Skip to main content

சொகுசு பங்களா! துணை நடிகைகளை அடைத்து வைத்துச் சித்ரவதை! சிக்கிய ஜெகஜால சந்துருஜி!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

police investigation

 

கிழக்கு கடற்கரை சாலையைச் சீரழித்ததில் சில ரெசார்ட்டுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புதுச்சேரி - விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியான கோட்டக்குப்பம் பகுதியில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வரும் சென்னை சுற்றுலாவாசிகளும், வார இறுதி நாட்களில் வரும் பெங்களூர் சுற்றுலாப் பயணிகளும் பொழுது போக்குவதற்காக இத்தகைய ரிசார்ட்டுகள் நிறைய உள்ளன. இங்கு புதுச்சேரி முத்தையால்பேட்டையைச் சேர்ந்த சந்துருஜி என்பவர் கோட்டக் குப்பம் பகுதியிலுள்ள தந்திராயன் குப்பத்தில் புதியதாக ஆடம்பரமான சொகுசு விடுதியைக் கட்டியுள்ளார்.

 

கரோனா ஊரடங்கு காலத்திலும் உள்ளூர் காக்கிகளுக்கு மாமூல் கொடுத்து விட்டு இந்த சொகுசு விடுதியில் சந்துருஜி தொடர்ந்து சினிமா துணை நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். பியூட்டிஷியன், மசாஜ் டிரெயினிங்கோடு சம்பளமும் உண்டு என்று சென்னையில் இருந்து 2 துணை நடிகைகளை அழைத்து வந்து, சாப்பாடு கூட சரியாகக் கொடுக்காமல் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். ஊரடங்கிலும் சொகுசு விடுதி இயங்குகிறதே என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகப்படாமல் இருக்க, கட்டுமான வேலைகள் நடப்பதுபோன்று ஆட்களை வைத்து பாவனைகளை செய்து வந்துள்ளார்.

 

ஒரு நாள் அந்த சொகுசு விடுதியில் இருந்து ஒரு பெண் சத்தம் போட்டுக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து உடனடியாக காவல் துறை கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் கூறியுள்ளனர். அதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், கடந்த 17-ஆம் தேதி கோட்டக் குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ.க்கள் பாலமுருகன், முத்துலட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் திடீரென அந்த விடுதியை ரவுண்டு கட்டி சோதனையிட்டபோது ஐந்து பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். விடுதியின் உரிமையாளர் சந்துருஜி, விஜய்குமார், வாட்ச்மேனாக பணிபுரிந்த டெல்லியைச் சேர்ந்த அனில் ஜோசப் ஆகிய மூவரை கைது செய்தனர்.

 

மீட்கப்பட்ட இரண்டு துணை நடிகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து சென்னை காப்பகத்தில் சேர்க்க முயற்சிக்க, அங்கு கரோனாவை காரணம் காட்டி நிர்வாகிகள் மறுக்க, திருச்சியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். அதேசமயம் துணை நடிகைகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உமாசங்கரை தேட, அதைக் கேள்விப் பட்ட அவர் காரைக்காலில் இருந்தபடியே தலைமறைவாகியுள்ளார்.

 

சந்துருஜி சிறையில் இருப்பதாகவே நினைத்திருந்த புதுச்சேரி மக்களுக்கு, இந்த கைதின்போதுதான் அவர் ஜாமீனில் வந்திருக்கும் விபரமே தெரியவந்திருக்கிறது.

 

police investigation

 

2011, 2012 ஆண்டுகளில் தீபாவளி சீட்டு, அமாவாசை சீட்டு என பல சீட்டுகள் நடத்தி மூவாயிரம் பேரிடம் மாதா மாதம் பணம் வசூலித்து வந்திருக்கிறார் சந்துரு. ஒரு கட்டத்தில் சீட்டுகளுக்குண்டான பணத்தைத் திருப்பி தந்ததில்லையாம். இந்த சீட்டு மோசடியில் மட்டும் சுமார் 50 லட்சம் ஏமாற்றியிருக்கிறார். இதையடுத்து சில ஆண்டுகளில் திடீரென அபார வளர்ச்சியடைந்த சந்துருஜிக்கு 3 ஹோட்டல்கள், பி.எம்.டபிள்யு கார், ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களில் எஸ்டேட்டுகள் என்று ஏகப்பட்ட சொத்துகள்.

 

ஏ.டி.எம். மிஷன்களில் ஸ்கிம்மர் மிஷின்களை பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடி போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து அதன் மூலமும், ஸ்வைப் மெஷின்கள் மூலமும் புதுச்சேரி, தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் வசிக்கும் பலரின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல கோடி திருடியவர் என்று கடந்த 2018ஆம் ஆண்டு போலிசில் சிக்கியபோதுதான், அவரின் அபார வளர்ச்சியின் விபரம் தெரிய வந்தது.

 

ஏ.டி.எம். கொள்ளை வழக்கிலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிணையில் வெளியே வந்த சந்துருஜி, கோட்டக்குப்பம் பகுதியில் சொகுசு பங்களா கட்டி புதிய தொழிலாக பாலியல் தொழிலைத் தொடங்கியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் காசிலிங்கத்தின் மகன் உமாசங்கரும் சந்துருஜியும் நண்பர்கள். உமாசங்கர் மீதும் வழக்குகள் உள்ளன. உமாசங்கர் மூலம் சென்னையிலிருந்து சினிமா துணை நடிகைகளை அழைத்து வந்து பாலியல் தொழில் செய்துள்ளார். அதோடு புதுச்சேரியைச் சேர்ந்த பெண்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் நாம் பேசியபோது, "ஊரடங்கு காலத்திய விதிகளை மீறி ‘ஸ்பா’ என்ற பெயரில் விபச்சாரம் போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் இருக்கக் கிராம ஊராட்சிகள் மற்றும் காவல்துறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. விதிமீறல்கள் எதுவும் நடைபெறவில்லை. அப்படியும் ரகசியமாக அந்த லாட்ஜில் நடந்த விபச்சாரம் குறித்து தகவல் கிடைத்ததால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள உமாசங்கரை விரைவில் கைது செய்து விடுவோம்'' என்றார் உறுதியாக.

 

http://onelink.to/nknapp

 

ஆனாலும், ’சட்டத்தின் ஓட்டை குற்றவாளிகளுக்கு எப்பவுமே சாதகமாகின்றன. இந்தச் சாதகம் சமூகத்துக்குத்தான் பாதகமாகின்றன’ என்று கோட்டக்குப்பம் பகுதியினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.