Skip to main content

"பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு வருமா" - பாலியல் மருத்துவர் காமராஜ் பளீச் பதில்

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

Dr Kamaraj

 

பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாலியல் மருத்துவர் காமராஜை நக்கீரன் சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

"பிரியாணியில் உள்ள பொருட்கள் அனைத்தும் தினசரி சமையலில் நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள்தான். அதில் கூடுதலாக எந்தப் பொருளும் சேர்க்கப்படுவதில்லை.  பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு வரும், செவ்வாழை சாப்பிட்டால் நல்லது என்பது மாதிரியான நிறைய கருத்துகள் உலவிக்கொண்டு இருக்கின்றன. இவையனைத்தும் பெரும்பாலும் நம்பிக்கை அடிப்படையில்தான் உள்ளனவேயொழிய, ஆய்வுகள் அடிப்படையில் இல்லை. பிரியாணி அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்சனை வேண்டுமானால் வரலாம். அதற்குக்கூட பிரியாணியைக் குறை கூற முடியாது. நாம் அதிகமாக சாப்பிடுவதுதான் பிரச்சனை. மற்றபடி ஆண்மைக்குறைவுக்கும் குழந்தையின்மைக்கும் பிரியாணியோடு எந்தத் தொடர்பும் இல்லை. இந்துக்களைவிட முஸ்லீம்கள் அதிகமாக பிரியாணி சாப்பிடுகிறார்கள். அப்படியென்றால் இந்நேரம் அவர்களது ஜனத்தொகை குறைந்திருக்க வேண்டுமல்லவா? அப்படி எதுவும் நடந்தது போல தெரியவில்லையே. 

 

இன்றைக்கு நாம் சாப்பிடும் பல்வேறு உணவு வகைகள் ஆண்மைக்குறைவு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியவை. பூச்சி தாக்குதலிருந்து காப்பதற்காக திராட்சைப் பழங்களை பூச்சி மருந்துகளில் மூழ்க வைத்து எடுக்கிறார்கள். அதில் பூச்சி மருந்துகள் காய்ந்து அப்படியே இருக்கும். திராட்சை மட்டுமல்ல பல பழங்கள் இன்றைக்கு அப்படித்தான் வருகின்றன. நெல்லில் தொடங்கி எல்லா விளைச்சலுக்கும் பூச்சிக்கொல்லி அடிக்கிறோம். கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மூன்று மாதங்கள் ஆறு மாதங்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயனம் கலக்கின்றனர். இதன் மூலம் ஆண்மைக்குறைவும் குழந்தையின்மையும் ஏற்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரியாணிக்கு அந்த மாதிரியான நிரூபணம் ஏதும் இல்லை". இவ்வாறு மருத்துவர் காமராஜ் தெரிவித்தார்.

 

 

Next Story

கடனுக்கு பிரியாணி தராததால் ஹோட்டல் உரியமையாளர் படுகொலை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Hotel owner passed away for not serving biryani

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரில் பிரியாணி கடை வைத்திருக்கும் கண்ணன் கடந்த 26 ஆம் தேதி கடை வியாபாரத்தை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் கண்ணனை சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்தது. இதனால் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதபமாக உயிரிழந்தார். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கண்ணனின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிவு செய்து கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு உதவி ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில் கண்ணனை கொலை செய்த மர்ம கும்பல் நெய்வேலி புதிய அனல் மின் நிலைய பகுதிகளில் உள்ள முந்திரி காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

 

இதனைத் தொடர்ந்து முத்திரி காட்டிற்கு விரைந்த போலீசை பார்த்தவுடன் தலைமறைவாக இருந்த கும்பல் தப்பியோட முயன்றுள்ளது. அவர்களை சுற்றி வளைத்த போலீசார் 3 பேரை கைது செய்த நிலையில், 2 பேர் அருகே இருந்த மதில் மீது ஏறி தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்ததில் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 5 பேரும் கைது செய்யப்பட்டு, காயமடைந்த இருவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான 5 பேரும், குளம் கிராமத்தைச் சேர்ந்த எழில் நிலவன், ஆகாஷ் என்கிற டெக்லஸ், நெய்வேலி 27 வது வட்டத்தைச் சேர்ந்த சதீஷ், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சல்மான்கான், நெய்வேலியைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. 

