Skip to main content

குரங்குக்கு இறுதிச்சடங்கு! ஒப்பாரி வைத்த பெண்கள்; மனிதநேய மலை கிராமவாசிகள்!!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வினின் பரிணாமக் கோட்பாடு; குரங்குகளை கடவுளின் வடிவமாகக் கருதுவது ஹிந்து மத கோட்பாடு; என்றாலும், குரங்குகளை நாம் ஒருபோதும் வீட்டு விலங்காகவோ, வளர்ப்புப் பிராணிகளாகவோ கருதுவதில்லை. மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் படங்களில் குரங்குகளின்  சேட்டைகளை நாம் ரசித்துப் பார்த்திருந்தாலும்கூட, அவற்றை நெருங்கிச் செல்வதில்லை.


 

Funeral for Monkey! Humanities Mountain Villagers !!

 

ஆனால், கிருஷ்ணகிரி அருகே ஒரு மலைக்கிராம மக்கள், குரங்குகளை தங்கள் குடும்பங்களில் ஓர் அங்கத்தினராகவே கருதி வருகின்றனர். அதாவது, இறந்த குரங்குக்கு மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய அத்தனை சடங்குகளையும் செய்து, சவ அடக்கம் செய்திருக்கின்றனர். கிராமவாசிகளின் இந்த மனிதநேய செயல்தான் சுற்றுவட்டாரங்களில் கடந்த இரு நாள்களாக வியப்பான பேச்சாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வனப்பகுதி அருகே, ஜீஞ்சம்பட்டி மலைக்கிராமம் உள்ளது. அடர்த்தியான காப்புக்காடு பகுதி என்பதால் குரங்குகள் நடமாட்டம் அதிகம். அடிக்கடி ஊருக்குள் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் குரங்குகள், பலருடைய வீடுகளின் சமையல்கட்டு வரைக்கும் அழையா விருந்தாளியாக நுழைந்து கைவரிசை காட்டி விடுகின்றன.
 

Funeral for Monkey! Humanities Mountain Villagers !!

 

யாராவது வீட்டை திறந்து போட்டுவிட்டு அரட்டை அடிக்க அக்கம்பக்கம் சென்றுவிட்டால் அவ்வளவுதான்... வந்து பார்த்தால் சமையலறையில் அண்டா குண்டாக்களில் இருந்த சோறு முதல் குழம்பு, பொரியல் வரை எல்லாமே சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டதுபோல் காலியாகியிருக்கும். பல நேரங்களில் குரங்குகள் சமையல் பாத்திரங்களையே களவாடி காப்புக்காட்டுக்குள் ஓடிவிடுவதும், அவை தின்ற பிறகு தூக்கி எறியும் பாத்திரங்களை எடுத்து வருவதும் மலைக்கிராம மக்களிடையே அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்தான். என்றாலும், வனக்கிராம மக்கள் குரங்குகளின் சேட்டைகளை ரசிக்கவே செய்கின்றனர்.

அவர்கள் குரங்குகளை துன்புறுத்துவதில்லை. சிறுவர்களும் குரங்குகளுக்கு பழங்கள், தண்ணீர் கொடுத்து அவற்றை தங்கள் சினேகிதர்களாக்கிக் கொள்வது உண்டு. பழக்கமான குரங்குகளுக்கு பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள்.

இந்தநிலையில்தான், செவ்வாய்க்கிழமை (பிப். 4) மாலை, சில குரங்குகள் வழக்கத்தை விட அபாயகரமான தொனியில் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தன. இடைவிடாத கூச்சல். அந்த கூச்சல், மரண ஓலத்தைப் போலவே இருந்ததால், என்னவோ ஏதோ என்று பதறிப்போன மலைக்கிராம மக்கள், குரங்குகளின் ஓசை வந்த திசையை நோக்கி ஓடிச்சென்று பார்த்தனர். அங்கே குரங்கு ஒன்று இறந்து கிடப்பது தெரிய வந்தது. சக குரங்கு இறந்ததால், அதன் வலியைத் தாங்க முடியாமல் மனிதர்களைப் போலவே குரங்குகளும் தங்கள் சோகத்தை வித்தியாசமான ஒலிகளை எழுப்பி தெரியப்படுத்தி இருப்பதாக கிராம மக்கள் புரிந்து கொண்டனர்.

 

Funeral for Monkey! Humanities Mountain Villagers !!

 

இதையடுத்து வனக்கிராம மக்கள், இறந்து கிடந்த குரங்கின் சடலத்தை மீட்டனர். மனிதர்கள் இறந்துவிட்டால் சடலத்தைக் எப்படி குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, இறுதிச்சடங்குகளை செய்வார்களோ அதைப்போலவே அந்த குரங்கின் சடலத்தையும் குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம் வைத்தனர். வாசனை திரவியங்களைப் பூசினர். குரங்குகள் விரும்பி சாப்பிடும் பழங்கள், தண்ணீர் வைத்து படைத்தனர். குரங்கின் உடலுக்கு கிராமத்தினர் சாமந்திப்பூமாலை அணிவித்தனர்.

பின்னர், தென்னை ஓலை, மூங்கில் பிரம்புகளால் பாடை கட்டி, அதில் குரங்கின் சடலத்தைக் கிடத்தி ஊர்வலமாகக் கொண்டு சென்று வனப்பகுதிக்குள் குழி தோண்டி அடக்கம் செய்தனர். அதற்கு முன்பாக, வனக்கிராம பெண்கள் குரங்கின் பிரிவைத் தாள முடியாமல் ஒப்பாரி வைத்தும், மார்பில் அடித்துக்கொண்டும் பாடினர். சவ ஊர்வலத்தின்போது பட்டாசுகளும் வெடித்தனர்.


வழக்கமாக நாய், பூனைகளை மட்டுமே செல்லப் பிராணிகளாக கருதி, நெருங்கிப் பழகும் மனிதர்கள் மத்தியில், மலைக்கிராம மக்கள், தங்களின் வாழ்வின் ஒரு பகுதியாக கலந்து விட்ட குரங்குகளையும் சக மனிதர்களைப்போலவே பாவித்து, நல்லடக்கம் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த மலைக்கிராம வாசிகளிடமும் பெரும் சோகத்தையும், அதேநேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.