Skip to main content

தமிழக அரசு ராஜாவை தப்பட்டை கலைஞர் என்றோ, கொம்புத் தப்பட்டை கலைஞர் என்றோ கூறுவது தவறு...- மணிமாறன்

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

கலைத்துறையில் சிறப்பான பங்காற்றுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படாத நிலையில் 2011 முதல் 2018 வரையிலான 7 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பிப்ரவரி 28 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. 201 விருதுகள் அடங்கிய அந்தப் பட்டியலில் சினிமா மற்றுமின்றி பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர். முதல் முறையாக பறையிசைக் கலைஞரான பனையூர் ராஜா அவர்களுக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் விருதுபட்டியலில் அவரது பெயரை பறையாட்ட கலைஞர் என குறிப்பிடவில்லை என்ற சர்சைகள் எழுந்தன. இதுகுறித்து பிரபல பறையிசைக் கலைஞரும் புத்தர் கலைக்குழுவின் நிறுவனருமான மணிமாறனிடம் பேசினோம். அந்த உரையாடலின் தொகுப்பு.

 

thappattam

 

“பனையூர் ராஜா மட்டுமில்லாமல், மதுரையைச் சேர்ந்த மரக்கால் கட்டை கலைஞர் கோவிந்தராஜ், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பம்பைமேலக் கலைஞர் அய்யா.ராஜநிதி ஆகிய கலைஞர்களும் கலைமாமணி விருதை பெறவிருக்கிறார்கள். இந்த நிகழ்வு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, தமிழக அரசுக்கு எனது நன்றிகள். ஆனாலும், இதைக் கொண்டாட முடியவில்லை. காரணம் பறையிசைக் கலைஞராக இருக்கக்கூடிய ராஜாவுக்கு, அவர் சார்ந்தப் பறையிசைக் என்றப் பெயரில் இல்லாமல் கொம்புத் தப்பட்டை என்றப் பெயரில் தமிழக அரசு விருது அறிவித்திருக்கிறது. மிருதங்கம், கடம், தவில் போன்ற இசைக் கலைஞர்கள் அவரவர் சார்ந்த துறைப்பெயர்களில் விருது பெறும்போது, ராஜா மட்டும் பறையிசைப் பெயரில் இல்லாமல் வேறு பெயரில் விருது பெறுவது அவர் சார்ந்தத் துறைக்கு பெரியப் பின்னடைவாகத்தான் பார்க்கிறேன். கொம்பு என்பது ஊதுகுழல் இசைக் கருவி, தப்பட்டையென்பது பறை போலவே வட்டவடிவிலான இசைக்கருவிதான், ஆனாலும் அதனுடைய நாதம், சப்தம், அடிக்கிற முறைகள் என்பது வேறு, பறையின் அடிமுறைகள் வேறு. அனைத்து தோல் கருவிகளுக்கும் தாய் கருவி பறை, தாய் சொல்லும் பறை என்பதுதான். இருந்தாலும் பறையிசை மற்றக் கருவிகளிலிருந்து நுட்பமான முறையில் வேறுபட்டுள்ளது. எனவே ராஜாவை தப்பட்டை கலைஞர் என்றோ, கொம்புத் தப்பட்டை கலைஞர் என்றோ கூறுவது தவறு. பறைக்கலைஞர் என்றுதான் ராஜா அறிவிக்கப்பட வேண்டும். தமிழக அரசு எந்த நோக்கத்தில் பறையிசையை கொம்பு தப்பட்டை என அறிவித்தார்கள் என தெரியவில்லை. இப்போது எங்கள் கோரிக்கையெல்லாம் அவருக்கு விருதுடன் வழங்கப்படுகிற சான்றிதழிலாவது பறையிசையென்றோ தப்பாட்டம் என்றோக் குறிப்பிட வேண்டும் என்பதே. 
 

இன்னோன்று, ஒரே ஒரு பறையிசைக் கலைஞருக்கு மட்டும்தான் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2011 முதல் 2018 வரையுள்ள 8 ஆண்டுகளுக்கான 201 விருதுகளில் 51 விருதுகள் திரைத்துறையைச் சார்ந்தவர்கள், 20 குரலிசைக் கலைஞர்கள், 13 பேர் பரதநாட்டியம், 5 பேர் பரத ஆசிரியர்கள், 6 நாதஸ்வரக் கலைஞர்கள், 5  புல்லாங்குழல் இசைக் கலைஞர்கள், 4 வையிலின் கலைஞர்கள் ஆகியோருக்கும், சிலதுறைகளில் தலா ஒருவருக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. மத்திய அரசு அறிவித்திருக்கும்  ‘பால சரஸ்வதி’ விருதும்கூட இரண்டு பரதக் கலைஞர்களுக்கும், ஒரு பரத ஆசிரியருக்கும் வழங்கப்படுகிறது. வரலாற்றில் முதல்முறையாக பறையிசைக்கலைஞருக்கு விருது வழங்கப்படுகிறது.ஆயினும் மற்றக் கலைஞர்களோடு ஒப்பிடும்போது பறைக் கலைஞர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனிலையிலும், இத்தனையாண்டுகாலம் பறைக்கலைஞர்களுக்கு விருதுகளேதும் வழங்கப்படாத நிலையிலும் தற்போது ஒரேயொருக் கலைஞருக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தையளிக்கிறது.  மொத்தமாக சிலருக்கு கலைமாமணி விருது வழங்கப்படவேண்டும் என்பதே எங்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது. அதற்காக நாங்கள், திண்டுக்கல் பறைக்கலைஞர்  M.S.V தங்கவேல், மதுரை வேலு, அலங்காநல்லூர் மறைந்த கலைஞர் ஆறுமுகம், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜான் பீட்டர், எனது வாத்தியார் மறைந்த சிவகங்கை அழகர்சாமி போன்றவர்களின் பெயர்களை முன்மொழிந்தோம்.  ஐந்து பரத கலைஞர்களுக்கு மொத்தமாக விருது வழங்கப்படும்போது, ஏன் பறையாட்ட கலைஞர்களில் சிலருக்கு இந்த விருதை வழங்கியிருக்கக்கூடாது? வழங்கப்பட்ட ஒருவருக்கும் பறையாட்ட அல்லது தப்பாட்ட கலைஞர் என்றில்லாமல் கொம்புத் தப்பட்டையென்றப் பெயரில் கொடுப்பதற்கான அவசியம் என்ன?

