Skip to main content

தொலைபேசியில் நிர்வாகிகளுடன் பேச்சு! சசி ஆட்டம் ஆரம்பம்! எடப்பாடியின் முகத்தில் வாட்டம்! -மாறும் அரசியல் காட்சிகள்! 

Published on 02/02/2021 | Edited on 02/02/2021
jjjj

 

சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் 4 ஆண்டுகால சிறைத்தண்டனை முடித்த சசிகலாவுக்கான விடுதலை உத்தரவு அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் மருத்துவ மனைக்கே வந்தது. ஜனவரி 27 அன்று காலை 10 மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமைக் கண்காணிப்பாளர் கேசவமூர்த்தி, சிறை சூப்பிரெண்டு லதா மற்றும் அரசு வழக்கறிஞர் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி ஆகியோர் விக்டோரியா மருத்துவமனையின் டீன் ஜெயந்தியை சந்தித்தார்கள். கொரேனா தடுப்பு உடைகளுடன் 12 மணி வாக்கில் அவர்கள் சசிகலாவை சந்தித்து விடுதலை பத்திரத்தை வழங்கினார்கள். அதில் கையொப்பமிட்டார் சசிகலா.

 

ஆக்ஸிஜன் உதவியில்லாமலும், அறிகுறியில்லாத கொரோனா நோயாளியாகவும் சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற மருத்துவ சான்றிதழை சிறை நிர்வாகத்திற்கு டீன் ஜெயந்தி அளித்தார். அந்த நேரத்தில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் பரபரப்பாக மருத்துவமனைக்கு வந்து சசிகலாவிற்கு ஒரு சம்மனை கொடுத்தார்கள். அத்துடன் 17 கிலோ எடை உள்ள ஆவணங்களையும் அளித்தார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பினாமிகள் மூலமாக, போயஸ் கார்டனில் கட்டி வரும் புது பங்களா உள்பட 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. அதற்கான விளக்கத்தை தருமாறு சசிகலா இருந்த பரப்பான அக்ரஹாரா சிறைக்கு மத்திய அமலாக்கத்துறையினர் கடிதம் அனுப்பியிருந்தார்கள். சசிகலா வாங்காத நிலையில், விடுதலையானவுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு அளித்து அடுத்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். மருத்துவமனையில் நார்மல் ட்ரீட்மெண்ட் என்றாலும், பாஜக அரசு கொடுத்தது ஷாக் ட்ரீட்மெண்ட்.

 

ஏற்கனவே 20ஆம் தேதி இதே தகவலை வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி, சசிகலாவை கொரோனா தடுப்பு உடையுடன் சந்தித்து எடுத்துச் சொன்னார். அதை எந்த ரியாக்ஷனும் இல்லாமல் கேட்டுக்கொண்ட சசிகலாவிடம் மருத்துவர்கள், ""கர்நாடகா மாநிலத்தில் கொரோனா சிகிச்சை சட்டங்களின்படி தீவிரமாக கொரோனா பாதித்த ஒருவர் 10 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும், அதில் மூன்று நாட்கள் அவர் செயற்கை சுவாசம் இல்லாமல் இயற்கையாக சுவாசிக்க வேண்டும், 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும், அதில் நெகட்டிவ் என்று வந்தால்தான் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரமுடியும்'' என விளக்கினார்கள்.

 

ddd

 

தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதை டாக்டர்கள் தெரிவித்தபோதும், தன்னை கொரோனாவிலிருந்து காப்பாற்றிய இங்கேயே சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகிறேன் என சொல்லிவிட்டார் சசி.

 

விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க தினகரன், விவேக், டாக்டர் வெங்கடேஷ் போன்ற சொந்த பந்தங்களும், அமமுக தொண்டர்களும் இவர்களைத்தாண்டி அதிமுகவினரும் வந்திருந்தனர். ஏ-2 சசிகலாவுக்கு சிறை திறந்த நாளன்று சென் னையில் ஏ-1 ஜெ.வின் சமாதி, நினைவு இல்லம், சிலை ஆகியவை திறக்கப்பட்டன. அதற்கு முதல் நாள் இந்தியாவின் குடியரசு தினம். கொரோனா தொற்றைக் காரணம் காட்டி, சென்னை கடற்கரையில் நடைபெறும் அணிவகுப்பை பார்வையிடும் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், மறுநாள் (ஜனவரி 27) அன்று ஜெ சமாதி திறப்புக்காக தமிழகம் முழுவதும் இருந்தும் 2300 பேருந்துகளை ஏற்பாடு செய்து லட்சக்கணக்கில் ஆட்களை குவித்தது ஆளுங்கட்சி. முதல் நாள் அச்சுறுத்திய கொரோனா அடுத்தநாள் லீவு போட்டு ஓய்வெடுத்துவிட்டதா என்ற விமர்சனத்திற்கு அரசுத் தரப்பில் பதில் இல்லை. வழக்கமாக, ஆளுங்கட்சிக்காக 1000 பேர் கூடினால் லட்சங்களில் கணக்கு காட்டும் உளவுத்துறையோ, லட்சக்கணக்கில் திரட்டி வரப் பட்டவர்களின் எண்ணிக்கையை 50ஆயிரம் என சுருக்கியது.

