Skip to main content

பாமகவை குஷிபடுத்தும் அதிமுக... செக் வைத்த திமுக...கடும் போட்டி!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த 18 தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஓட்டு பர்ச்சேஸிங்கிற்காக ஆட்சி மேலிடம் அனுப்பிய பணத்தை அ.தி.மு.க. நிர்வாகிகளே அமுக்கியதால் 9 தொகுதிகளில் இரட்டை இலை சேதாரமானது. அதுபோல் ஒரு விபரீதம் விக்கிரவாண்டியில் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, தனது விசுவாசிகளை மட்டுமே பணப்பட்டுவாடாவிற்கு களம் இறக்கியிருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். தனது குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட சோகங்களுக்கு நடுவிலும் தொகுதியை நான்கு திசைகளாகப் பிரித்து, திசைக்கொரு நம்பிக்கை படையை அனுப்பி, வாக்காளர்களை குளிர்வித்து வருகிறார் அமைச்சர்.

 

dmk



ஆனாலும் ஆளும் கட்சியின் கரன்சிப் பாய்ச்சலை பறக்கும் படை தீவிரமாக கண்காணித்து, அ.தி.மு.க. கி.செ. ராஜாராம் என்பவரை பணமும் கையுமாக அமுக்கியது. இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியான அமைச்சர் சண்முகம், முதல்வர் எடப்பாடியைத் தொடர்புகொண்டிருக்கிறார். "சும்மா கணக்கு காட்றதுக்காக பிடிச்சிருக்காங்க, இனிமே இப்படி நடக்காது' என சிக்னல் போட்டதும், கூடுதல் விறுவிறுப்புடன் விக்கிரவாண்டியைச் சுற்றுகிறது அமைச்சர் படை. இதனால் மகிழ்ச்சியுடன் தொகுதியைச் சுற்றி வருகிறார் இலை வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்.

இதன் எஃபெக்ட்தான் 15 மந்திரிகள் முகாமிட்டு பணிகளை பரபரப்பாக முடுக்கிவிட்டுள்ளனர். செங்கோட்டையன், பெஞ்சமின், சம்பத், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பா.ம.க. வாக்குகளை முழுமையாகப் பெற அக்கட்சியினரை மகிழ்ச்சிக் கடலில் குளிப்பாட்டி வருகின்றனர். அதேபோல் தே.மு.தி.க. வாக்குகளை முழுமையாகப் பெற "வேலை'கள் நடந்து வருகின்றன. அடுத்தகட்டமாக தலித் வாக்குகளைப் பெற அதிரடி காரியங்கள் ஆரம்பமாகிவிட்டன.


"நம்ம கேண்டிடேட் நாமினேஷன் தாக்கல் பண்ணி முடியட்டும், அதுக்குப் பிறகு எல்லாம் நல்லபடியா நடக்கும்' என உ.பி.க்களுக்கு மா.செ. பொன்முடி தெம்பூட்டியிருக்கிறார் என்பதை கடந்த அக்.02-04 தேதியிட்ட நக்கீரன் இதழில் எழுதியிருந்தோம். நாம் சொன்னது போலவே நல்ல காரியங்கள் நடந்துள்ளதால், தி.மு.க.வின் தேர்தல் காரியாலயங்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. வி.சி.க. திருமா, சி.பி.எம். ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. முத்தரசன், எம்.பி. கனிமொழி உட்பட முன்னணித் தலைவர்கள் தொகுதியை வலம் வந்து, உதயசூரியன் வேட்பாளர் ந.புகழேந்திக்காக வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறார்கள். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், மத்திய அரசுக்கு ஆமாம் போடும் இந்த ஆட்சியை விரட்ட இந்த தேர்தல் ஒரு முன்னோட்டம் என்பதை எல்லா மேடைகளிலும் குறிப்பிட்டார் ஜி.ராம கிருஷ்ணன்.

"இத்தொகுதியின் இடைத்தேர்தல் என்பது நிச்சயதார்த்தம் மாதிரி. இது நல்லபடியாக நடந்து முடிந்தால், அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தல் என்னும் திருமணம் சீரும் சிறப்புமாக நடக்கும், ஐந்து ஆண்டுகள் மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்''’என டச்சிங்காக பேசி அசத்துகிறார் தி.மு.க.வின் எ.வ.வேலு.

நாம் தமிழர் கட்சியின் கந்தசாமிக்காக பிரச்சார மேடைகளில் பேசி வருகிறார் சீமான். தொகுதியில் வன்னியர் சமுதாயம் அதிகம் என்பதால், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம், இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நினைவுமண்டபம், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இதற்கு கடும் பதிலடிகளுடன் அறிக்கை கொடுத்தார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். "தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தி.மு.க.வுக்கு வன்னியர் சமுதாயம் கண்ணுக்குத் தெரிகிறதா' என டாக்டர் தந்த அறிக்கைக்கு, அவரது உறவினரான காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் தொடங்கி பலரும் பதில்களை அளித்துவருகிறார்கள். இது விக்கிரவாண்டி தேர்தல் களத்தை விறுவிறுப் பாக்கியுள்ளது. அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் கடும் போட்டி நிலவுகிறது களத்தில்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.