 

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “வெளியூரைச் சேர்ந்த கண்ணன் எங்கள் ஊர் பகுதியில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார். அவரது கடைக்கு சாப்பிட சென்ற நாங்கள் கண்ணனிடம் கடனுக்கு பிரியாணி கேட்டோம். ஆனால் அவர் உங்களுக்கு கடன் தர முடியாது என கராராக தெரிவித்தார். மேலும் எங்கள் மீது தெர்மல் போலீசில் புகார் அளித்தார் அந்தப் புகாரின் பேரில் எங்களது நண்பர் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

 

சிறையில் இருக்கும் நண்பரை பார்ப்பதற்காக  கடலூர் மத்திய சிறைக்கு சென்றோம், அப்போது விக்னேஷ் எங்களிடம் வெளியூரிலிருந்து வந்து நம்ம பகுதியில் பிரியாணி கடை வைத்து பிழைபபு நடத்தி வரும் கண்ணன் உள்ளூர் காரர்களான எங்களுக்கு கடன் கொடுக்க மறுத்ததோடு போலீசில் புகார் அளித்து சிறைக்கும் அனுப்பி உள்ளார். சும்மா விடக்கூடாது அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சிறை சந்திப்பின் போதே திட்டம் தீட்டினோம், அதன்படி கண்ணன் தினசரி கடை வியாபாரத்தை முடித்து வீட்டுக்குச் செல்லும் வழியை கண்காணித்து வந்தோம். நேற்று கடை வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது வழிமறித்து வெட்டி கொலை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்தனர். அதன்படி ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

 

Next Story

பிரியாணியில் போதைப் பொருள்; அதிர்ந்து போன வழக்கறிஞர்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Shocked as the biryani bought at a restaurant in Tiruvallur contained cannabis

 

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூருக்கு அடுத்துள்ள தாமரைப்பாக்கம் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது வெங்கல் ஊராட்சி. இங்குள்ள நெடுஞ்சாலை பகுதியின் ஓரமாகப் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதே பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ராஜ்குமார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். மேலும், இவர் தனது குடும்பத்துடன் வெங்கல் ஊராட்சியில் வசித்து வருகிறார்.

 

இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் ராஜ்குமார் வெங்கல் நெடுஞ்சாலையில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்கச் சென்றுள்ளார். அங்கு ஒரு பிரியாணி பொட்டலத்தை பார்சல் வாங்கிக்கொண்டு அதைத் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதற்கிடையில், சுடச் சுட வாங்கி வந்த தந்தூரி பிரியாணியை வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டே பொறுமையாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

 

அப்போது, திடீரென அந்த பிரியாணியில் வித்தியாசமான பொருள் இருப்பதைப் பார்த்ததால் உடனடியாக அலர்ட்டான ராஜ்குமார், அந்த பிரியாணியைச் சாப்பிடாமல் அலசிப் பார்த்துள்ளார். அந்த சமயத்தில், சாப்பிடுவதற்காக வாங்கி வந்த பிரியாணியில் கூல் லிப் எனப்படும் போதை வஸ்து இருந்துள்ளது. ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராம்குமார், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளார். மேலும், நடந்த விஷயத்தைத் தனது வீட்டில் உள்ளவர்களிடம் கூறி ஆதங்கம் அடைந்துள்ளார்.

 

ஒருகட்டத்தில், விரக்தியடைந்த ராஜ்குமார் கூல் லிப் கிடந்த பிரியாணி பொட்டலத்தை எடுத்துக்கொண்டு நேராக அந்த பிரியாணி கடைக்குச் சென்றுள்ளார். பின்னர், அந்த கடையில் இருந்த மேசையில் தான் வாங்கி வந்த பிரியாணி பொட்டலத்தைப் பிரித்துப் போட்டுவிட்டு ஊழியர்களை அழைத்திருக்கிறார். இதனிடையே, என்ன நடந்தது எனப் பதற்றத்துடன் வந்த ஊழியர்களிடம், "என்னது இது... சாப்பிடுற சாப்பாட்டுல ஹான்ஸ் எப்படி வரும். காசு கொடுத்து தானே வாங்குறோம். என்னப்பா இதெல்லாம்" எனக் கோபமாக வாக்குவாதம் செய்தார். ஒருகணம், இதைப் பார்த்து என்ன சொல்வது எனத் தெரியாமல்  ஊழியர்கள் அமைதியாக இருந்துள்ளனர்.

 

இதனால் கோபமடைந்த ராஜ்குமார், "இந்த கடைக்கு யாரு ஓனரு? முதல்ல அவர கூப்பிடுங்க. சாப்பிடுற சாப்பாட்டுல இதெல்லாம் எப்படி வரும்" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அதன்பிறகு, அந்த பிரியாணி கடையின் உரிமையாளர் வந்தவுடன் அவரிடம் ராஜ்குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அவர்கள் உரிய விளக்கம் அளிக்காமல் ராஜ்குமாரை சமாதானம் செய்யவே முயற்சித்தனர்.

 

இதையடுத்து, இனி இவர்களிடம் பேசினால் சரிவராது என முடிவு செய்த ராஜ்குமார், இந்த சம்பவம் குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையில் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸிடம் புகார் அளித்தார். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் கடைகளில் விற்கப்படும் கூல் லிப் உள்ளிட்ட போதை வஸ்துக்களும் சர்வ சாதாரணமாகக் கிடப்பதாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இதனை ஒடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது பிரியாணி பொட்டலத்தில் போதை வாஸ்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.