Skip to main content

20 வருடத்திற்கு வேலை இல்லை...ரயில்வே சதி அம்பலம்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

திருச்சி பொன்மலை ரயில்வே காலியிடங்களில் வட இந்தியர்களை நிரப்பு வதற்கெதிராக மறியல் போராட்டம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்காக மாறியது. அந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 ஹெல்பர் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வு முடிவின்படி, புதிதாக நியமிக்கப்பட்ட 528 பேரில் 475 பேர் வெளிமாநிலத்தவர் என்கிற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 53 பேர் மட்டுமே புதிதாக பணியில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள திருச்சி ரயில்வே கோட்ட எம்.பி.க்கள் குழுத் தலைவர் திருச்சி சிவா, "நியமனம் தொடர்பாக குழுவுக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை'' என்கிறார்.

 

railway



இரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் நம்மிடம், "இரயில்வே அப்ரண்டிஸ் தேர்வில் பொன்மலையிலும் போத்தனூரிலும் சேர்த்து மொத்தமாக 813 பழகுனர் இடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. தமிழகத்திலிருந்து பெரிதாக யாருமே விண்ணப்பிக்கவில்லை. இந்த பயிற்சியின்போது தரப்படும் உதவித்தொகை மிகவும் குறைவு என்பதாலும், பயிற்சி மட்டுமே என்பதாலும் தமிழர்கள் ஆர்வம்காட்டவில்லை. இந்த வாய்ப்பு களுக்கு வடஇந்தியர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுவது உண்மைதான்'' என்கின்றனர்.

 

politicians



வைகோ தன்னுடைய அறிக்கையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் ரயில்வே பணிகளைப் பெற்று இருப்பதைக் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் நம்மிடம், "இந்த ரயில்வே நிறுவன விதியில் விளம்பரம் என்கிற தலைப்பில் விதி எண் 110-ல் 4,600 ரூபாய் ஊதியத்திற்கும், அதற்கு கீழுள்ள பணியாளர் தேர்வுக்கும் அந்தந்த பிராந்தியத்தில் விளம்பரம் வெளியிட வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. தொடர்புடைய பிராந்தியத்தில் போதுமானோர் விண்ணப்பிக்கவில்லை என்றால் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற பிராந்திய ரயில்வே வாரியத்தில் வெளியிடலாம்.


ஆனால் ரயில்வே வாரியம் இந்த விதியைப் பின்பற்றாமல் நாடு முழுவதும் விளம்பரம் வெளியிட்டதாலே பிற மாநிலத்தார் தெற்கு ரயில்வே வாரியத்தில் சேருவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது கடைநிலை ஊழியர்களாக நியமனம் செய்ய 2393 முன்னாள் ராணுவத்தினரை சென்னை ரயில்வே தேர்வாணையம் தேர்வு செய்திருக்கிறது. இவர்கள் மாதாந்திர தொகுப்பு ஊதியம் பெறும் ஒப்பந்த தொழிலாளர்கள். இதனால் இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு தெற்கு ரயில்வேயில் இவர்கள் பணியாற்றுவார்கள்.

இதனால் நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கை குறையும். இளைஞர்களின் ரயில்வே பணிக்கான வாய்ப்பும் பறிபோகிறது. இந்தியாவிலேயே தமிழக கேரள பகுதிகள் அடங்கிய தெற்கு ரயில்வேயில்தான் மிக அதிக அளவு இந்த மாதிரியான ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனம் நடக்கிறது. ரயில்வே பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனத்தை எதிர்த்து மிகப் பெரிய அளவில், தெற்கு ரயில்வே முழுவதும் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் போராட்டத்தை முன்னெடுக்கும்'' என்கிறார்.

வட மாநிலங்களின் ஊடே ரயில்போகும்போது, ரிசர்வ் செய்த இருக்கை களில் அப்பகுதி மக்கள் ஏறியமர்ந்துகொண்டு இறங்கமறுப்பர் என்று பேச்சுண்டு. இப்போதோ தமிழர்களுக்கான ரயில்வே வேலைகளிலும் ஏறியமரத் தொடங்கிவிட்டனர் வடஇந்தியர்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்கு ரயில்வேயில் தமிழ்நாட்டுக்கு இடமில்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் சீட்டுகளைப் இறுகப் பற்றிக்கொள்வதிலே அக்கறை செலுத்தும் மாநில ஆட்சியாளர்கள், மக்களின் பிரச்சினைகள் குறித்து எப்போது யோசிக்கப் போகிறார்கள் என்பதுதான் விடைதெரியாத புதிர். 

Next Story

வாக்களிக்கத் தயாரான மக்கள்; ரயில்வேயின் திடீர் அறிவிப்பால் அவதி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Suffering from the sudden announcement of the railway for assam People ready to vote

இதற்கிடையில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக அஸ்ஸாமுக்கு மற்றும் அங்கிருந்து செல்லும் பல ரயில்களை ரத்துசெய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஸ்ஸாமின் 5 தொகுதிகளில் இன்று (26-04-24) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று (25-04-24) லும்டிங் பிரிவில் உள்ள ஜதிங்கா லம்பூர் மற்றும் நியூ ஹரங்காஜாவோ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்ட சம்பவத்தின் காரணமாக பல ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து ரத்து செய்ததாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்று வாழும் அஸ்ஸாமிய மக்கள் இன்று ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த மாநிலமான அஸ்ஸாம் நோக்கி வர வார இறுதி விடுமுறையில் கிளம்ப இருந்த நேரத்தில் நேற்று (25-04-24) மாலை திடீரென்று அஸ்ஸாம் செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரயில்வேயின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான நாளில் வாக்காளர்கள், வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்புக்கு பின்னால் பா.ஜ.க.வின் சதி இருப்பதாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.