Skip to main content

பதவிக்காக ஓடிப்போனது ராஜ பரம்பரைக்கே இழுக்கு... காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்கெட்ச் போடும் பாஜக!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தனது சித்து விளையாட்டைத் துவக்கியிருக்கும் பா.ஜ.க. தலைமையிடம், கடந்த வருடம் கர்நாடகாவைப் போல இந்த வருடம் சிக்கியிருக்கிறது மத்தியப் பிரதேசம்.

6 அமைச்சர்கள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்களுடன் குவாலியர் அரண்மனை வாரிசான காங்கிரசின் ஜோதிராதித்திய சிந்தியா விலகியதால், பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கும் முதலமைச்சர் கமல்நாத், சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடி வருகிறார். 230 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்துக்கு கடந்த 2018-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களையும், பா.ஜ.க. 109 இடங்களையும் கைப்பற்றின. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். மூத்த தலைவர் கமல்நாத்தை முதல்வராக்கினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.

 

bjp



முதலமைச்சர் பதவியை குறிவைத்து ராகுல்காந்தியிடம் காய்களை நகர்த்திய சிந்தியாவுக்கு இது ஏமாற்றமாக இருந்தது. தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, "இது உருப்படாத ஆட்சி. தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் (கமல்நாத்) நிறைவேற்றாவிட்டால் நானே வீதியில் இறங்கி ஆட்சிக்கு எதிராகப் போராடுவேன்' என்பதில் தொடங்கி, 2 வருடமாகவே உள்ளடிகளில் ஈடுபட்டார்.

2019-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ம.பி.யில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளை கைப்பற்றியது பா.ஜ.க. காங்கிரசில் போட்டியிட்ட சிந்தியா தோல்வியடைந்தார். ஆட்சிக்கு எந்த நேரமும் ஆபத்து வரும் என எதிர்பார்த்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கங்காரு போல பாதுகாத்து வந்த கமல்நாத், டெல்லித் தலைமைக்கு நம்பிக்கையான தகவல்களைத் தந்தபடி இருந்தார். பலமுறை எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளை சிந்தியா உதறியதால், போனால் போகட்டும் என்கிற அலட்சியமும் காங்கிரஸ் தலைமைக்கு இருந்தது.

 

congress



இப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய பிரதேசத்தில் காலியாகும் 3 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் 26-ந் தேதி நடக்கிறது. இதில் காங்கிரசும், பா.ஜ.க.வும் தலா 1 இடத்தை எளிதாகக் கைப்பற்றும். மூன்றாவது இடத்துக்குத்தான் போட்டி அதிகரித்திருக்கிறது. அந்த இடத்தைக் கைப்பற்ற எம்.எல்.ஏ.க்களை தூக்கும் மறைமுக பேரங்களை நடத்தியபடி இருக்கிறது பா.ஜ.க.


அப்போது, "காங்கிரஸ் எளிதாக ஜெயிக்கும் ராஜ்யசபா சீட்டை தனக்கு வேண்டும்' என கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்தார் ஜோதிராதித்திய சிந்தியா. ஆனால், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய்சிங்கும் ராஜ்யசபா சீட்டை குறிவைக்க, "பிரியங்காகாந்தியை ராஜ்யசபாவுக்கு அனுப்பலாம்' என்கிற யோசனையை சோனியாவுக்குத் தெரிவித்திருந்தார் கமல்நாத். இதனால், சிந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த சமயத்தில், காங்கிரசுக்கு எதிரான அரசியலையும் கமல்நாத்துடனான மோதலையும் நடத்தும் உங்களுக்கு எப்படி ராஜ்யசபா சீட் ஒதுக்குவது? அரசியலில் குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாத உங்களுக்கு வாய்ப்பளிப்பது காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்தும் செயல்' என சிந்தியாவிடம் கோபமாக கடிந்துகொண்டார் ராகுல்காந்தி''’என்கிறார்கள் ராகுலுக்கு நெருக்கமான தமிழக எம்.பி.க்கள்.

இந்த நிலையில்தான், காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களிடமும் பகுஜன்சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களிடமும் பா.ஜ.க.வுடன் இணைந்து சிந்தியா பேசிவரும் பேரங்களை அறிந்து அதிர்ச்சியடைந்தது காங்கிரஸ். கறுப்பு பணத்தின் மூலம் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என குற்றம்சாட்டினார் மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் ஹோகில். மத்தியப் பிரதேசத்தின் பா.ஜ.க. தலைவர் ஷர்மா, "எந்த முயற்சியையும் பா.ஜ.க. எடுக்கவில்லை. காங்கிரசில் உள்கட்சி மோதல்தான், ஆட்சிக்கு தலைவலியை கொடுத்துக்கொண்டிருக்கிறது''’என தாக்கியிருக்கிறார்.

 

 

congress



சிந்தியா கடந்த 10-ந் தேதி பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசியதுடன், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பிவிட்டு மறுநாளே பா.ஜ.க.வில் இணைந்து விட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தங்களது பதவியையும் ராஜினாமா செய்தனர். கட்சியில் இணைந்த சிந்தியாவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியிருக்கிறார் அமித்ஷா.

தேசிய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கிய இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரசின் செயல்தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி., "முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்தார் சிந்தியா. அது கிடைக்கவில்லை என்றதும் கடந்த 2 வருடங்களாக முதல்வர் கமல்நாத்தோடு மல்லுக்கட்டி வந்த அவர், பதவி வெறியில் தற்போது கட்சிக்கு துரோகமிழைத்திருக்கிறார். ராஜ பரம்பரையில் வந்தவர் என்பதாலேயே துரோகங்கள் அவருக்கு எளிதாக இருக்கிறது.

