Skip to main content

இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல...! நட்புனா என்னானு தெரியுமா - விமர்சனம்   

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

தமிழ் திரைப்படங்களின் கதைகளில் நெடுநாட்களாக இடம் பெறும் முக்கிய உறவு 'நட்பு'. ஆரம்பத்தில் மிகவும் புனிதப்படுத்தப்பட்டு படமாக்கப்பட்ட நட்பு, சமீப காலங்களில் அதன் நிறை குறை, துரோகம் உள்ளிட்டவற்றோடு இயல்பாகப் பேசப்படுகிறது. அந்த வரிசையில் ஒரு ஜாலியான, சில நேரம் ஒருவரை ஒருவர் காலியும் கேலியும் செய்யும் சமகால நண்பர்களின் கதை இயக்குனர் சிவா அரவிந்த்தின் 'நட்புனா என்னானு தெரியுமா?'

 

natpuna enna nu theriyuma



'ஒரே நேரத்தில் ஒரே வயிற்றில் பிறந்தால் ட்வின்ஸ், வேறு வேறு அம்மாவுக்குப் பிறந்ததால் ஃப்ரெண்ட்ஸ்' என்று பிறந்ததிலிருந்தே ஒன்றாகவே சுற்றும், ஒன்றாகவே படிக்கும் (?), ஒன்றாகவே இருக்கும் நண்பர்கள் சிவா, ராஜு, மணியாக கவின், ராஜு, அருண் ராஜா காமராஜ். பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டு வெட்டியாக சுற்றும் இவர்களுக்கு திடீர் ஞானம் வந்து ஒரு பிசினஸ் தொடங்குகிறார்கள். இவர்களது கலகலப்பான உழைப்பால் பிஸினஸும் பிக்-அப் ஆகிறது. அந்த நேரத்தில் நண்பர்களில் ஒருவருக்கு ரம்யா நம்பீசன் மீது காதல் வருகிறது. நட்புக்கிடையில் காதல் வந்தால் என்ன நடக்கும்? எல்லாம் நடக்கிறது. என்ன பிரச்சனைகள் வந்தன, எப்படி தீர்ந்தன என்பதை காமெடி தூக்கலாகப் போட்டு நட்பு கொஞ்சம் காதல் கொஞ்சம் சேர்த்து சொல்லியிருக்கிறது 'நட்புனா என்னானு தெரியுமா'.


நண்பனை விட்டுக்கொடுக்காமல், நண்பனுக்காக செயினை அத்துக்கொடுக்கும், நண்பனின் காதலுக்காக அடி வாங்கும், நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் மிக நல்ல நட்புகளையே படங்களில் அதிகமாகப் பார்த்துப் பழகிய நமக்கு சின்னச் சின்ன சுயநலங்கள் சேர்ந்த, அடிக்கடி சண்டை போடும், சின்னச் சின்னதாய் ஏமாற்றிக்கொள்ளும் இயல்பான நட்பை படமாகப் பார்ப்பது ஒரு புதிய உணர்வு. அதே நேரம் நண்பன் செய்யும் ஒரு ஏமாற்று வேலையை பெரிய துரோகமாகக் கருதி அப்படியே நிரந்தரமாகப் பிரிந்து போகும் அதீத உணர்ச்சிவயப்படுதலெல்லாம் இல்லாமல், 'செஞ்சது செஞ்சுட்ட போய்த் தொல' என்று கொடுத்து வாங்கும் நட்பு இது. இந்த இயல்புத்தன்மையே படத்தை நமக்கு நெருக்கமாக்குகிறது.

  kavin ramya nambeesan



தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் ஸ்மார்ட்டான கவின், காதல் தேடலில் பெண்களைக் கண்டால் அசடு வடியும் ராஜு, விவரம் தெரியாத வினயமில்லாத மணி என நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். மூன்று பேருக்கும் சமமான முக்கியத்துவம் இருப்பது நன்று. படம் ஆரம்பித்து முதல் அரை மணி நேரம் மிக மெதுவாக எந்த முக்கியத்துவமும் சீரியஸ்னஸும் இல்லாமல் கொஞ்சம் அலை பாய்ந்து நகரும் கதை நண்பர்களிடையே பிரச்னை வரும் இடத்தில் நல்ல உயரம் சென்று உட்கார்கிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு காட்சியுமே 'கும்தலக்கடி கலகலகல' (படத்தின் பின்னணி இசை பாணியில் சொன்னால்) தான்.


வேட்டையனாக தொலைக்காட்சி ரசிகர்களிடையே புகழ் பெற்ற கவினுக்கு நாயகனாக இது முதல் படம். குறையேதுமில்லாமல் முறையாக நடித்துள்ளார். ராஜு, நண்பராகவும் கிட்டத்தட்ட நாயகராகவும் ஒரு நல்ல அறிமுகம். சில இடங்களில் கொஞ்சம் அதிகமான எக்ஸ்ப்ரஷன்ஸ். அப்பாவி நண்பராக அருண்ராஜா, அவ்வப்போது திரையரங்கை அதிர வைக்கிறார். கிரிக்கெட் பால், ஸ்விம்மிங் பூல், மல்லிகைப் பூ  என நண்பர்களைத் திட்ட அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் அவரது குரலில், அந்த சூழலில் செம்ம சிரிப்பு... நாயகி ரம்யா நம்பீசன் ஹெல்த்தியான ஹீரோயின். காதலன் தந்தை இருவருக்கிடையில் சிக்கித் தவிக்கும்போது நன்றாக நடித்துமுள்ளார். இளவரசு, அழகம்பெருமாள் இருவருக்கும் கவனிக்கத்தக்க பாத்திரங்கள், அழகாகச் செய்திருக்கிறார்கள். மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் இருவரும் எக்ஸ்டரா ஃபிட்டிங் போன்ற உணர்வு, பெரிதாக உதவவில்லை.

  ilavarasu



கதை தொடங்க எடுத்துக்கொள்ளும் நேரம் சற்றே சோதிக்கிறது. படத்தில் ஓரிரு காட்சிகள் 'எதுக்கு' என்று கேட்க வைக்கின்றன. உதாரணம்... அந்த ஓய்வு பெற்ற நீதிபதி மகள் திருமணத்தை நடத்த இவர்களிடம் வரும் காட்சி. காட்சிக்குள்ளேயே சில முரண்கள். இதையெல்லாம் தாண்டி படத்தின் முக்கிய கட்டம் தொடங்கும்போது கதையோடு காமெடியும் ஃபார்முக்கு வருகிறது. 'இப்படி இருக்கும்னு எதிர்பார்கல' என்று சொல்ல வைக்கிறது. தரணின் இசையில் ஜெயச்சந்திர ஹாஷ்மி, மிர்ச்சி விஜய்யின் பாடல் வரிகள் இளமை துள்ளலுடன் இருக்கின்றன. 'அந்தர் பல்டி' பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. யுவாவின் ஒளிப்பதிவு, சின்ன பட்ஜெட்டில் செட்டுகளுக்குள் எடுக்கப்பட்ட படத்தை கலர்ஃபுல்லாகக் காட்டுவதில் ஓரளவு வெற்றிபெற்றுள்ளது. நிர்மலின் படத்தொகுப்பு சீராக இருக்கிறது.

முதல் படத்தை ஜாலியான ஃப்ரெண்ட்ஷிப் படமாகக் கொடுத்து காமெடியால் கரை சேர்ந்துவிட்டார் சிவா அரவிந்த்.                             

               

 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!