Skip to main content

ராகுல் பிடிவாதம்! உறுதி அளித்த சோனியா! - சமாதானம் அடைந்த அதிருப்தி தலைவர்கள்! 

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

ddd

 

நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் தொடர்ச்சியாகத் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரசில் தலைவர் பதவியும் காலியாக இருக்கிறது. சொந்தக் கட்சியிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் வலுக்கின்றன. தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்தி 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். குறிப்பாக, "நீண்ட நெடிய வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வுசெய்ய முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது; விரைந்து தேர்வு செய்யுங்கள் அல்லது உள்கட்சித் தேர்தலை நடத்தி தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தலை அறிவியுங்கள்; மாநில தலைவர்கள் சுதந்திரமாக இயங்குவதற்கேற்ற சூழலை கொண்டு வாருங்கள்; அகில இந்திய தலைமை மூலம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் முறைகளை தவிர்த்து மாநில கமிட்டிகளுக்கு அதிகாரம் வழங்குங்கள்' என்பது உள்ளிட்ட 15 பக்க கடிதத்தை எழுதி 23 தலைவர்களும் போர்க்கொடி உயர்த்தியிருந்தனர்.

 

ddd"காங்கிரஸ் இல்லாத பாரதம்' என பா.ஜ.க. சொல்லி வரும் நிலையில், "அதிருப்தி கடிதம் எழுதியவர்களைத் துரோகிகளாக சித்தரிப்பதும் நடந்தது. காங்கிரசை பிளவுபடுத்த மோடி -அமீத்ஷாவின் சதி வலையில் கதர் சட்டையினர் வீழ்ந்துவிட்டனர்; அந்த துரோகிகளை கட்சியிலிருந்துகளை எடுக்கவேண்டும்; சில தேர்தல் தோல்விகளை வைத்து தலைமைக்கு எதிராக கடிதம் எழுதும் அவர்கள், கட்சியின் தேர்தல் வெற்றிக்காகவும், மாநிலங்களில் கட்சியின் வளர்ச்சிக்காகவும் என்ன செய்தார்கள்' என்கிற கோபாவேசத்தை ராகுல்காந்தியிடம் வெளிப்படுத்தினர் காங்கிரஸ் இளம் தலைவர்கள். இதன் மூலம் மூத்த தலைவர்களுக்கும் இளம் தலைவர்களுக்குமான அரசியல் இடைவெளி அதிகரித்தபடியே இருந்தது.

 

"இதனை வளரவிடாதீகள். சீக்கிரம் ஒரு முடிவை எடுங்கள்'‘என சோனியாவை சந்தித்து ஆலோசனை வழங்கியிருந்தார் முன்னாள் பிரதம ரும் மூத்த தலைவருமான மன்மோகன்சிங். அதனை வழிமொழிந்த சோனியா, அக்கறை காட்டத் துவங்கினார். இந்த நிலையில், டெல்லியில் அதி கரித்த காற்று மாசு பிரச்சனையால், டெல்லியி லிருந்து சில நாட்கள் வெளியில் தங்கியிருங்கள் என சோனியாவுக்கு அவரது குடும்ப டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால், ராகுல் மற்றும் பிரியங்காவுடன் கோவாவிற்கு இடம் மாறிய சோனியா. 20 நாட்கள் தங்கியிருந்துவிட்டு சமீபத்தில் டெல்லி திரும்பியிருக்கிறார்.

 

கோவாவில் தங்கியிருந்த நாட்களில் கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்வதில் கவனம் செலுத்திய சோனியா, மீண்டும் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவரும் ராகுலின் பிடிவாதத்தை தளர்த்த வைத்திருக்கிறார். "சோனியாவுக்கு உதவி யாக பிரியங்காவும் வலியுறுத்திய நிலையில் ராகுலின் பிடிவாதம் தளர்ந்துள்ளது'’என்கிறார்கள் நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களில் சிலர்.

 

இந்த நிலையில், ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் காங்கிரசின் அகில இந்திய மாநாட்டில் கட்சிக்கான முழுநேர தலைவரை அறிவிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது காங்கிரஸ். "இன்னும் 3 மாதங்களில் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், காங்கிரசுக்கு தலைவரை தேர்வு செய்யாமல் இருப்பது கட்சிக்கு மேலும் பின்னடைவாகவே இருக்கும்' என மூத்த தலைவர் கள் கருதினர்.

 

dddஇதனையடுத்து, "சோனியாவும் அதிருப்தி தலைவர்களும் சந்தித்து பிரச்சனைகளை பேசித் தீர்க்கவேண்டும்' என மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும், சோனியாவின் விசுவாசியுமான கமல்நாத், அதற்கான முயற்சியில் இறங்கினார். அதிருப்தி தலைவர்களுடன் பேசினார். சோனியா விடம் விவாதித்து அதிருப்தி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார் கமல்நாத்.

