Skip to main content

மூன்று ஜோடிகளின் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? - ‘இறுகப்பற்று’ விமர்சனம்!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

irugapatru movie review

 

எலி படம் கொடுத்த மாபெரும் தோல்விக்கு பிறகு திரை உலகை விட்டு காணாமல் போன இயக்குநர் யுவராஜ் தயாளன் விட்ட இடத்தை பிடிக்க இறுகப்பற்று படம் மூலம் மீண்டும் களம் இறங்கி இருக்கிறார். இந்தப் படம் அவருக்கு பெயர் சம்பாதித்து கொடுத்ததா, இல்லையா?

 

படத்தில் மூன்று ஜோடிகள். ஒரு ஜோடி விக்ரம் பிரபு, ஸ்ரத்தா ஸ்ரீநாத். இன்னொரு ஜோடி விதார்த், அபர்நதி. மற்றொரு ஜோடி ஸ்ரீ, சானியா அயப்பன் ஆகியோர். இந்த மூன்று ஜோடிகளுக்குள்ளும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது நாளடைவில் பிரிவு வரை சென்று விடுகிறது. இதை சைக்காலஜிஸ்ட் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தீர்த்து வைக்கும் நேரத்தில் அவருக்கும் அவரது கணவர் விக்ரம் பிரபுவுக்குமே பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. ஊருக்கே உபதேசம் சொல்லும் ஸ்ரத்தா ஶ்ரீநாத் தன் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள தவறுகிறார். இதை அடுத்து மூன்று ஜோடிகளின் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

 

இப்படி ஒரு சிம்பிளான கதையை ஓரளவு சுவாரஸ்யமான திரைக்கதை மூலம், ஓரளவு ரசிக்கும்படி கொடுத்து கரை சேர்ந்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ். நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை அப்படியே கண் மூடி நிறுத்தி, அதற்கு எந்த வகையில் தீர்வு காண வேண்டும் என்ற சொல்யூஷனையும் கொடுத்து, ஒரு நல்ல மெசேஜ் மூலம் குடும்ப படத்தை பார்த்த உணர்வை கொடுத்து கைதட்டல் பெற்றுள்ளார். மூன்று ஜோடிகளின் கதையை ஒன்றன்பின் ஒன்றாக காட்டாமல், நான் லீனியர் திரைக்கதை மூலம் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். முதல் பாதி சற்று வேகமாக நகர்ந்து, இரண்டாம் பாதி விவேகத்துடன் சென்று முடிந்திருக்கிறது. முழுக்க முழுக்க எதார்த்த காட்சி அமைப்புகளை மட்டுமே நம்பி எடுத்து இருக்கும் இந்த திரைப்படம், ஒரு நல்ல முயற்சி.

 

ஸ்ரத்தா ஶ்ரீநாத், விக்ரம் பிரபு வாழ்க்கையில், அதிக கவனத்துடன் இருந்தாலும் தவறு என்பதை சுட்டி காட்டி இருக்கிறார் இயக்குநர். விதார்த், அபர்ணதி வாழ்க்கையில், குண்டாக இருப்பது ஒரு பிரச்சனை இல்லை என்பதை சுட்டி காட்டி இருக்கிறார். ஸ்ரீ, சானியா ஐயப்பன் வாழ்க்கையில், யாரையும் குறைத்து மதிப்பிட கூடாது என்ற மெசேஜை சுட்டிக்காட்டி இருக்கிறார். இப்படி அன்றாட வாழ்வில் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி அதற்கு தீர்வும் கொடுத்திருக்கிறார். இதற்கு பக்கபலமாக இதில் நடித்த நடிகர்களும் அவரவர் வேலையை மிகச் சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். குறிப்பாக விதார்த், அபர்ணதி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. மிக யதார்த்தமான கதாபாத்திரங்களை இவர்கள் இருவரும் மிக சிறப்பாக செய்து நடிப்பில் நன்றாக தேறி இருக்கின்றனர். விதார்த், தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அபர்ணதியும் அவரது பங்குக்கு மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஸ்ராத்தா ஶ்ரீநாத், விக்ரம் பிரபு ஆகியோர் எப்போதும் போல் இயல்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஶ்ரீ மற்றும் சானியா ஐயப்பன் ஆகியோரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர்.

 

ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கின்றது. கோகுல் பினாய் ஒளிப்பதிவில் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

குடும்ப உறவுகள் எவ்வளவு முக்கியம். அதில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளை கூட எப்படி சரி செய்து கொண்டு, வாழ்வை அழகாகவும் சந்தோஷமாகவும் எப்படி கடப்பது என்பதை ஆழமாகவும், அழுத்தமாகவும் கூறி அவரவர் பார்ட்னர்களை கடைசி வரை எப்படி இறுகப்பற்றி கொள்ள வேண்டும் என்பதை நேர்த்தியாக கூறி கவனம் பெற்று இருக்கிறார் இயக்குநர் யுவராஜ்.


இறுக்கப்பற்று - இறுக்கம் குறைவு! அழுத்தம் நிறைவு!


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். 

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.