Skip to main content

கிரிக்கெட் களம் வெற்றியா? -  ‘கபில் ரிட்டன்ஸ்' விமர்சனம்

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

kapil returns review

 

இளம் வயதில் சாதிக்க நினைத்ததை காலச் சூழலால் தவறவிட்டவனுக்கு, அதையே நடுத்தர வயதில் சாதிக்க அதே காலச்சூழல் களம் அமைத்துக் கொடுக்கிற கதை. கிரிக்கெட் பவுலரை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘கபில் ரிட்டன்ஸ்.'

 

ஐடியில் வேலை பார்த்து நன்றாக சம்பாதித்து வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த நடுத்தர வயது நபர் அசோக், தன் மகனிடம் ‘நீ இன்ஜினியர் ஆகணும்,' ‘நீ இன்ஜினியர் ஆகணும்' என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார். அவரது மனைவிக்கு தன் மகன் டாக்டராக வேண்டும் என்பது விருப்பம். அந்த பையனின் தாத்தாவுக்கு பேரனை கலெக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. தங்கள் விருப்பத்தை தன் மீது திணிக்கிற மூவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற அந்த பையனுக்கு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கிறது. மகனது விருப்பத்தை அசோக் கடுமையாக எதிர்க்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதும், அந்த மகனின் விருப்பம் நிறைவேறியதா இல்லையா என்பதுமே படத்தின் கதை.

 

படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் டாக்டர் ஸ்ரீனி சௌந்தரராஜன். தானுண்டு தன் குடும்பம் உண்டு என இருப்பதாகட்டும், தன் மகனுக்கு ஆபத்து ஏற்படும்போது புது அவதாரம் எடுத்து எதிராளிகளைப் பந்தாடுவதாகட்டும், தேசியளவிலான போட்டிகளில் பங்கேற்க தேவையான தகுதிகளுடன் இருக்கிற தன் மகன் நிராகரிக்கப்படும்போது கிரிக்கெட் தேர்வுக் குழுவிடம் கெஞ்சுவதாகட்டும், 40வது வயதில் கிரிக்கெட் களத்தில் கபில்தேவாக இறங்கி பொளலிங் போடுவதில் சாதனை செய்வதாகட்டும் அத்தனையிலும் எளிமையான நடிப்பால் மனதைக் கவர்கிறார்.

 

கணவனிடம் பிரியமாக இருப்பது, அவன் கலங்கும்போது தோள் கொடுத்து தேற்றுவது, மகனிடம் பாசம் காட்டி ஊக்குவிப்பது என இயல்பான நடிப்பால் தனது பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் நிமிஷா. கிரிக்கெட் பயிற்சியாளராக வருகிற ரியாஸ்கான், தனக்கெதிராக ஒருசில வார்த்தைகள் பேசிய கதாநாயகனை பழிவாங்க திட்டம் தீட்டி செயல்படுத்துவதில் காட்டியிருக்கும் மிதமான வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது.

 

கதாநாயகனின் இளம்பருவ கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற இளைஞன், கதாநாயகனின் மகனாக வருகிற மாஸ்டர் பரத், வில்லன் போல் என்ட்ரி கொடுத்து பின்னர் அநியாயத்துக்கு நல்லவனாக மாறுகிற பருத்தி வீரன் சரவணன், ஹீரோவுக்கு நண்பனாக தேவையான இடத்தில் ஆதரவாக நிற்கிற வையாபுரி என படத்தின் மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்களின் நடிப்பு கச்சிதம்!

 

ஆர்.எஸ். ராஜ் பிரதாப் இசையில் ‘ஹேப்பி மார்னிங்' பாடலின் துள்ளலிசை மனதுக்கு புத்துணர்வூட்ட, ‘டியா டியா டீலு' பாடல் உற்சாகமாய் கடந்துபோகிறது. கதையின் போக்கை எடுத்துச் சொல்லும் ‘கனிந்ததே காலம் கனிந்ததே' பாடலின் இசை இதம் தருகிறது. பின்னணி இசை காட்சிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. ஒளிப்பதிவின் நேர்த்திக்காக உரிய உழைப்பைக் கொட்டியிருக்கிறார் ஷியாம் ராஜ்.

 

படத்தின் முன்பாதி பெரிதாய் சுவாரஸ்யமில்லாத காட்சிகளுடன் கடந்தாலும் பின் பாதியில் கதாநாயகனின் இளம்பருவத்தில் நடந்த சம்பவங்கள், கொலைப்பழி, போலீஸ் விசாரணை, கதாநாயகன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளில் இருக்கும் சுவாரஸ்யம், சின்னதாய் ஒரு திருப்பம் என பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருக்கிறது. கத்தி, ரத்தம், வன்முறை, துப்பாக்கிச் சூடு, ஆபாசம், அருவருப்பு என எதுவும் கலக்காமல், தன் முன்னேற்ற சிந்தனையைத் தூண்டும் விதத்திலான கதைக்களம் அமைத்து எளிய பட்ஜெட்டில் ஒரு படத்தை தந்திருப்பதற்காக இயக்குநர் ஸ்ரீனி சௌந்தரராஜனை பாராட்டலாம்!

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். 

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.