 

டெல்லியில் சோனியா தலைமையில் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலட், அம்பிகாசோனி, வேணுகோபால், பிரியங்கா காந்தி, ரன்தீப் சுர்ஜிவாலா மற்றும் அதிருப்தி தலைவர் களான ராஜ்யசபா எதிர்க் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, மகா ராஸ்ட்ரா முன்னாள் முதல் வர் பிரித்விராஜ் சவான், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங், சசிதரூர், கபில்சிபல், முகுல் வாஸ்னிக், விவேக் தங்கா, அஜய் சிங், ரேணுகா சௌத்ரி, மிலிந்த் தியாரோ, அஜய்சிங், அரவிந்தர்சிங் லவ்லி, யோகானந்த் சாஸ்திரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த கூட்டம் குறித்து பேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, "கருத்து வேறுபாடுகள் கொண்ட தலைவர்களை சமாதானப் படுத்துவதற்கான கூட்டமோ உள்கட்சி பகைகளை விவாதிக்கும் கூட்டமோ இது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், ஜனவரியில் நடக்கவிருக்கும் கட்சி மாநாடு கட்சிக்கு முழுநேர தலைவர் ஆகியவைகளை விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இது. முழு நேர தலைவராக ராகுல் காந்திதான் பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை 99.9. சதவீதத்தினர் விரும்புகின்றனர். விரைவில் முழு நேர தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்'' என்கிறார்.

 

ஆலோசனைக் கூட்டம் குறித்து விசாரித்த போது, ’’கூட்டத்தில் பேசிய குலாம்நபி ஆசாத், "நாங்கள் அதிருப்தியாளர்கள் இல்லை. கட்சியின் நலன்களுக்காகவே கடிதம் எழுதினோம். அதையும் தலைவராகிய உங்களுக்குத்தான் எழுதினோம். அதனை பொதுவெளியில் விவாதிக்கவில்லை. எல்லாவற்றையும் நீங்கள் சரி செய்ய வேண்டும் என்பது தவறா? ஆனால், எங்களை துரோகிகள் ரேஞ்சிற்கு சிலர் விமர்சித்ததுதான் ஜீரணிக்க முடியவில்லை. எந்த சூழலிலும் கட்சிக்கு விரோதமாக நாங்கள் நடக்கவில்லை. ஆலோசனை சொல்வதோ கட்சியின் நலனுக்காக பேசுவதோ தவறுன்னு நீங்க நினைச்சீங்கன்னா… இனி அதை நாங்கள் செய்யப்போவதில்லை'' என்று சொன்னார். அதனை வழிமொழிந்த ஆனந்த்சர்மா, "தலைவரை தேர்வு செய்வதற்கு உள்கட்சி தேர்தலை நடத்தியிருந்தால் கருத்து வேறுபாடுகளே வந்திருக்காது. ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி சோர்வாக இருப்பதற்குக் காரணம் அனைத்து முடிவுகளும் டெல்லியிலேயே எடுப்பதால்தான். தலைமைக்கு நெருக்கமான நபர்களை பிடித்து மாநில பொறுப்புகளையும் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் பதவியும் வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி டெல்லிக்கு வந்து பதவியை வாங்கிக்கிட்டு போய்டுவதால் தனி கோஷ்டிகள் நிறைய உருவாகிவிட்டன. இதெல்லாம் தவிர்க்கப்பட்டால்தான் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும். இதனை நாங்கள் வெளிப்படுத்தினால் துரோகிகள் என குற்றம்சாட்டுவது எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும்?'' என்றிருக்கிறார்.

 

பிரித்விராஜ் சவான் பேசும்போது, "விசுவாசிகள் என்கிற பேரில் கட்சி தலைமையை பலர் துதிபாடுவதும், அதனை தலைமை அங்கீகரிப்பதும் தொடர்ந்தால் இன்னும் நாம் பின்னடைவை சந்திப்போம். தோல்விக்கான புள்ளி எது என்பதையும் அதற்கான தீர்வையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நமது எதிரியான பா.ஜ.க.வை வீழ்த்துவது கடினம்தான்'' என்றிருக்கிறார். தொடர்ந்து பேசிய பலரும், "நேரு குடும்பத்துக்கு வெளியே இருந்து ஒருவரை தலைவராக தேர்வு செய்யுங்கள் என சொல்கிறீர்கள். ஆனா, அதற்காக எடுக்கப்பட்ட வழிமுறைகள் என்ன? எதனால் கட்சி தோல்வி அடைகிறது? பிரச்சனை எங்கு இருக்கிறது? என்பதை எல்லோரையும் அழைத்து ஆலோசனை நடத்தக்கூட தலைமை விரும்பவில்லைங்கிற ஆதங்கம் எல்லோருக்கும் இருக்கிறது'' என சொல்லியுள்ளனர்.

 

cnc

 

மூத்த தலைவர்கள் பலரும் இதனை மறுத்து பேசியதுடன், "ராகுல்காந்தியின் தலைமையில்தான் கட்சி ஒற்றுமையாக இருக்கும். அதை தவிர்த்து மாற்று சிந்தனை தேவையில்லை'' எனச்சொல்ல, வேறு வழியின்றி அதிருப்தி தலைவர்களும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

 

அப்போது, "கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதுதான் நல்லது. துதிபாடுபவர்களை நான் ஆதரிப்பதுமில்லை. நீங்கள் சொல்லும் பிரச்சனைகளை பலமுறை ஆராய்ந்திருக்கிறேன். "ஜனவரியில் முழுநேர தலைவர் தேர்வு செய்யப்படுவார்' என உறுதியளித்திருக்கிறார் சோனியாகாந்தி'' என்று கூட்டத்தில் நடந்ததை விவரித்தனர் நம்மிடம் பேசிய தமிழக எம்.பி.க்கள்.

 

 

 

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.