை. 
 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும்?
 

அது ராகுல்காந்திக்குத்தான் தெரியும். 
 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தீர்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவீர்களா?
 

மீண்டும் குமரி தொகுதியில் போட்டியிடுவதற்கு ராகுல்காந்தியிடம் வாய்ப்பு கேட்போம். அவர் அனுமதித்தால் போட்டியிடுவோம். 
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிறைய உட்கட்சி பூசல் உள்ளதே?
 

காங்கிரஸ் கட்சி எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமில்லை. அதில் நான் பெரியவனா? நீ பெரியவனா என்று சண்டைப்போடுவதில் அர்த்தமேயில்லை. எல்லோருக்கும் பெரியவங்க ராகுல்காந்திதான். ராகுல்காந்திதான் நெம்பர் 1. நாங்களெல்லாம் ஜீரோ. அதனால் ராகுல்காந்தி என்ன சொல்கிறாரோ அதனை நாங்கள் கேட்கப்போகிறோம். 
 

உட்கட்சி பூசலால் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்காதா?
 

அதற்கெல்லாம் எங்களிடம் ஒரு மந்திரம் இருக்கு. நாங்கள் அந்த மந்திரத்தை பிரயோகிச்சமென்றால் எல்லாம் சரியாகிவிடும். 
 

ஜி.கே.வாசன் மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைவற்கான வாய்ப்பு உள்ளதா?
 

கண்டிஷன் பேரில் யாரையும் சேர்க்க மாட்டார்கள். யாராக இருந்தாலும் அவர்களாக வந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொள்ள வேண்டியதுதான். 
 

இடைக்கால பட்ஜெட் வரக்கூடிய தேர்தலுக்கு பின் எடுக்கப்பட உள்ள புதிய வளர்ச்சிப்பாதைக்கான டிரைலர் என பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருக்கிறாரே?
 

விவசாயிக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாய் கொடுப்பேன் என்பது டிரைலரா? ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பதிலும் இல்லை. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி எதுவும் இல்லை. இந்த தற்காலிக பட்ஜெட் தற்காலிகமாகவே இருக்கும். பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவோம். 
 

மாநில அளவில் பொறுப்புக்கு வந்துவிட்டீர்கள். பாஜகவின் மாநிலத் தலைவராக இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன் உங்கள் உறவினர். அவர்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடுமையான பேட்டியோ, அறிக்கையோ வெளியிட்டால்...
 

அதையும் தாண்டி, அதற்கு மேலேயும் அறிக்கை வெளியிடுவோம். 

 

vasathakumar



உறவினர் என்பதால்...
 

யார் எந்த இடத்தில் இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் பிறப்பால் காங்கிரஸ்காரர்கள். எங்களுக்கு காங்கிரஸ் கட்சித்தான் முக்கியம். சொந்தமெல்லாம் சம்மந்தமில்லை...
 

ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவாரா?
 

கண்டிப்பாக.
 

மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் தேர்தலுக்குப் பின் பிரதமரை தேர்ந்தெடுப்போம் என அதில் கலந்து கொண்ட தலைவர்கள் பேசினார்களே?
 

அது அவர்களுடைய நிலைப்பாடு. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னுறுத்துவோம். வெற்றி பெறுவோம். அவர்களும் எங்களை ஆதரிப்பார்கள். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.