Skip to main content

திமுக மிதப்பில் இருந்தால் ஆட்சிக் கனவு அவ்வளவுதான்?!

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியும் கடைசியாக கிடைத்த வேலூர் தொகுதி வெற்றியும் திமுக தலைமையை மயக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக அந்தக் கட்சிக்குள்ளேயே எச்சரிக்கை குரல்கள் எழுந்திருக்கின்றன. சமீபத்திய அறிவாலய நிகழ்வுகளும், தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினர் அணி அணியாக பாஜக பக்கம் ஒதுங்கும் நிகழ்வுகளும் இதை நிரூபிப்பதாக அந்தக் கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

 

dmk after vellore elction

 

 

குறிப்பாக அத்திவரதர் தரிசனத்தைப் போல, திமுக தலைவரை சந்திக்க வருபவர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பணம்படைத்தோர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே ஸ்டாலினின் சிறப்புத் தரிசனம் ஏற்பாடு செய்யப்படுவதாக கட்சிக்காக எதையும் எதிர்பாராமல் உழைத்தவர்கள் குமுறுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் மாவட்டப் பொறுப்புகளில் இருப்போருக்கு எதிரான குழுவினர் திமுகவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லா வகையிலும் கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாகவே இருக்கிறார்கள். லோக்கல் பிரச்சனைகளைத் தாண்டி ஸ்டாலின் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருக்கிறார்கள். அத்தகைய தொண்டர்களும் பிரமுகர்களும் திமுக தலைவரை சந்திக்க விரும்பி அறிவாலயம் வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ஸ்டாலினை எளிதாக சந்தித்து சென்றவர்கள் இப்போது, அறிவாலயத்தில் உருவாகியிருக்கும் புதிய பூசாரிகளைத் தாண்டி ஸ்டாலினை சந்திப்பது இயலாத காரியமாகிவிட்டது என்கிறார்கள்.

இப்படி சந்திக்க வருகிறவர்கள், தங்கள் பகுதிகளில் நிலவும் அரசியல் நிகழ்வுகளையும், திமுகவில் இருப்போரை பாஜகவினர் ஆசைகாட்டி இழுக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளையும் ஸ்டாலினிடம் முறையிட விரும்புகிறார்கள். திமுகவைச் சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு செல்வது அதிர்ச்சியளித்தாலும் அதுதான் உண்மை என்று அவர்கள் சொல்கிறார்கள். மத்திய அரசுத் திட்டங்களைப் பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் பாஜகவுக்கு மாறுவதாக வெளிவரும் செய்திகள் திமுக தலைமைக்கு தெரியுமா தெரியாதா என்பதே அடிமட்ட திமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.

திமுகவைச் சேர்ந்தவர்கள் எப்படி பாஜகவுக்கு செல்கிறார்கள் என்ற அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கே காலம் காலமாக வாக்களித்தவர்கள் எப்படி பாஜகவுக்கு வாக்களித்தார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் நிலைமையின் தீவிரம் புரியும்.

நேற்றுக்கூட, சிக்கிம் சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர்கூட இல்லாத பாஜக, எதிர்க்கட்சியாக இருந்த சிக்கிம் மாநிலக் கட்சியிடமிருந்து 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, திடீர் புளியோதரை மாதிரி திடீர் எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது.

பணத்தாலும், அரசு சலுகைகளை பெற்றுத்தருவதாலும் வாக்காளர்கள் தங்கள் பக்கம் இழுக்கலாம் என்ற திட்டத்தை பாஜக தீவிரமாக அமலாக்கி வருகிறது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டிய தலைவர் ஸ்டாலினை சுற்றி புதிய பூசாரிகள் உருவாகியிருக்கிறார்கள் என்று திமுகவினர் புலம்புகிறார்கள்.

திமுகவிடம் இருந்து இதுவரை அடிமட்ட தொண்டர்கள் எதுவும் பயன் அடைந்ததில்லை. பலன் அடைந்துவிடாதபடி முன்னணி நிர்வாகிகளே தடுத்துவிடுகிறார்கள். காலம் முன்புபோல இல்லை. கொஞ்சம் விட்டிருந்தால் வேலூரில் துரைமுருகனின் மகனை பழிதீர்த்திருப்பார்கள். ஸ்டாலினுக்காக உழைத்த தொண்டர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது. அதிலும் வெளி மாவட்ட திமுக நிர்வாகிகளின் அயராத உழைப்பே வெற்றியைப் பெற காரணமாகியது. முதலில் தன்னால்தான் வேலூரில் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதாக தோற்றத்தை ஏற்படுத்தும் துரைமுருகன் மாதிரியான ஆட்களின் கொட்டத்தை ஸ்டாலின் அடக்க வேண்டும். இதுபோன்ற சின்ன விஷயங்களை தடுக்கத் தவறியதால்தான் ராகுல் நிலைமை பரிதாபமாக மாறியது என்பதை தலைமை உணர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

வேலூர் தேர்தலில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனின் படம் மட்டுமே இருந்ததை வெளிமாவட்டத்தில் இருந்து சென்ற நிர்வாகிகள் வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள். இவருக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு? மற்ற மாவட்ட நிர்வாகிகள் இப்படி செய்திருந்தால் தலைமை சும்மா விடுமா என்று கேட்கிறார்கள்.

ஸ்டாலினை, துரைமுருகன் தலைவராக ஏற்றிருக்கிறாரா அல்லது ஸ்டாலினுக்கே தான்தான் தலைவர் என்று எண்ணியிருக்கிறாரா? என்று தேர்தல் வேலைக்கு சென்றிருந்த மாவட்டச் செயலாளர்கள் பொருமுகிறார்கள்.

ஸ்டாலின் இனியாவது அறிவாலயத்தில் இருக்கும்போது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரையும் திமுக அணிகளின் நிர்வாகிகளையும் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக திமுகவில் வேகமெடுத்திருக்கும் இளைஞர் அணியைப் போல, மகளிர் அணியையும் சில முன்னுரிமைகளைக் கொடுத்து முடுக்கிவிட்டால் சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக புதிய பலத்துடன் தயாராகும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

திமுக தலைமைக்கு இதெல்லாம் யார் சொல்லப் போகிறார்களோ?

 

 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.