 

ddd

 

ஏ-1 சிலை திறப்பும், ஏ-2 சிறை திறப்பும் நல்ல நிகழ்வுகளே என பாசிட்டிவ்வாக பதில் சொன்ன டிடிவி தினகரன், பெங்களூருவில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போய் பிப்ரவரி 3ஆம் தேதி சசிகலா வெளியே வரும் நாளன்று அளிக்கப்பட வேண்டிய வரவேற்புகளுக்கான ஏற்பாடுகள் பற்றி சொந்தபந்தங்களுடன் விவா திக்க ஆரம்பித்தார்.

 

சசிகலாவுக்கு கொரோனா வந்தவுடன் அவரது சொந்தபந்தங்களெல்லாம் தங்களது முன்விரோதத்தை மறந்து ஒற்றுமையை உருவாக்கியுள்ளனர். எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது திவாகரனின் சம்பந்தி உளவுத்துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதை தினகரன் எதிர்த்தார். தினகரனின் எதிர்ப்பின் காரணமாக அவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றினார் எடப்பாடி. இது தினகரனுக்கும் திவாகரனுக்குமான மோதலாக வெடித்தது. சசிகலாவின் உறவினரான மகாதேவன் மரண சடங்கின்போது திவாகரனுக்கு நெருக்கமாக இருந்த எடப்பாடி உள்பட அனைத்து தமிழக அமைச்சர்களையும் தினகரனை எதிர்க்குமாறு அறிவுரை சொன்னார் திவாகரன். அது இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

ddd

 

இந்த நிலையில் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்தின் மனைவியும், தினகரனின் சகோதரரான பாஸ்கரனின் மகளுமான ஜெயஸ்ரீயின் வளைகாப்பு நடந்தது. விரோதம் காரணமாக ஜெய்ஆனந்தின் திருமணத்திற்கு அழைக்கப்படாத தினகரன் தனது மனைவியுடன் இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். திவாகரனிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினார். இதைப் பார்த்த சசிகலாவின் உறவினர்கள் இந்த ஒற்றுமை முன்பே வந்திருந்தால் எடப்பாடி இன்று சசிகலாவை எதிர்க்கும் அளவிற்கு நிலைமைகள் வந்திருக்காது எனப் பேசிக் கொண்டனர்.

 

சசிகலா வெளியே வந்தாலும் அவர் பழைய பலத்துடன் இல்லை. ஜெ. இருந்த காலத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளை பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு அனுபவம் மிக்க சசிகலாவின் உத்தரவுகளை நிறைவேற்ற அவரது உறவினர் படை ஒன்று 24 மணி நேரமும் இயங்கியது. அத்துடன் அவருக்கு தேவையான அரசியல் வேலைகளை திரைமறைவில் செய்து முடிக்க நடராஜனும் உயிருடன் இருந்தார். இன்று சசிகலாவிடம் பணம் இருக்கிறது, ஆனால் அதை வெளிக்கொண்டு வந்து சுதாகரனுக்கு பத்து கோடி ரூபாய் அபராதம் கட்ட சசிகலாவால் முடியவில்லை. நெருக்கமானவர்களின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.

 

இந்தநிலையில் சசிகலா வெளியே வந்தாலும் இன்று அவரை எதிர்க்கும் எடப்பாடிக்கு எதிராக வேகமாக பாய்வாரா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனாலும் சசிகலா என்கிற ஆளுமையை குறைத்து மதிப்பிட முடியாது. அவருக்கான படை பலம் என்பது அவரது உறவினர்கள் மட்டுமல்ல, அதைத்தாண்டி ஏராளமான நலன்விரும்பிகள் அவருக்காக பணியாற்றக் காத்திருக்கிறார்கள்.

 

""கடந்த ஒரு வருடமாக, கொரோனா ஊரடங்கு சிறைவிதிகளால் சசிகலா தனது சொந்த பந்தங்கள் உள்பட யாரையும் சிறையில் சசிகலா சந்திக்கவில்லை. தனக்கு எதிராக எடப்பாடி டெல்லியில் ஓப்பனாகப் பேசிய நாட்களிலிருந்து அவருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமென சசிகலா இந்நேரம் தீர்மானித்து அதற்காக களப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். அவரது விடுதலை அவரது பணியை எளிதாக்கிவிட்டது. மருத்துவமனையில் இருந்தபடியே தொலைபேசி மூலம் சசிகலா பேச ஆரம்பித்துவிட்டார். அந்தத் தகவல்கள் எடப்பாடியை சென்றடைந்துக்கொண்டிருந்தது. அதனால்தான் ஜெ.வின் நினைவு இல்ல திறப்பு விழாவில் பேசிய எடப்பாடியின் முகத்தில் வாட்டம் தெரிந்தது'' என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.

 

சசிகலாவை வரவேற்று நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகி ஒட்டிய போஸ்டர் என்பது ஒரு பானை சோற்றுக்கான பதம்தான். சசிகலா வெளிப்படையாக அரசியல் வேலைகளைத் தொடங்கும்போது அமைச்சர்கள் உள்பட பலரும் இந்தப் பக்கம் வருவார்கள் என்கிறது அவரது சொந்தபந்தம்.

 

படங்கள் : ஸ்டாலின், அசோக், குமரேஷ்

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.