Skip to main content

"ஜெர்சியில தமிழ்நாடுன்னு பார்த்தாலே பயப்படுவாங்க..." - வட இந்தியாவை மிரள வைத்த தமிழர்!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020


உடல் வளர்த்தோர் உயிர் வளர்த்தோர் என்ற பழமொழி நம்மிடம் உள்ளது. உடலை வலிமைப்படுத்துதல், ஆரோக்கியமாக வைத்திருத்தல் முதலியற்றில் முனைப்பு கொண்ட சமூகமாகவே நாம் இதுவரை இருந்து வந்திருக்கிறமோம். பழங்காலத்தில் இளவட்ட கல்லை தூக்குவதில் ஆரம்பித்த அந்த முறை தற்போது பாடி பில்டிங் வரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. இது வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை அனைவரும் தேடி போகின்ற ஒரு துறையாக அமைந்திருக்கின்றது.  அந்த துறையில் என்ன இருக்கும், எந்த மாதிரியான சாதக பாதகங்கள் இருக்கின்றது என்பதை தற்போது அந்த துறையில் சாதித்து வரும் மணிகண்டன் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.
 

xfg



உங்களை பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்திகளை கூறுங்கள்?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். 12ம் வகுப்பு படித்து முடித்த உடனே நான் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்தேன். எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக ஜிம்முக்கு சென்றது அப்படியே பழகி விட்டது. அப்போ நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன். அதனால் ஜிம்முக்கு தொடர்ந்து சென்றேன். அதுவே பேஷனாகவும், வாழ்க்கையாகவும் தற்போது மாறிவிட்டது. 12ம் வகுப்பு படிக்கும் போது ஆரம்பித்தது தற்போது என்னுடைய பேஷனாகவே மாறிவிட்டது.  

12ம் வகுப்பு படிக்கும் போது நீங்க யோசித்து பார்த்தீர்களா, இரண்டு முறை மிஸ்டர் வேல்டு பட்டத்தை வாங்குவோம் என்று?

உடம்பை குறைப்பேன் என்று கூட யோசித்து பார்த்ததில்லை, உடம்பை குறைப்பதை மனதில் வைத்துத்தான் நான் ஜிம்மிற்கு முதலில் சென்றேன். 10 வருடத்துக்கு முன்பு இப்போது இருக்கின்ற வசதிகள் எல்லாம் அப்போது கிடையாது. உடற்பயிற்சி சார்ந்த பொருட்களும் அதிகம் இருக்காது, கோச் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் நிறைய கோச் இருக்கிறார்கள். அப்போது இதனை நான் ஆரம்பிக்கின்ற போது குறிப்பிட்டு சொல்லும் படியான பயிற்சியாளர்கள் என்று யாரும் கிடையாது. நானே ஓடுவேன், அடுத்தவர்களை பார்த்துத்தான் பெரும்பாலும் நான் உடர்பயிற்சிகளை செய்வேன். வேல்டு சாம்பியன் ஆவேன் என்று நான் கனவிலும் நினைத்தில்லை.  

ஒரு சராசரி மனிதனாக இருந்த உங்களிடம் வேல்டு சாம்பியன் ஆக வேண்டும் என்ற எண்ணம் உருவாகுவதற்கு உந்து சக்தியாக எது இருந்தது? 

நான் சின்ன வயசிலேயே நிறைய கஷ்டங்களை நேரில் பார்த்திருக்கிறேன். அதுதான் எனக்கு உந்து சக்தியாக இருந்ததாக நினைக்கின்றேன். 12ம் வகுப்பு படிக்கும் போதே அதெல்லாம் என் வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. நிறைய வேலைகளை அந்த வயதிலேயே பார்த்திருக்கிறேன்.

என்ன வேலை எல்லாம் பார்த்திருக்கிறீர்கள்?

நிறைய வேலைகளை பார்த்திருக்கிறேன், டோர் டெலிவரி வேலை செய்திருக்கிறேன். கொரியர் டெலிவரி வேலை செய்திருக்கிறேன். ஹோட்டல்களில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்திருக்கிறேன். எல்லா வேலைகளையும் செய்திருக்கிறேன். நிறைய வாய்ப்புக்கள் இருந்தால் ஒன்று மாற்றி ஒன்று மனது செல்லும். ஆனால் நான் இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்து வைத்திருந்தேன். 

நான் ஒரு கிரிக்கெட் பிளேயர் ஆக வேண்டும் என்றால் ஒரு பேட் பால் வாங்கினால் போதுமானது, ஹாக்கி விளையாட வேண்டும் என்று முடிவு செய்தால் ஹாக்கி மட்டை வாங்கினால் போதுமானது. ஆனால் உங்களுடைய வேலையில் இந்த மாதிரியான அம்சங்கள் இருக்காது. இதற்காக எப்படி பயிற்சி எடுத்தீர்கள், உங்களின் பயிற்சியின் அனுபவம் என்ன? 

