Skip to main content

சந்தானத்தின் புதிய முயற்சி வெற்றியை கொடுத்ததா..? - குலு குலு விமர்சனம்

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

Did Santhanam's new venture give success..? - Gulu Gulu Review

 

மேயாதமான், ஆடை படங்கள் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் குலு குலு. எப்போதும் பஞ்ச் காமெடிகள் மூலம் தியேட்டரை அதிர செய்யும் சந்தானம் முதல்முறையாக ஒரு டார்க் காமெடி படத்தில் அதுவும் முற்றிலும் வாய் திறக்காத அமைதியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் ஏ1 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அதே கூட்டணியில் உருவாகியிருக்கும் மற்றொரு படம். இப்படி இந்த படத்திற்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் இப்படம் பூர்த்தி செய்ததா...?

 

அமேசான் காடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட சந்தானம் நாடோடியாக வாழ்ந்து வருகிறார். பல நாடுகள், பல ஊர்கள் திரிந்து, பல்வேறு மொழிகள் பேசி நாடோடியாக வாழ்ந்து வரும் இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். யார், எந்த சமயத்தில் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் மற்ற வேலைகளை விட்டுவிட்டு உதவி செய்யும் சந்தானத்தை உபயோகப்படுத்திக் கொள்ள நினைக்கும் மூன்று நண்பர்கள் அவருடைய ஒரு நண்பரை காப்பாற்றச் சொல்லி உதவி கேட்கிறார்கள். வில்லன் கும்பல்களால் கடத்தி செல்லப்பட்ட அந்த நண்பரை சந்தானம் காப்பாற்ற செல்கிறார். இந்தப் பயணத்தின் கடைசியில் சந்தானம் அந்த நண்பரை காப்பாற்றினாரா இல்லையா என்பதே இப்படத்தின் மீதி கதை.

 

மேயாதமான், ஆடை படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தை ஒரு காமெடி படமாக கொடுத்து ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளார். பொதுவாக சந்தானம் படங்கள் என்றாலே அவை முற்றிலும் கலகலப்பான காமெடி படமாக அமையும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லாமல் சந்தானத்தை சைலன்ட் ஆகவே காட்டி மற்றவர்களை காமெடி செய்ய வைத்து அவர்கள் மூலம் கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செய்த இயக்குனர் அதை இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாம். படம் ஆரம்பித்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்காமல் ஆங்காங்கே பல இடங்களில் டைவர்ட் ஆகி சில பல கிளைக் கதைகள் மூலம் எங்கெங்கேயோ பயணித்து கடைசியில் விட்ட இடத்திலேயே வந்து முடிகிறது. சில பல காமெடி காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் மெஜாரிட்டியான காட்சிகள் பார்ப்பவர்களை சோதித்து அயர்ச்சியை கொடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சந்தானம் படம். சந்தானத்தின் படம் என்றாலே கலகலப்பான படமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு சந்தானத்தை வைத்து ஒரு டார்க் காமெடி படம் என்பதை ஏற்றுக்கொள்ளவே நேரம் பிடிக்கிறது. அதுமட்டுமின்றி திரைக்கதையின் வேகமும் சற்றே மெதுவாக நகர்ந்து ஆமை வேகத்தில் செல்வதும் படத்திற்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது. பொதுவாக ஒரே மாதிரியாக நடிக்கும் நடிகர்களை வைத்து இம்மாதிரியான பரீட்சாத்த முயற்சிகளில் ஈடுபடும் இயக்குனர் கதையாடல் மேல் இன்னமும் கவனமாக இருந்து திரைக்கதையை இன்னமும் வேகமாகவும், சிறப்பாகவும் அமைத்து ரசிகர்களுக்கு கொடுக்கும் பட்சத்தில் இம்மாதிரியான புது முயற்சிகள் கண்டிப்பாக வரவேற்பை பெறும். ஆனால், இப்படம் அந்த இடத்தில் தான் சறுக்கி இருக்கிறது.

 

எப்போதும் கலகலப்பான காமெடி காட்சிகளின் மூலம் கவனம் இருக்கும் சந்தானம் இப்படத்தில் சற்றே அடக்கி வாசித்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் வசனம் பேசாமல் வெறும் முகபாவனைகள் மூலமே உணர்ச்சிகளை கடத்தி தேவைப்படும் இடங்களில் மட்டும் ஓரிரு வரி வசனங்கள் பேசி ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். தனியாக பார்க்கும் பொழுது சந்தானத்தின் நடிப்பு சிறப்பாகவே இருந்தாலும் கதைக்கும், கதையாடல்களுக்கும் அது பொருத்தமாக இருந்ததா என்றால் சற்று கேள்விக்குறியே?

 

சந்தானத்திடம் உதவி கேட்கும் மூன்று நண்பர்கள் அவரவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அவர்களின் கடத்தப்பட்ட நண்பனாக வரும் ஹரிஷ் குமார் ஆங்காங்கே சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்தாலும் அவை ரசிக்கும்படி இருந்து கவனம் பெற்றுள்ளது. இவரது காதலியாக வரும் நமிதா கிருஷ்ணமூர்த்தி துடுக்கான பெண்ணாக நடித்து சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வரும் பெண்ணாக நடித்திருக்கும் அப்துல்லா சந்திரா கவனம் பெற்றுள்ளார். வில்லனாக வரும் பிரதீப் ராவத் வழக்கமான வில்லத்தனம் காட்டி மிரட்டியுள்ளார். கடத்தல்கார இலங்கை தமிழர்களாக நடித்து இருக்கும் ஜார்ஜ் மரியான் டி எஸ் ஆர், முருககனி, தர்ஷன் ஆகியோர் அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ஆங்காங்கே சிரிக்க வைத்துள்ளனர். இருந்தும் இப்படியான அப்பாவி கடத்தல்காரர்களை கதைக்காக பயன்படுத்தி இருந்தாலும் அவர்களை ஏன் இலங்கை தமிழர்களாக காட்டவேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லாதது சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

 

போலீசாக நடித்திருக்கும் தீனா மிடுக்கான தோற்றத்துடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் லொள்ளு சபா மாறன், சேசு ஆகியோர் கலகலப்பூட்டி சென்றுள்ளனர்.

 

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ட்ராவல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. சந்தோஷ் நாராயணனின் இசையில் அன்பரே, அம்மா நானா பாடல்கள் கவனம் பெற்றுள்ளன. அதே போல் இவரது பின்னணி இசையும் படத்தின் மூடை நன்றாக என்ஹான்ஸ் செய்து பார்ப்பவர்களுக்கு ஆங்காங்கே பரவசம் கொடுத்துள்ளது.

 

சந்தானம் படம் என்றாலே கலகலப்பாக தான் இருக்கும் என்று எதிர்பாராமல் அவரிடமிருந்து வித்தியாசமான முயற்சியை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கான படமாக இப்படம் அமைந்துள்ளது.

 

குலு குலு - ஜில் குறைவு!


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். 

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.