Skip to main content

டோலிவுட்டில் களம் இறங்கிய தனுஷ் - ‘வாத்தி’ விமர்சனம்!

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

 

Vaathi movie Review

 

தமிழ் மட்டுமல்லாது ஹாலிவுட், பாலிவுட் என ஒரு ரவுண்டு வந்து அதில் வெற்றிக் கொடி நாட்டி புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கும் தனுஷ் இந்த முறை களம் இறங்கி இருக்கும் இடம் டோலிவுட். வாத்தி படம் மூலம் தெலுங்கு மக்களை மகிழ்வூட்ட நேரடி தெலுங்கு படத்தில் நடித்திருக்கும் தனுஷ். மற்ற மாநிலங்களில் கிடைத்த அதே வரவேற்பை தெலுங்கு உலகிலும் பெற்றாரா? இல்லையா?

 

டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குத் தனியாக கோச்சிங் சென்டர் ஒரு பக்கம் பெருகி வர, இன்னொரு பக்கம் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்கி அவையும் மக்கள் ஆதரவோடு பெருகி வர, இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும்  வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனை சரி கட்டி அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பள்ளிகளில் இருக்கும் தரமற்ற ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புகிறது. அப்படி தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் இருக்கும் சோழவரம் என்ற கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு ஒப்பந்த ஆசிரியராகச் செல்கிறார் தனுஷ். போன இடத்தில் தன்னுடைய வகுப்பை நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற வைத்தால் தனக்கு ப்ரமோஷன் தருவதாக கல்வித் தந்தை, கல்வி தாளாளர் என பன்முகம் கொண்ட கல்வி உலகின் மாஃபியா சமுத்திரகனி வாக்குறுதி அளிக்கிறார்.

 

இதனை அடுத்து தனுஷ் தன்னுடைய மாணவர்களை நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற வைக்கிறார். இவரின் இந்த செயலைக் கண்டு அச்சமடையும் தாளாளர் சமுத்திரகனி எங்கே அரசுப் பள்ளிகளின் தரம் இதுபோல் உயர்ந்தால் நம் தொழில் கெட்டுவிடுமோ என்று எண்ணிய அவர் தனுஷின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தன் செல்வாக்கால் தடுக்கிறார். இதனை எதிர்க்கும் தனுஷ் தனது பள்ளி மாணவர்களை அடுத்தகட்டமாக அரசு வேலைக்கு தேர்வாகும்படி தயார் செய்கிறார். இதை தடுக்கும் சமுத்திரக்கனியை எதிர்த்துப் போராடி தனது லட்சியத்தில் தனுஷ் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே வாத்தி படத்தின் மீதி கதை.

 

கல்வியின் முக்கியத்துவத்தை மிகவும் ஆழமாக கூறியிருக்கும் திரைப்படம். எக்காலகட்டத்திற்கும் ஏற்றார்போல் கல்வியின் தரம், அதைக் கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து மிக விரிவாகவும் சமகாலத்திற்கு ஏற்றார் போலவும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கும் இயக்குநர் அதை இன்னும் கூட சுவாரசியமாக கூறியிருக்கலாம். கல்வியை வியாபாரமாகப் பார்த்து கோடிகளில் லாபம் பார்க்கும் பணம் விழுங்கும் தனியார் முதலைகளைத் தோலுரித்துக் காட்டியுள்ள இயக்குநர் அதைப் படமாக காட்டாமல் பாடமாகக் கொடுத்துள்ளார். குறிப்பாக சாதி வித்தியாசங்களை உடைத்து மாணவர்களின் தரத்தை சமூகத்தில் உயர்த்துவது கல்வி மட்டுமே என்ற ஆழமான கருத்தை தெளிவாகக் கூறியுள்ள இயக்குநர் ஏனோ திரைக்கதையிலும், சுவாரசியமான காட்சி அமைப்புகளிலும் ஆங்காங்கே கோட்டை விட்டுள்ளது பார்ப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படுத்துகிறது. 

 

படம் ஆரம்பித்த முதல் பாதி முழுவதும் சற்று ஸ்லோவாக நகர்ந்து இரண்டாம் பாதியில் சற்று வேகம் எடுத்த திரைப்படம் இறுதிக் காட்சிகளில் கனமான அழுத்தம் நிறைந்த காட்சிகளால் தப்பிப் பிழைத்துள்ளது. குறிப்பாக இம்மாதிரியான யூனிவர்சல் மெசேஜை ஒரு படமாக எடுக்கும் பட்சத்தில் வெறும் தெலுங்கு ரசனை உடன் மட்டுமே படத்தைக் கொடுத்திருப்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏனோ சற்றுத் தள்ளி இருப்பது போன்ற உணர்வை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட வாகை சூடவா, நண்பன் போன்ற படங்களின் கதைக் கருக்கள் இப்படத்தைப் போன்றே இருந்தாலும் அவை நிஜத்திற்கு மிகவும் நெருக்கமாகவும் அதேசமயம் சுவாரசியமான காட்சி அமைப்புகளால் மிகவும் ஈர்க்கப்பட்டது. அம்மாதிரியான சுவாரசியமான காட்சி அமைப்புகள் இப்படத்தில் இல்லாதது படத்திற்கு சற்று பாதகமாக அமைந்திருக்கிறது. இருந்தும் படத்தின் இறுதிக் கட்ட காட்சிகள் மிகவும் கனமான காட்சிகளாக அமைந்து மனதில் சற்றே தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால் அவை படத்தை சற்றே கரை சேர்த்துள்ளது. இக்கால மிடில் மற்றும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களை வெகுவாகச் சென்றடையும்படி இப்படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