ஜிம்முக்கு போனால் போதும், ஆனால் அதற்கு பின்னால் இருக்கின்ற செலவுகள் மிக அதிகம். மற்ற எந்த விளையாட்டை காட்டிலும் பாடி பில்டிங் அதிகம் செலவாகின்ற ஒரு விளையாட்டு. கிரிக்கெட், ஹாக்கி என்றால் அவர்களுக்கு ஆகும் செலவு என்ற அந்த பொருட்களை வாங்குவதற்கு ஆகின்ற செலவுதான். ஆனால், இதற்கு பொருட்களை விட உணவுக்கு, பராமரிப்புக்கு ஆகின்ற செலவு மிக அதிகம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் இதில் செலவு செய்ய வேண்டி வரும். நான் பெட் கட்டியே சொல்வேன், மற்ற எந்த விளையாட்டை காட்டிலும் இதில் செலவு என்பது மிக அதிகம். நான் பல்வேறு ஸ்போர்ட்ஸ் பிளேயர்களை நேரில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவர்களை விட இதில் அதிகப்படியான செலவு ஆகும். இது இந்த ஸ்போர்ட்ஸின் ஒரு பகுதியாகவே நான் நினைக்கிறேன்.  

ஒரு கிரிக்கெட் பிளேயர் என்றால் அவர் கிரிக்கெட் அகாடமி வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அது இல்லாமலேயே அவரால் அந்த விளையாட்டில் சாதிக்க முடியும். ஆனால் பாடி பில்டிங்கில் மட்டும் எதற்காக ஜிம் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படகின்றது, அந்த குறைபாட்டிற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள், அரசாங்கம் அதை முறையாக அங்கீகரிக்கவில்லை என்று கருதுகிறீர்களா? 

இதை இரண்டு விதமாகவும் சொல்லாம், ஒரு கிரிக்கெட் பிளேயர் என்று வந்துவிட்டால் அவர்களுக்கு பேட்டில் இருந்து ஹெல்மெட் வரை அனைத்திற்கும் ஸ்பான்ஸர் இருக்கும். ஆனால் இதில் அப்படியான ஸ்பான்ஸ்ர் கிடைப்பது ரொம்ப கடினமான ஒரு விஷயம். எனக்கே பார்த்தீர்கள் என்றால், நான் இரண்டாவது முறை உலக சாம்பியன் ஷிப் போட்டியில் வென்ற பிறகும் கூட எனக்கு ஒரு ஸ்பான்ஸர் கூட கிடைக்கவில்லை. நிறைய ஸ்போர்ஸில் உள்ள புகழ்பெற்றவர்கலின் பெயரை சொல்லும் போது அவர்களை எல்லாம் உங்களுக்கு தெரியும். ஆனால் என்னை உங்களுக்கு தெரியுமா? தெரியாது, ஏனென்றால் மீடியா வெளிச்சம் இதற்கு குறைவாக இருக்கும். அதையும் தாண்டி 2017ம் ஆண்டு இந்திய அரசின் சார்பாக கலந்துகொண்டுதான் வெற்றி பெற்றேன். இருந்தாலும் நிலைமை இதுவாகத்தான் இருக்கின்றது. 

இந்திய அளவில் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு இருப்பீர்கள், வட மாநிலத்தவர்களை விட உடல் அளவில் சற்று பலவீனமாக தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் இருப்பார்கள் என்ற மித் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

நீங்கள் சொல்வது போல அது பொய்யான ஒன்றுதான். எனக்கு தென் மாநிலங்களை தேர்ந்தவர்களில் இந்த ஸ்போர்ட்ஸில் இருப்பவர்களை நிறைய பேரை தெரியும். அவர்கள் மிகவும் வலிமையானவர்கள் தான். குறிப்பாக தமிழகத்தில் இருந்து தற்போது உள்ள அனைவரும் உடல் அளவில் சிறப்பானவர்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் இருந்து வந்திருப்பதாக சொன்னாலே மிரட்டு போவார்கள், தமிழக ஜெர்சி அவர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் ஒன்றாகவே இன்று இருக்கிறது. அது நமக்கு பிளஸ் பாயிண்டாகவே இருக்கிறது. 

 


 

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.

Next Story

“விளையாட்டுத்துறையில் தலைசிறந்த  மாநிலமாக தமிழகம் உள்ளது”-  அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் பள்ளியில்  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு  மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, திருக்குறள், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில்  வெற்றி பெற்ற 30 மாணவ-மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

இந்த விழாவில் உணவு மற்றும் வழங்கல்துறை  அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின்  சென்னையில் 180 உலக நாடுகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார். அதே போல இளைஞர்  நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தேசிய,  மாநில ஆசிய விளயாட்டு போட்டி மற்றும் பல்கலைக்கழக  விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி  பெற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கி  சிறப்பித்து வருகிறார். இன்று சென்னையில் தொடங்கும் கேலோ  இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறேன்” என்றார்.

 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

இறுதியாக பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசும்போது, “சென்னை, மதுரை, திருச்சி, கோவை  ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற  உள்ளது. தமிழகத்தில் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டுத்துறைக்கும்,  முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விளையாட்டுத்துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கால்பந்து, கபடி போட்டிகளில் மிக சிறந்த மாணவர்கள் உள்ளனர். விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள  மாணவர்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று நமது  மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை  வகித்தார். மாவட்ட எஸ்பி. பிரதீப், பழனி சட்டமன்ற உறுப்பினரும்,  கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகர மேயர்  இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணைச்  செயலாளர் ஜெயன், திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர்   நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்களான  ராஜேந்திரகுமார், ஜானகிராமன்,  சந்திரசேகர் உள்பட கட்சிப்பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.