Skip to main content

அதிருப்தி அளித்த 8 வழிச்சாலை தீர்ப்பு! விவசாயிகள் கொந்தளிப்பு!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

Chennai salem expressway supreme court order and farmers reaction

 

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்ட வழக்கில், ''ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்'' என்ற கணக்காக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், டெல்லியைத் தொடர்ந்து தமிழக்திலும் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. 

 

மத்திய பாஜக அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பட்ஜெட், 10 ஆயிரம் கோடி ரூபாய். இத்திட்டம், சேலத்தில் தொடங்கி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாகச் சென்னையில் முடிகிறது. இந்த சாலையின் மொத்த நீளம்  277.3 கி.மீ. எடப்பாடி பழனிசாமி அரசு, இத்திட்டத்துக்காக 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டியது. 

 

இந்த சாலைக்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள். எட்டுவழிச்சாலை வந்தால், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 3 லட்சம் மரங்கள் அழிக்கப்படும். 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழக்க நேரிடும். சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலையில் உள்ள கவுந்தி மலை, வேடியப்பன் மலைகளில் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

 

வெட்டப்படும் தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என ஆசை வலை விரித்தும் விவசாயிகள் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. ஏற்கனவே, அதிமுக அரசு, சேலம் - உளுந்தூர்பேட்டை சாலைக்காக நிலம் வழங்கிய மக்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையான இழப்பீடு தராமல் வஞ்சித்து இருந்தது. இதையெல்லாம் யோசித்த விவசாயிகள், கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

இந்த எதிர்ப்புகளுக்கு இடையே, விளைநிலங்களுக்குள் பூட்ஸ் கால்களுடன் போலீசாரை இறக்கி, நிலத்தை அளந்து, முட்டுக்கல் நட்டனர் வருவாய்த்துறையினர். திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் விவசாயிகள். கடந்த 2019 ஏப்ரல் 8ம் தேதி, ''8 வழிச்சாலைக்காக நிலத்தைக் கையகப்படுத்திய நடைமுறை தவறு என்றும், கையகப்படுத்திய நிலத்தை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது. மேலும், இதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

 

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருதரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், 2020 டிச. 8ம் தேதி இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

''எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை இல்லை. ஆனால், முந்தைய அறிவிக்கை அடிப்படையில் நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை செல்லும். மீண்டும் புதிய அறிவிக்கையை வெளியிட்டு இத்திட்டத்தைத் தொடரலாம். ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் துறையிடம் முன்னனுமதி பெறாமல் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு. 

 

இத்திட்டத்தைச் செயல்படுத்த உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும் எட்டுவழிச்சாலை போடும் அதிகாரம் இருக்கிறது,'' என்று தீர்ப்புரையில் கூறியிருந்தது.

 

தீர்ப்பின் முழு விவரம் வருவதற்கு முன்பே, எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை என்று டிவி சேனல்களில் செய்திகள் வெளியானதால், சேலத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேரம் போகப்போகத் திட்டத்தை, புதிய வழிகாட்டுதல் படி செயல்படுத்தலாம் என்ற தகவல் பரவியதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

 

சேலம் ராமலிங்கபுரத்தில் ஒன்றுகூடிய 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது என்றும், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதற்கிடையே, கியூ பிரிவு, காவல்துறை தனிப்பிரிவு, எஸ்பிசிஐடி உள்ளிட்ட அனைத்து உளவுப்பிரிவு காவல்துறையினரும் வாகனங்களுடன் வந்திறங்கவும், அங்கு மேலும் டென்ஷன் எகிறியது. 

 

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் குப்பனூர் நாராயணன், சிவகாமி, கவிதா, மோகனசுந்தரம், குப்புசாமி ஆகியோர் பேசினர்.

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                    குப்பனூர் நாராயணன்

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மத்திய, மாநில அரசுகளுக்குச் சாதகமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை - 2020 (இஐஏ - 2020), ஒரு திட்டம் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறத்தேவை இல்லை என்று கூறுகிறது. இந்த அறிவிக்கை, இன்னும் சட்டமாகவில்லை. இப்போது வந்துள்ள தீர்ப்பானது, மத்திய அரசுக்கு இஐஏ - 2020 அறிவிக்கையைச் சட்டமாக்கிவிட்டு, அதன்பிறகு புதிய அறிவிக்கை வெளியிட்டு எட்டுவழிச்சாலை போடுங்கள் என மறைமுகமாகச் சொல்வது போல் இருக்கிறது.