சமீபத்தில் நடந்த பா.ஜ.க.வின் தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்ல திருமண வரவேற்பில் கலந்துகொண்ட மத்தியபிரதேசத்தின் முன்னாள் தலைவர் சிவ்ராஜ்சிங்குடன் ம.பி. அரசியல் பற்றியும் சிந்தியாவின் அரசியல் பற்றியும் நீண்டநேரம் அமித்ஷா விவாதித்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, ராஜ்யசபா எம்.பி.யும், அமைச்சர் பதவியும் தருவதாக சிந்தியாவுக்கு நம்பிக்கை தந்துள்ளது பா.ஜ.க. அதற்கு பிரதிபலனாக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க உறுதியளித்த சிந்தியா, அதனை செயல்படுத்த முனைந்திருக்கிறார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடி ஆட்சியை கவிழ்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது பா.ஜ.க. ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க் களில் பலர், தங்கள் தவறுகளை உணர்ந்து ராஜினாமாவை திரும்பப்பெறும் முடிவில் இருப்பதால், அமித்சா-சிந்தியா கூட்டணியின் எண்ணம் நிறைவேறாது என்கிறார் அழுத்தமாக.

தமிழக காங்கிரசின் மாநில செய்தித் தொடர்பாளர் சிவாஜி சந்திரசேகர், "மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்த போது, தன்னை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தினார் சிந்தியா. ஆனால், சோனியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், "நமக்கும் பா.ஜ.க.வுக்கும் வெற்றி வித்தியாசம் பெரியளவில் இல்லை. அதனால் பா.ஜ.க.வை சமாளிக்க சிந்தியாவால் முடியாது' என தீர்மானித்து கமல்நாத்தை முதல்வராக டிக் அடித்தனர். இதனால் தலைமை மீதும் கமல்நாத் மீதும் அதிருப்திகளை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார் சிந்தியா. அத்துடன், "லோக்சபாவில் தோற்ற யாருக்கும் ராஜ்யசபா சீட் கிடையாது' என ராகுலும் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிந்தியா, பா.ஜ.க.வுடன் இணைந்து முதுகில் குத்தியுள்ளார்.


"முன்பிருந்த காங்கிரஸ் கட்சிபோல இப்போது இல்லை. அதனாலேயே புதிய பாதை தேடி பயணிக்கிறேன்' என சொல்லி காங்கிரசிலிருந்து விலகியிருக்கிறார் சிந்தியா.

"இப்படி சொல்லும் தகுதி அவருக்கு கிடையாது. ஏன்னா, அவரது தந்தை மாதவராவ் சிந்தியா மறைவுக்குப் பிறகு இவரை ஆளாக்கியது காங்கிரஸ். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளில் 17 ஆண்டுகள் எம்.பி.யாகவே வைத்திருந்ததுடன் அவரை மத்திய அமைச்சராகவும் வைத்திருந்தது காங்கிரஸ். இவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைப்போல ம.பி.யில் யாருக்கும் கிடைத்ததில்லை. பதவிக்காக பா.ஜ.க. பின்னால் ஓடிப்போனது ராஜ பரம்பரைக்கே இழுக்கு'' என்கிறார் ஆவேசமாக.

சிந்தியாவின் துரோக அரசியலால் மத்தியப்பிரதேச காங்கிரஸ் ஆட்சி கலகலத்துப் போயிருக்கும் நிலையில்... இதன் தாக்கம் ராஜஸ்தான், மகாராஷ்டிராவிலும் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. ம.பி.யை போலவே ராஜஸ்தானிலும் முதல்வர் அசோக் கெலட்டுக்கும், துணைமுதல்வர் சச்சின் பைலட்டுக்கும் முட்டல் மோதல் அதிகரித்துள்ளது.

அதேபோல மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்துவருவதால் அதிருப்தியிலுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வளைக்க ரகசிய ஸ்கெட்ச் போட்டு வருகிறது பா.ஜ.க. இதனை உணர்ந்துள்ள சோனியாகாந்தி, அந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள அதிருப்தியாளர்கள் விலை போகாமல் இருக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்.

தற்போது ம.பி. சட்ட மன்றத்தில் 2 இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அதன் பலம் 228 ஆக இருக்கிறது. இதில், பெரும்பான்மையை நிரூபிக்க 115 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் கமல்நாத்திற்கு தேவை. ஆனால், காங்கிரசிடமுள்ள 114 எம்.எல்.ஏ.க் களில் 22 பேர் ராஜினாமா செய்திருப்பதால் அதன் பலம் 92 ஆக குறைந்துள்ளது. பா.ஜ.க. தவிர்த்த மற்ற கட்சி கள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவு கிடைத்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க 16 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. இந்த நிலையில், ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தங்களது ராஜினாமாவை திரும்பப்பெறுமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது காங்கிரஸ்.

அத்துடன் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகள், தங்களது எம்.எல்.ஏ.க்களை வெளி மாநில ரிசார்ட்டுகளில் தங்கவைத்து பரஸ்பரம் அடைகாத்து வருகின்றன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸும், ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க.வும் எதிர்தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரங்களை நடத்திவருவதால் ம.பி. அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்து வருகிறது.

 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது