Skip to main content

எடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் உடன்பாடில்லாத நிலையில் அதனை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில், தேர்தல் குறித்து எடப்பாடி எடுத்த அஸ்திரத்தை முறியடித்துள்ளது டெல்லி என்கிறார்கள் பா.ஜ.க.வினர். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் நீதிமன்றங்களில் கால அவகாசம் கேட்டு இழுத்தடித்து வருகிறது எடப்பாடி அரசு. தி.மு.க. தொடர்ந்த வழக்கை காரணமாக காட்டி தப்பிக்க முயற்சிப்பதிலேயே காலம் கடத்தியது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களின் எதிர்பார்ப்புகள் முடங்கிக்கிடப்பதோடு ஊழல்கள் பெருத்துக் கிடக்கின்றன. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களை புறந்தள்ள முடியாமல் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது எடப்பாடி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில தேர்தல் ஆணையம்.
 

eps



தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆணையத்தின் கமிஷனர் பழனிச்சாமி எடுத்துவரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்கான பரபரப்பு தமிழக அரசியல் கட்சிகளை தொற்றிக்கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்டமாக, தேர்தலில் போட்டியிட விரும்பும் தங்களது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை பெறத் துவங்கியுள்ளன அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள்.
 

admk



தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்தபோது, "உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அக்டோபர் 31 ந்தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்பை கமிஷனர் பழனிச்சாமி அறிவித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு கொடுத்த யோசனையை ஏற்க வேண்டிய நிலையில் இருந்தார் அவர். அதற் கேற்ப, தேர்தலில் பயன் படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் பணியை பெங்களூரிலுள்ள பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், ஹரியானா, மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக தொழில்நுட்ப பணியாளர்கள் பிசியாக இருப்பதால் தமிழக பணிகளை நவம்பர் மூன்றாவது வாரத்தில்தான் முடிக்க முடியும் என பெல் நிறுவனம் அறிவுறுத்தியதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி மேலும் 4 வாரத்துக்கு அவகாசம் வாங்கியிருக்கிறார் ஆணையர் பழனிச்சாமி. அதனால், அக்டோபர் 31-ந்தேதி வெளியிட வேண்டிய நோட்டிஃபிகேசன் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் முதல்வாரத்தில், தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில் அரசு தரப்பில் எந்த ரகசிய முடிவையும் எடுக்காமலிருந்தால் பொங்கலுக்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும்'' என்கின்றனர்.
 

admk



தேர்தலை எதிர்கொள்ள வேண்டா வெறுப்பாக அ.தி.மு.க. தயாராகியிருக்கும் நிலையில், அது தொடர்பாக கட்சியின் சீனியர்களிடம் விவாதித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த விவாதங்களில் தோழமைக்கட்சிகளுக்கு செக் வைக்கும் சில திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டதாக அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர்களிடமிருந்து செய்திகள் கசிகின்றன.
 

vck



சீனியர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. இதில் சென்னை உள்பட 5 மாநகராட்சிகளை கேட்கிறது பா.ஜ.க. 5 கேட்டால் 3 கிடைக்கும் என பா.ஜ.க. கணக்குப் போட்டுள்ளது. அதற்கான அழுத்தத்தை கடந்த 2 மாதங்களாகவே எடப்பாடிக்கு கொடுத்து வருகிறது பா.ஜ.க. தலைமை. அதே போல கூட்டணியிலுள்ள பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் தலா 3 மாநகராட்சிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் 2 மாநகராட்சிகளுக்கு பிடிவாதம் காட்டுவார்கள். மேலும், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் சீட் கேட்டுள்ளனர். தவிர, அனைத்து நிலைகளிலுமுள்ள வார்டுகளில் பாஜக 35 சதவீதம், பா.ம.க. 20 சதவீதம், தே.மு.தி.க. 25 சதவீதம் இடங்களை எதிர்பார்க்கின்றன. இது தவிர கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளும் இதே கணக்குகளை போட்டு எடப்பாடியை நெருக்கியிருக்கின்றன.
 

bjp



தோழமைக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளில் குறைந்தபட்சத்தை நிறைவேற்றினாலும் அ.தி.மு.க. விரும்பிய இடங்களில் போட்டியிட முடியாத சூழல் உருவாகும். மேலும், தோழமைக் கட்சிகளுக்கு மேயர் பதவிகளை தாரை வார்ப்பதால் அந்த மாநகராட்சிகளில் அவர்கள் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த வெற்றி அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கே மிரட்டலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என எடப்பாடி நினைக்கிறார்.

இதனையடுத்துதான் மூத்த,  முக்கிய அமைச் சர்களிடம் ஆலோசித்தார் எடப்பாடி . அப்போது, "இந்த கவலை எங்களுக்கும் உண்டு. கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் அ.தி.மு.க.வுக்கு போட்டியிட 7 மாநகராட்சிதான் கிடைக்கும். இது அ.தி.மு.க.வின் வலிமையை குறைக்கும். அ.தி.மு.க. கட்டாயம் 12 மாநகராட்சிகளில் போட்டியிட்டால்தான் நமது வலிமை நிரூபிக்கப்படுவதோடு கட்சியினரையும் திருப்திப் படுத்த முடியும். மேலும், மாநகராட்சி மேயர் பதவிகளை விட்டுக்கொடுக்க முடியாது. மற்றவைகளை ஒதுக்குகிறோம் என சொல்லி கூட்டணி கட்சியினரை சம்மதிக்க வைப்பதுதான் சரியாக இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு மேயர் பதவி களை ஒதுக்கினால் அங்கெல்லாம் தி.மு.க. ஈசியாக ஜெயித்துவிடும். அதனால் மேயர் பதவிகள் ஒதுக்குவதில் கறாராக இருப்பதுதான் நமக்கு நல்லது என சொல்லியிருக்கிறார்கள் அமைச்சர்கள்.