 

manimaran


 

மாவட்டம்தோறும் கலைபண்பாட்டுத் துறைச் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனது அடையாள அட்டையில் பறையாட்டக் கலைஞர் என்றுதான் உள்ளது. இப்போது விருது வாங்கியிருக்கிற ராஜா அவர்களின் அடையாள அட்டையிலும் தப்பாட்டக் கலைஞர் என்றுதான் பதிவாகியுள்ளது. 2004ல் கலை பண்பாட்டுத் துறைச் சார்பாக கலை வளர்மணி விருது ராஜாவிற்கு வழங்கப்பட்டது, அதிலும் தப்பாட்டக்கலைஞர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதுதான். அதில் கொம்பு தப்பட்டை என்று குறிப்பிடப்படவில்லை எனும்போது கலைமாமணி விருதில் மட்டும் ஏன் இந்த மாற்றம் என்பது புரியவில்லை. மேடைகள்தோறும் பறையிசை கொண்டாட்டத்துக்கான இசை, துக்கத்துக்கான இசையில்லை. அது அனைத்து மக்களுக்குமான இசை, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான இசையில்லை என்பதை சொல்லிக்கொண்டே இருந்தாலும் மக்களிடையே பறைப் பற்றிய சாதியப் பார்வை மாறமல் இருந்தது. சமீபமாகத்தான் பறையிசை எழுச்சிப்பெற்றுவருகிறது. இப்போது என்னிடம் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பறையாட்டம் பயில வருகிறார்கள். தான் கற்றுகொள்வது மட்டுமில்லாமல் ஒரு நிகழ்த்துக் கலைஞராகவும் மாறவேண்டும் என்கிற அளவுக்கு ஆர்வம் கொண்டுள்ளனர்.  அவர்களிடம் நான் சொல்வதெல்லாம், எப்படி ஒரு மிருதங்கம் வாசிப்பவர் தன்னை மிருதங்க கலைஞர் என்றும், பரதம் ஆடுகிறவர் தன்னை பரதக் கலைஞர் என்றும் கூறிக்கொள்கிறாரோ, அதுபோல் நாமும் பறையிசைக் கலைஞன் என சொல்லிக்கொள்ள வேண்டும் என்பதெ. இத்தகைய சூழ்லில் அரசின் அதிகாரப்பூர்வமான சான்றிதழில் பறையாட்டத்திற்கு பதிலாக கொம்பு தப்பட்டையென மாற்றி குறிப்பிடப்படுவது இந்த துறைக்கே பெரிய பின்னடைவு". இவ்வாறு மணிமாறன் அவர்கள் கூறினார்.


 

 

 

   
 

Next Story

ரத்தான கல்லூரி கலை நிகழ்ச்சி; மொட்டை மாடியில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 college art show canclelled students protest by sitting on the terrace

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'நியூ காலேஜ்' கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்த மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆண்டுதோறும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள  நியூ காலேஜ் கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திட்டமிட்டபடி வழக்கம்போல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென்று கல்லூரி நிர்வாகம் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நியூ காலேஜ் மாணவர்கள் மொட்டை மாடி பகுதியில் அமர்ந்து  கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் மாணவர் ஒருவர் ஆபத்து உணராமல் மொட்டை மாடியில் ஆபத்தான பகுதியில் அமர்ந்து போராட்டம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Next Story

உயிரைப் பறிக்குமா 'கார்பா' நடனம்?; அதிர்ச்சி தரும் தகவல்

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

'Garpa' dance can take life; Shocking information

 

நவராத்திரி விழா என்றாலே அதிகம்  களைகட்டுவது வடமாநிலங்கள் தான். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி விழாக்களில் முக்கியமாக இடம் பெறுவது 'கார்பா' நடனம்.

 

குஜராத்தை பிறப்பிடமாகக் கொண்ட கார்பா நடனம் விடிய விடிய ஆடும் ஒரு வகை நடனமாகும். பாரம்பரிய ஆடைகளுடன் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இசைக்கு ஏற்ப இடைவிடாமல் விடிய விடிய நடனமாடுவர். இந்த நிகழ்ச்சிக்கு குஜராத் மாநிலத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் குஜராத்தில் பரோடா மாவட்டத்தில் 'கார்பா' நடனம் ஆடிய 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்த 10 பேரில் 13 வயது சிறுவன் தவிர மற்ற ஒன்பது பேரும் நடுத்தர வயது கொண்டோர் மற்றும் இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நவராத்திரி விழா தொடங்கிய முதல் ஆறு நாட்களில் மாரடைப்பு தொடர்பாக 521 அழைப்புகளும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ சேவைக்காக 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என 609 அழைப்புகளும் வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு  'கார்பா' நிகழ்ச்சியில் மூன்று பேர் மாரடைப்பால்  உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.