Skip to main content

“அதிமுக நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல...” - வழக்கறிஞர் தமிழ்வேந்தன்

Published on 21/08/2023 | Edited on 22/08/2023

 

EPS influence is less than TTV Dhinakaran says Advocate Tamilvendan

 

அதிமுக மாநாடு மற்றும் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து வழக்கறிஞர் தமிழ்வேந்தனிடம் பேட்டி கண்டோம். அதில் பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

 

“சமீபத்தில் வெளிவந்த டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகத் தான் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. வீக்காக இருக்கும் தொகுதிகளை அடையாளம் கண்டு வேலை செய்தால் நிச்சயம் ஆட்சிக்கு வரலாம். அதிமுக நடத்திய மாநாடு என்பது எழுச்சி மாநாடு அல்ல. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக நடத்திய மாநாடு. சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை விட தனக்கு தான் தென் மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கிறது என்று அவர் காட்ட நினைக்கிறார். எட்டு தேர்தல்களில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் இணைப்பை எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கவில்லை. அது அவருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 

 

வாக்கைப் பிரிக்கும் வேலையைத்தான் சீமான் செய்து வருகிறார். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று கூறினார். ஈழம் மலர்ந்ததா? திமுகவை மட்டுமே அவர் டார்கெட் செய்கிறார். இந்த ஆட்சியில் நடக்கும் சிறு சிறு தவறுகளையும் திமுக தொடர்ந்து சரிசெய்து வருவது பாராட்டத்தக்கது. டிடிவி தினகரனை விட எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு குறைவு.  தமிழ்நாட்டில் எங்கு கரண்ட் போனாலும் கொடநாட்டில் கரண்ட் போகாது. அது ஜெயலலிதாவின் ஒரு அலுவலகமாகவே இருந்தது. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் தான் கொலை, கொள்ளை நடந்திருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் நரேந்திர மோடியின் வளர்ப்பு தான் எடப்பாடி பழனிசாமி. கொடநாடு வழக்கில் விரைவில் முடிவு வரும். 

 

ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று அண்ணாமலை சொன்னார். அவரை எதிர்த்துப் பேசக்கூட அதிமுகவினருக்கு தைரியம் இல்லை. இவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்? அண்ணாமலை பேசும் அளவுக்கு அதிமுக இன்று வீக்காக இருக்கிறது.  பிரிவினை பேசி வருவது பாஜக தான். இந்தியா கூட்டணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒருங்கிணைத்ததால் பாஜகவுக்கு திமுக மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தொடர்ந்து திமுக பற்றி பேசி வருகிறார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு அவமானம் நிகழ்த்தப்பட்டது என்று நிர்மலா சீதாராமன் பேசியது பொய். அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. அப்போது அதிமுகவால் நடத்தப்பட்ட டிராமா அது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளுக்கு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் தான் காரணம். அதுபற்றி பாஜக பேசவில்லை. ஆசிஃபா படுகொலை, மணிப்பூர் கலவரம் ஆகிய எதற்கும் மோடி வாய் திறக்கவில்லை. இவர்கள் செய்வதெல்லாம் அயோக்கியத்தனம்” என்றார்.