 

தனுஷ் படத்துக்கு படம் மிகவும் ஷார்ப்பாகவும், அழகாகவும் மாறிக்கொண்டே வருகிறார். எப்போதும் போல் இவரது இயல்பான நடிப்பும்; எதார்த்தமான முக பாவனைகளும்; அந்த கதாபாத்திரமாகவே மாறும் இவரது இயல்பும்; கதைக்கும் கதை களத்திற்கும் மிகப்பெரிய பலமாக மாறி இருக்கிறது. இவரது அசுரத்தனமான நடிப்பு படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஒரு நேரடி தெலுங்கு படத்தில் கால் பதிக்க நினைத்து எடுத்த முயற்சியில் கதைத் தேர்வு சரியாக இருந்து திரைக்கதையில் ஏனோ சற்றே தொய்வு இருப்பதை நடிகர் தனுஷ் இன்னும் கூட கவனமாகக் கையாண்டு இருக்கலாம். வழக்கமான கதாநாயகியாக வரும் சம்யுக்தா தனது வழக்கமான நடிப்பை காட்டி விட்டுச் சென்றிருக்கிறார். தனுஷ் உடன் சக ஆசிரியையாக நடித்திருக்கும் இவரின் சின்ன சின்ன முகபாவனைகளும், அழுத்தமான சில வசனக் காட்சிகளும் ஈர்க்கும்படி அமைந்து ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறார். இவருக்கும் தனுசுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. 

 

கல்வித் தந்தை, வில்லன் என இருமுகத் தோற்றத்தில் வரும் சமுத்திரகனி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து படத்திற்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறார். இவரது அமைதியான வில்லத்தனம் நிறைந்த நடிப்பு காட்சிகளுக்கும் கதாபாத்திரத்திற்கும் நன்றாக வலு சேர்த்திருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் தனுஷின் நண்பராக வரும் ஷாரா கவனம் பெறுகிறார். இவருடன் நடித்துள்ள தெலுங்கு நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஊர் பிரசிடெண்ட் ஆக வரும் சாய்குமார் ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டி பிறகு நல்லவராக மாறி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தனுஷின் மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். அதேபோல் முக்கியமானவராக வரும் கென் கருணாஸ் தனக்கு கொடுத்த காட்சிகளில் வெகுவாக நடித்து அசுரனுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். மற்றபடி முக்கிய வேடங்களில் வரும் ஆடுகளம் நரேன் இன்னும் சில நடிகர்கள் அவரவர் வேலையை நிறைவாகச் செய்துள்ளனர்.

 

ஜிவி. பிரகாஷ் குமார் இசையில் ‘வா வாத்தி’ பாடல் ரிப்பீட் மோட். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு பின்னணி இசை தேவையோ வழக்கம் போல் அவற்றை சிறப்பாகவும் தேவையுள்ள இடங்களில் தரமாகவும் கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார். குறிப்பாகப் படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும் சென்டிமென்ட் காட்சிகளுக்கு தனது உயிர்ப்பூட்டும் பின்னணி இசை மூலம் வாழ்வு கொடுத்துள்ளார். படம் நடப்பது 1990களில் என்பதால் அக்காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜெ. யுவராஜ். குறிப்பாகப் பள்ளி மற்றும் திரையரங்கம் சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாகப் படமாக்கி உள்ளார்.

 

கல்வியின் முக்கியத்துவத்தை ஒரு சுவாரஸ்யமான படமாக காட்டாமல் பாடமாகக் காட்டி இருப்பது சற்றே ஆங்காங்கே அயற்சி ஏற்பட்டாலும் இக்கதையின் கருவும் படத்தில் காட்டப்பட்ட கருத்தும் இக்காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவதால் இப்பாடத்தை ஒரு முறை படிக்கலாம்.

 

வாத்தி - கருத்து ஊசி!

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
dhanush aishwarya divorce case update

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து 18 நவம்பர் 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 2022 ஜனவரி 17 அன்று இருவரும் பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். இது திரையுலகில் பரபரப்பையும்,  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  

இதையடுத்து இருவரும் அறிவித்தது போல், தனித்தனியே வாழ்ந்து வந்தனர். மேலும் அவரவர் திரை பயணங்களில் கவனம் செலுத்தி வந்தனர். இவர்களது இரு மகன்களும் தனுஷ் பட விழா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட விழாவிலும் கலந்து கொண்டனர்.  

இந்தச் சூழலில் கடந்த 8ஆம் தேதி, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004ல் நடைபெற்ற திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சுபா தேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரத்த அவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!