Skip to main content

ரஜினி - கமலின் யூகம்தான் எடப்பாடி பழனிசாமி பதட்டத்திற்கு காரணம்... முரளி அப்பாஸ் ஸ்பெஷல் பேட்டி

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

 

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் கமலஹாசன் ஏன் போட்டியிடவில்லை? வயது முதிர்ந்த காரணத்தால் தான் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும், அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்திருந்தார். 
 

எடப்பாடி பழனிசாமியின் கருத்து தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மிடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
 

என்ன எதிர் விளைவுகள் வரும் என்று கவலைப்படாமல் கமல்ஹாசன் 92லேயே இந்த சமூகத்திற்காக குரல் கொடுத்தவர். அன்றிலிருந்து சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். இன்று இருக்கும் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகம், அவருடைய வீடு. அதனை வீடாக வைத்துக்கொண்டு நடிகராகவே இருந்தால் பிரதமர் மோடி வந்தால்கூட பார்த்துவிட்டு போவார். அந்த அளவுக்கு அந்தஸ்து, செல்வாக்கு உள்ளவர் தன்னுடைய வசதிகளை குறைத்துக்கொண்டு, மக்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதால்தான் தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கிறார். 

 

makkal needhi maiam Murali Appas


 

25 வருடத்திற்கு முன்பு இருந்த கிராம சபையை அதன் பயன்பாடு தெரியாமல் முடக்கி வைத்திருந்தார்கள். அதனை இப்போது கமல்ஹாசன்தான் மீண்டும் வெளியே கொண்டு வந்து, அதனை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்தார். கிராமங்களுக்கு அதிகாரம் போய் சேரவேண்டும் என்று நினைப்பவரை பார்த்து ஊராட்சி தெரியுமா? நகராட்சி தெரியுமா என்று முதலமைச்சர் கேட்கிறார். 
 

2021 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் பலத்தை பார்த்து அச்சத்தில் இருப்பதால் முதலமைச்சர் இப்படி பேசியிருக்கலாம். திமுக பலவீனமாக இருப்பதால்தான் இப்போதுவரை அவர்கள் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தல் அவ்வளவு சுலபமாக அவர்களுக்கு இருக்காது. 2021ல் எல்லா பிரச்சனைகளையும் முன்வைத்து யார் முதல் அமைச்சர் என்ற கேள்விதான் முதலில் நிற்கும். அப்படி வரிசைக் கட்டி நிற்கும்போது மக்களின் எண்ணங்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 


 

 

பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்து, மூன்று மாதத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஓட்டுபோடுகிறார்கள் என்றால் மக்கள் இவர்களைப் பார்த்து மயங்கிப்போய் போடவில்லை. அவர்கள் மனம் மாறுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கிறது. நாளை நல்லாட்சி வரவேண்டும் என்று நினைத்தால் மீண்டும் மாற்றி ஓட்டுப்போடுவார்கள். 
 

தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டாலே எந்த தேர்தல் என்றாலும் சந்திக்க வேண்டும் என்று அதிமுக மட்டுமல்ல மற்ற கட்சிகளும் உங்கள் கட்சியைப் பார்த்து கேட்கிறார்களே? 
 

பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தோம். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப்போகிறோம். இடைத்தேர்தல் லட்சணம் எப்படி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஆளும் கட்சியின் அத்துமீறலும், அதிகார துஷ்பிரயோகமும் நடக்கும் என்றார். பாராளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்கள். மூன்று மாதத்தில் எப்படி ஓட்டுக்கள் மாறும். எடப்பாடி பழனிசாமி மீது உள்ள அணுதாபத்தில் ஓட்டு போட்டார்களா? 
 

நாங்கள் கட்சியை தொடங்கி எங்கள் கட்டமைப்பு சரியாக அமைவதற்குள் தேர்தல் வந்துவிட்டது. இருப்பினும் நாங்கள் பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தோம். நாங்கள் பயந்திருந்தால் எப்படி நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்தித்திருப்போம். எங்கள் பலம் என்ன என்பது அவர்களைவிட எங்களுக்கு நன்றாகவே தெரியும். அடுத்து உள்ளாட்சித் தேர்தல், அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். 

 

rajini-kamal-eps



எங்களை பிரிக்க முடியாது என்று ரஜினியை குறிப்பிட்டு கமல் பேசியிருப்பது அரசியலுக்கும் பொருந்துமா? இருவரும் இணைந்து தேர்தலை சந்தித்தால் என்ன நடக்கும் என்று யூகங்கள் எழுகிறதே? 
 

இந்த யூகம்தான் எடப்பாடி பழனிசாமியை பதட்டமடைய வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவர்கள் இருவரும் 40 ஆண்டு காலமாக எந்தவித வேறுபாடும் இல்லாமல்தான் பழகினார்கள். அரசியலுக்கு கமல் வந்துவிட்டார். ரஜினி வரப்போகிறார். இருவருக்கும் தெளிவான புரிதல் இருக்கிறது. தெளிவாக அகற்றப்பட வேண்டிய ஆட்சி, கட்சி எது என்ற புரிதலோடு இருக்கிறார்கள். 
 

அரசியலில் எப்போதும் வியூகங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை என்பதால் சில விசயங்களுக்கு பதில் அளிக்காமல் இருக்கிறார். அவரது திட்டங்கள் அரசியலுக்கு வரும்போது தெரியலாம். எங்களைப் பொருத்தவரை ஆதரவை கேட்பதாக சொல்லியிருக்கிறார் எங்கள் தலைவர். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று இருவருக்கும் நன்றாகவே தெரியும். 

 

Vijayan




 

 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.