Skip to main content

“ஒரு கண்ணில் துணிச்சல்; மறு கண்ணில் கருணை” - எமோஷ்னல் ஆன சூர்யா

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
suriya condolence message to vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. முதலில் அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. பின்பு தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லபட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அந்த சாலை ஸ்தம்பித்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா, விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “விஜயகாந்த் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. ஒரு கண்ணில் துணிச்சலும் மறு கண்ணில் கருணையும் கொண்டு வாழ்ந்த அபூர்வ கலைஞன் அவர். கடைக்கோடி மக்கள் வரைக்கும் எல்லாருக்கும் எல்லா உதவிகளையும் செய்து, புரட்சிக் கலைஞனாக, கேப்டனாக நம்ம எல்லார் மனசுலயும் இடம் பிடித்தவர். அவருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்” என எமோஷ்னலாக பேசினார். மேலும் தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்