Skip to main content

இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழக முஸ்லிம்கள்... கவனத்தை ஈர்த்த சம்பவம்... ஆதரவு கொடுத்த எதிர்க்கட்சிகள்!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் இச்சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடிப் பிரயோகத்தில் இறங்கியது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றிரவே தமிழகம் முழுக்க பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
 

incident



சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் தினகரன், கபில் சிரோத்கர், சுப்புலட்சுமி ஆகியோர் அத்துமீறியதைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்தே பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை ஏற்படுத்த, கமிஷனரும் கூடுதல் கமிஷனரும் முயற்சியை மேற்கொண்டனர். அது பலனளிக்கவில்லை. இதற்கிடையில் 19-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முடிவுசெய்தனர். போராட்டம் நடப்பது முடிவானதும் அதற்கான செயல்பாடுகள் வேகமாக நடக்கத் தொடங்கின.

இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கும் ஒவ்வொரு தெருவிலும், சந்திலும் தகவல்தொடர்பு கண்ணிமைக்கும் வேகத்தில் நடைபெற்றது. தமிழக அரசுக்கு தங்களின் முழுமையான எதிர்ப்பை வெளிக்காட்டவேண்டுமென்ற வேகமே இதற்கான உந்துசக்தியாக அமைந்தது.

தமிழ்நாடு முழுக்க சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடிக்குமென உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி முன்கூட்டியே சொல்லியிருந்தார். அதனால், பிப்ரவரி 14-க்கு முன்பிருந்தே வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் போராட்டங்களையும், மக்களையும் கண்காணித்து கட்டுப்படுத்தி வந்த காவல்துறை, முற்றுகைப் போராட்டத்தை முடிந்தளவுக்கு கட்டுப்படுத்தவும், முடிந்தால் தடுத்துநிறுத்தவும் இன்னொரு பக்கம் செயல்பட்டு வந்தது. போராட்டக்காரர்களின் செல்போன், தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட் டன. இதை முன்கூட்டியே எதிர்பார்த்த போராட்டக்காரர்கள் அதையும் தாண்டி பெரிய அளவுக்கு திட்டமிட்டுச் செயல்பட்டனர்.
 

incident



சட்டம் ஒழுங்கைக் கண்காணிக்க ஆறு பேர், ரயில்வே பாதை உள்ளிட்ட மற்ற விஷயங்களைப் பாதுகாக்க ஆறுபேர் நியமிக்கப்பட்டனர். சென்னை நகரத்தை மட்டும் சென்னை போலீஸ் கமிஷனரான ஏ.கே. விஸ்வநாதன் கட்டுப்பாட்டில் விடுவதென முடிவுசெய்யப்பட்டது. மற்ற இடங்களில் நடக்கிற போராட்டங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை டிஜி.பி.யான ஜே.கே. திரிபாதியும் இன்டலிஜன்ஸ் ஐ.ஜி. சத்தியமூர்த்தியும் எடுத்துக்கொண்டனர்.

தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்துக்கு மாநகர காவல்துறை அனுமதியளிக்கவில்லை. அதேசமயம் இந்தப் போராட்டத்துக்கு அனுமதியளிக்கக்கூடாதென உயர்நீதிமன்றத்திலும் வாராகி என்பவர் மூலம் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு போராட்டத்துக்குத் தடைவிதித்தது. இருந்தபோதிலும் தடையை மீறி போராடுவதென போராட்டக் குழு முடிவுசெய்தது.


போராட்டத்துக்கு 23 இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவளிக்க முன்வந்தன. போராட்டத்தன்று சென்னையில் திரண்ட மக்கள் கூட்டம் காவல் துறையே எதிர்பார்க்காத அளவுக்கு இருந்தது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் என பெருமளவில் திரண்டுவந்து கலந்துகொண்டது காவல்துறையை மட்டுமின்றி போராட்டத்துக்கு ஆதரவு தந்த கட்சிகளையும் ஆச்சரியப்பட வைத்தது.

எனினும், வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் சர்ச்சைக்கு ஆளான தினகரன், கபில் சிரோத்கர், சுப்புலட்சுமியை போராட்டக்காரர்கள் காணநேர்ந்தால் உணர்ச்சிவசப்படக் கூடுமன்பதால் புத்திசாலித்தனமாக அவர்களைத் தவிர்த்திருந்தனர் காவல்துறை உயரதிகாரிகள்.

ஊர்வலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்தால் அதை எதிர்கொள்ள வஜ்ரா வாகனம், தண்ணீர் பாய்ச்சும் வாகனம், ஆயிரக்கணக்கான போலீசார் ஆகியோரை தயார் நிலையில் வைத்திருந்தது. காலை பத்து மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து தொடங்கி சேப்பாக்கம் நோக்கி பேரணி நடந்தது. போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் அதற்கு அவசியமில்லாத வகையில் போராட்டக்காரர்கள் கட்டுப்பாடாக நடந்துகொண்டனர்.


போராட்டக்காரர்கள் பேரணியில் முழுமையான ஒழுங்கைக் கடைப்பிடித்தனர். தேசியக் கொடியைத் தவிர வேறந்த கட்சிக் கொடியையும் ஊர்வலத்தில் கொண்டுவரவில்லை. ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு, பேரணியில் நடந்து வருபவர்களுக்கு நீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்பாடு செய்து, போராட்டத்தின்போது போடப்பட்ட குப்பைகளை அவர்களே பொறுக்கி ஒரு முன்னுதாரணமாக நடந்துகொண்டனர். பேரணியின் நிறைவாக நடந்த உரையிலும் யாரும் எதிர்மறையாக, சர்ச்சையாகப் பேசாதவண்ணம் பார்த்துக்கொண்டனர். தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டமென அறிவிக்கப்பட்டாலும், நீதிமன்றம் தடைவிதித்ததால் பேரணியோடு முடித்துக்கொண்டனர் போராட்டக் குழுவினர். முடிவில் தேசிய கீதம் பாடி நிறைவு செய்தனர். தமிழகத்தின் பல நகரங்களிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்தனர் தமிழக முஸ்லிம்கள். 

 

அருண்பாண்டியன்

படங்கள்: ஸ்டாலின், அசோக் & குமரேஷ்

 

 

Next Story

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார். 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.