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                                குப்புசாமி

 

உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்துதான் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைகிறது எனில் நாங்களே முன்வந்து எங்கள் நிலத்தைத் தர தயாராக இருக்கிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் கொள்ளை அடிக்கவும், கஞ்சமலையில் இருக்கும் இரும்பு உள்ளிட்ட கனிம வளங்களைத் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கவும்தான் இந்த திட்டத்தைக் கொண்டு வர துடிக்கிறார்கள. இந்த திட்டத்துக்காக எங்கள் நிலத்தை ஒரு அடிகூட விட்டுத்தர மாட்டோம். 

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                        மோகனசுந்தரம்

 

கடந்த இரண்டு ஆண்டு காலமாக எங்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் போலீசார் எத்தனையோ பொய் வழக்குகளைப் போட்டு, கைது செய்துள்ளனர். போலீசார், வருவாய்த்துறையினர் டார்ச்சரால் மன உளைச்சல் ஏற்பட்டு பல விவசாயிகள் மாரடைப்பில் உயிரிழந்துள்ளனர். இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு என்ன  இழப்பீடு கொடுத்தாலும் ஈடுகட்ட முடியுமா?

 

சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அந்த வழியாக எட்டுவழிச்சாலை போடலாமே? மலையைக் குடைந்து, இயற்கையை அழித்து எட்டுவழி என்ற பெயரில் பசுமைவழி விரைவுச்சாலை தேவை இல்லை. இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விரைவில் டெல்லியில் விவசாயிகள் நடத்துவதைப் போல சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். எங்கள் மண்ணுக்காக நாங்கள் தற்கொலை போராட்டத்தில் இறங்கவும் தயாராக இருக்கிறோம்,'' என்றனர்.

 

தீர்ப்பின் உள்ளடக்கம் குறித்து பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டோம்.

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                   வழக்கறிஞர் பாலு          

 

''அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தவறு என்கிறது உச்சநீதிமன்றம். நெடுஞ்சாலைத்துறைக்குச் சாலைகள் அமைக்க அதிகாரம் இருக்கிறது. அதேவேளையில், விவசாயிகள் பெயரில் இருக்கும் நிலத்தை அரசுக்கு வகை மாற்றம் செய்ததையும், அதில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 

 

சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பிறகுதான் ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் அப்போது எட்டுவழிச்சாலை வழக்கில் தீர்ப்பு அளித்தது. ஆனால் இன்றைக்கு உச்சநீதிமன்றம், திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகும், இடைப்பட்ட காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும். அந்த அனுமதி சரியாக வழங்கப்பட்டு உள்ளதா என்பதை இப்போது நாங்கள் ஆய்வு செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 

ஒருவேளை, எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தாலும், நிலத்தை வகை மாற்றம் செய்ய உரிய விதிகள் பின்பற்றப்படாமல் போனாலும் கூட அதை எதிர்த்து நாம் வழக்கு தொடரலாம். உயர்நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதது விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்த திட்டமே தேவை இல்லை என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. 

 

சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கும்போது புதிய வழித்தடத்தில் எட்டுவழிச்சாலைத் திட்டம் தேவையில்லை. இதற்கான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்படவில்லை. விளை நிலங்களைக் கையகப்படுத்தும் இப்படியொரு திட்டம் தேவையில்லாதது. மதுரை - சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம்தான் ஆரம்பத்திலிருந்தது. அதை மாற்றித்தான் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலையாக மாற்றி இருக்கிறார்கள். தொடர்ந்து போராடுவோம். 

 

உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பகுதியாக நீக்கம் செய்து, ஒரு பகுதியை உறுதி செய்திருக்கிறது, உச்சநீதிமன்றம். இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், இப்படியொரு தீர்ப்பை அறிவித்து இருப்பது வினோதமாக இருக்கிறது. இப்போது ஒரு திட்டம் நிறைவேறுவதற்கு எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்குச் சட்டங்களின் அழுத்தம் நீர்த்துப் போய்க்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது,'' என்கிறார் வழக்கறிஞர் பாலு.

 

விவசாயிகளை மீண்டும் போராட்டக்களத்திற்கு அழைத்திருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.

 


 

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

“என்னை அழிக்க நடவடிக்கை” - உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்த போது, ‘தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவை செய்து கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த அமலாக்கத்துறை, ‘அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்து கோரிக்கையை முன்வைத்தது. 

 Arvind Kejriwal's response in the Supreme Court on Action to destroy

இந்த நிலையில், அமலாகக்த்துறை அளித்த அந்த பதிலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் , ‘அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்கு சமமான அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், தேர்தல் சமநிலையை குலைக்க மத்திய அரசு முயல்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் கைது மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முறை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அதுமட்டுமல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனி மனிதனையும், ஆம் ஆத்மி கட்சியையும் அழிப்பதற்கான யுக்தியாகத் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், கெஜ்ரிவாலை உடனடியாக சிறையில் இருந்து விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.