இதை ஆமோதித்த எடப்பாடி, இந்த யோசனை சரியானதுதான். ஆனால், நாடாளுமன்ற தேர்தலின் போது நாம் எடுத்த அதிரடிகளை இந்த முறை பா.ஜ.க. ரசிக்காது. மேயர் பதவி தரப்படாவிட்டால் எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயாராவார்கள். அதனால், மக்கள் வாக்களித்து மேயர் மற்றும் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நேரடி முறையை மாற்றி கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் மறைமுக தேர்தலை நடத்தினால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேயர் மற்றும் தலைவர் பதவிகளை நம் சக்தியைப் பயன்படுத்தி கவுன்சிலர்களை பார்த்து பிடித்துவிடலாம். இதன் மூலம் தோழமைக் கட்சிகளின் எதிர் பார்ப்புகளை தடுத்துவிட முடியும்' என எடப்பாடி சொல்ல, அந்த யோசனையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள். மேலும், 70 சதவீத இடங்களில் அ.தி.மு.க. போட்டியிட்டால்தான் 50 சதவீத இடங்களையாவது நாம் கைப்பற்றமுடியும் எனவும் விவாதித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலும் இவை குறித்து விவாதிக்கப்பட்டன. ஆனால், பா.ஜ.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு செக் வைக்க இப்படியெல்லாம் எடப்பாடி போட்ட திட்டத்தையறிந்து டென்சனானது பா.ஜ.க. தலைமை. உடனே டெல்லியிலிருந்து, "தற்போது நடைமுறையில் இருக்கும் நேரடி தேர்தலில் ஏதேனும் மாற்றம் செய்தால், நீங்கள் எதிர்பார்க்காத பல விசயங்கள் நடக்கும்' என எச்சரிக்கை செய்தது பா.ஜ.க. அதன்பிறகே தனது திட்டத்தை கைவிட்டார் எடப்பாடி''’ என விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.


இதுகுறித்து டெல்லியோடு தொடர்புடைய பா.ஜ.க. தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் எடப்பாடிக்கு இப்போதும் விருப்பம் கிடையாது. ஆனால், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. கொடுத்த அழுத்தம்தான் தேர்தலை நடத்த அவரை ஒப்புக்கொள்ள வைத்தது. கடந்த மாதம் டெல்லியில், தன்னை சந்தித்த தமிழக அமைச்சர் தங்க மணியிடம் இதனை அழுத்தமாகவே வலியுறுத்தினார் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல். எடப்பாடியை தொடர்புகொண்டும் அவர் பேசினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் தொடங்கி கவுன்சிலர்கள் வரை அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க.வினர் இருந்தால்தான் மக்களோடு நெருங்கிப் பழக முடியும். மக்களின் நெருக்கமும் அவர்களின் தேவைகளும் நிறைவேறுவதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியும். இது, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்சாவுக்கு கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த எடப்பாடி அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. தற்போது, தேர்தலை நடத்த ஒப்புக்கொண்டிருக்கும் எடப்பாடி, நாடாளுமன்ற தேர்தலைப் போல பா.ஜ.க.வை ஈசியாக ஹேண்டில் பண்ண நினைக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் அது நடக்காது. பா.ஜ.க.வின் விருப்பப்படிதான் சீட் ஷேரிங் நடக்கும். இதனை தடுப்பதற்காகத்தான் மறைமுக தேர்தலை நடத்தும் அஸ்திரத்தை எடுத்தார் எடப்பாடி. அமைச்சரவையில் இதனை விவாதித்து, அதற்கேற்ப சட்டத் திருத்தம் செய்வதற்காக சட்டமன்றத்தின் அவசர கூட்டத்தை கூட்டவும் ரகசியமாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதனை அறிந்து எங்கள் தலைமை கொடுத்த டோஸில் அந்த ரகசிய திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது'' என்கின்றனர்.

நீதிமன்றத்தின் கண்டனம், பா.ஜ.க. தலைமையின் அழுத்தம் ஆகியவற்றை எதிர் கொள்ள முடியாமல் தேர்தலை நடத்துவதற்கான சூழலை எடப்பாடி அரசு உருவாக்கி வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வரையறை குளறுபடிகள், இடஒதுக்கீட்டில் மகளிருக்கான இடங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட முரண்பாடுகளை சுட்டிக்காட்டி தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் பொதுநல வழக்கு தொடர்ந்து தேர்தலுக்கு தடை கேட்கும் முயற்சியிலும் அ.தி.மு.க. தலைமை இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க. தொண்டர்களிடம் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், "சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சி மேயருக்கு 15 கோடியும், மற்ற மாநகராட்சிகளுக்கு 10 கோடியும் செலவு செய்ய தகுதியுடையவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றும், சென்னை வார்டு கவுன்சிலர்களுக்கு 7 கோடியும் மற்ற மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு 5 கோடியும் செலவிட தகுதியுள்ளவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் அ.தி.மு.க.வில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, உள்ளாட்சி அமைப்புகளின் ஒவ்வொரு பதவியின் தன்மைக்கேற்ப கோடிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தினர்.

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.