Skip to main content

“எனக்கும் ஆதங்கம் தான்” - திருமாவளவன் எம்.பி.

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

thirumavalavan about national award 2023 announcemnt

 

இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் தேசிய திரைப்பட விருது ஆண்டுதோறும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் கலைஞர்கள் மற்றும் தமிழ் படங்கள் என்று பார்க்கையில், சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் கடைசி விவசாயி வென்றுள்ளது. மேலும் அப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற 'மாயவா சாயவா...' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டது. 

 

அதைத் தவிர்த்து திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும் சிறந்த கல்வித் திரைப்படம் என்ற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த படம் என்ற பிரிவில் மாதவன் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி' படத்திற்கும் ஸ்பெஷல் ஜுரி விருது, இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஷெர்ஷா' படத்திற்கும் கிடைத்துள்ளது. இதில், தமிழில் முக்கிய படங்களாகப் பார்க்கப்பட்ட சூர்யா - த.செ. ஞானவேல் கூட்டணியின் ஜெய் பீம், பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியின் சார்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியின் கர்ணன் உள்ளிட்ட படங்கள் ஒரு விருதினைக் கூட பெறவில்லை. குறிப்பாக ஜெய் பீம் படத்திற்கு விருது அறிவிக்காதது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதற்கு நானி, சுசீந்திரன், பி.சி. ஸ்ரீராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

 

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், செய்தியாளர்களைச் சந்தித்த வேளையில் அவரிடம் இது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. ஜெய் பீம் படத்திற்கு விருது அறிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு, "நடிகர் பிரகாஷ் ராஜ் இதற்கு அருமையாக பதில் சொல்லியிருக்கிறார். காந்தியை கொன்றவர்கள் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கிறவர்கள் எப்படி ஜெய் பீம் படத்திற்கு விருது வழங்குவார்கள் என்ற கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார். அதையே நான் வழிமொழிகிறேன்" என்று பதிலளித்தார். 

 

உடனே அவரிடம் கடைசி விவசாயி படத்திற்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை. ஆனால் ஜெய் பீம் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த படத்தின் கதை ஒருபுறம் இருந்தாலும் கூட, வெற்றிகரமாக வெகுமக்களை ஈர்க்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் நடித்த ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசை சிறப்பாக இருந்தது. எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. இப்படத்திற்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் இருந்தது. கிடைக்காததால் இந்த விமர்சனம் இருக்கிறது" என்றார். 

 

தேசிய விருது படக் குழுவில் தமிழ்நாட்டைச் சார்ந்த இயக்குநர் வசந்த் இருந்த போதும் ஜெய் பீம் படத்திற்கு விருது கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு, "தமிழ்நாட்டை சார்ந்தவராக இருப்பதாலேயே அவர்கள் நேர்மையாக இருப்பார்கள் எனக் கருதுவது சரியல்ல. தமிழ்நாட்டை சார்ந்தவர் தான் அண்ணாமலை. ஆனால் அவர் பேசுகிற அரசியல் தமிழ் மண்ணுக்கு ஒவ்வாத அரசியலை பேசுகிறார்" என்றார். 

 

தொடர்ந்து பேசிய அவர், "உங்களுக்கு எந்த மாதிரி ஏமாற்றமோ அது மாதிரி தான் எனக்கும். நீங்க எந்த ஆதங்கத்தில் இருக்கிறீர்களோ அந்த ஆதங்கம் தான் எனக்கும். பொதுவாக ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களின் கருத்தை சார்ந்த எழுத்துக்கோ படைப்புக்கோ விருது வழங்குவது வாடிக்கையான ஒன்று. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அப்படி தான் செய்கிறார்கள். இந்த அரசு திரைப்படத் துறையையும் தங்களுக்கான ஒரு கருவியாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வெகுவாக விரும்புகிறது. அதில் அதிகமாகவும் தலையீடு செய்கிறது. அவர்கள் விருப்பு வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு திரைத்துறையை பயன்படுத்துகிறது. இது தனிப்பட்ட முறையில் விசிக-வின் விமர்சனம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்