Skip to main content

யூகங்களை பொய்யாக்கிய ஸ்டாலின்!

Published on 28/08/2018 | Edited on 28/08/2018
Stalin

 

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்குப் பிறகும் தினந்தோறும் திமுகவைப் பற்றியே ஊடகங்கள் விவாதங்களை நடத்தி வந்தன. ஸ்டாலின் சமாளிப்பாரா? அழகிரி திமுகவை உடைப்பாரா? உள்கட்சிக் குழப்பங்கள் வெடிக்குமா? என்றெல்லாம் ஆளாளுக்கு யூகமான தலைப்புகளில் விவாதங்களை நடத்தினார்கள்.

 

திமுக அப்படி போய்விட முடியாது. அப்படிப் போனால் அது திமுகவாக இருக்க முடியாது. அண்ணா, கலைஞர் வழியிலிருந்து திமுக பிசகினால்தான் பிரச்சனை வெடிக்கும் என்று வாதிட்டவர்கள் பலர். திமுகவையும், ஸ்டாலினையும், கலைஞர் குடும்பத்து உறுப்பினர்களையும் வைத்து பின்னப்பட்ட ஊடக விவாதங்களையும், பத்திரிகை செய்திகளையும் பார்த்தும் பாராததுபோல எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக கடந்தார் ஸ்டாலின்.

 

 

 

பல்துறை வித்தகர் கலைஞரின் புகழஞ்சலி நிகழ்ச்சிகளை அருமையாக திட்டமிட்டு நடத்திக் கலந்துகொண்டிருந்தார். ஊடகவியலாளர்கள், கலைத்துறையினர், இலக்கிய வித்தகர்கள், மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள், அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், நீதித்துறையினர் என்று அர்த்தம் பொதிந்த புகழஞ்சலிக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

 

அகில இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் அஞ்சலி நிகழ்ச்சியில் பாஜகவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இதையே வைத்து திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்கப்போகின்றன என்கிற அளவுக்கு விமர்சனங்கள், விவாதங்கள் கடந்த சில நாட்களாக ஒடிக்கொண்டிருந்தன. கலைஞருக்கு பாரதரத்னா விருது பெறத்தான் பாஜகவை திமுக அனுசரிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநரைத் திருப்ப பாஜகவின் உதவியை வேண்டித்தான் திமுக நெருக்கம் காட்டுகிறது. காங்கிரஸை கழற்றிவிட்டு புதிய அணியை உருவாக்கவே திமுக பாஜகவை அழைக்கிறது என்றெல்லாம் யூக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

Stalin

புகழஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கேலியும் கிண்டலுமாக திமுகவை காய்ச்சி எடுத்தார்கள். இந்த அழைப்பில் அரசியல் இல்லை என்று திமுகவே அறிவித்தபிறகும்கூட அதை மறைத்து, திமுகவும் பாஜகவும் நெருங்க வேண்டும் என்ற ஆசையை மறைமுகமாக பலர் வெளியிட்டனர்.

 

எதற்கும் ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை. அதேசமயம் கலைஞரின் புகழஞ்சலிக் கூட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற 99 சதவீதம் பேர் சமூகநீதி, மதசார்பின்மை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட கொள்கைகளில் கலைஞரின் உறுதியை மட்டுமே முன்னிறுத்தி பேசினார்கள். இந்தியாவில் தமிழகம் மட்டுமே உதாரண மாநிலமாக இருப்பதையும் அவர்கள் பெருமையாக பேசினார்கள். நவீன தமிழகத்தை உருவாக்கியதில் கலைஞரின் பங்களிப்பை ஆய்வுபூர்வமாக பல்வேறு துறை அறிஞர்கள் விரிவாக பேசினார்கள்.

 

இந்நிலையில்தான் பரவலாக உருவாகியிருந்த முதல் யூகத்தை ஸ்டாலின் உடைத்தார். தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் திமுகவினர் மத்தியில் புதிய நம்பிக்கை வெளிப்பட்டது. ஸ்டாலின் ஏதோ புதிய வியூகத்தை வகுத்திருக்கிறார் என்பது புரிந்தது.

 

அப்போதும்கூட பாஜகவை திமுக நெருங்குகிறதா என்ற கேள்வியை மய்யப்படுத்தி விவாதங்கள் தொடரத்தான் செய்தன. இதுதொடர்பான வினாக்களுக்கு இன்று விடைகிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுக பொதுக்குழுவில் புதிய தலைவராக பதவியேற்கும் ஸ்டாலின் நிச்சயமாக திமுகவின் எதிர்கால பாதையை தெளிவுபடுத்துவார் என்ற எதிர்பார்ப்பை அவர் பொய்யாக்கவில்லை.

 

 

 

திமுக என்றும் தனது கொள்கையில் உறுதியாக இருக்கும். சமூக நீதியையும் மதசார்பின்மையையும் உயிராக கொண்டு இயங்கும் என்று ஸ்டாலின் அறிவித்தார். அதுமட்டுமல்ல, இந்தியா முழுவதும் காவிச்சாயம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு எதிராக களம் அமைத்து போராட திமுக தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்து மிகப்பெரிய கரவொலியை பெற்றார்.

 

கலைஞரின் தொடர்ச்சியாய் ஸ்டாலினும், பெரியார், அண்ணா வழியில் கொள்கை தீபத்தை ஏந்தி திமுகவை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.