தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே .சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று (05 மார்ச்) வெளியானது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியாவதால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபத்திரத்திற்கு ராம்சே எனப் பெயர் சூட்டியது புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. தந்தை பெரியாரை மறைமுகமாகத் தாக்கும் வகையில் உள்நோக்கும் கொண்டே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக பெரியாரின் ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் செல்வராகவன் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் இப்பெயர் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையில் அவர் 'ஆம்... பெரியாரைக் குறிப்பிட்டே அப்பெயர் வைக்கப்பட்டது' என்கிற தொனியில் அவர் பதிலளிக்க, சமூக வலைதளங்களில் இவ்விவகாரம் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து செல்வராகவன் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "நண்பர்களே! அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக்காட்டிய பின்புதான் புரிகிறது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.
— selvaraghavan (@selvaraghavan) March 9, 2021
"நெறியாளர் கேட்ட கேள்வி முழுமையாக இல்லை. ஆகவேதான் செல்வராகவன் இப்பதிலை அளித்துள்ளார்" என அக்காணொளி வெளியானது முதலே செல்வராகவன் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.