ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து, பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இரவின் நிழல். 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாகும். இப்படம் ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ”இது மிகப்பெரிய முயற்சி. இந்த முயற்சியே பார்த்திபனுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் படம் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்களை வைத்து சிங்கிள் ஷாட்டில் படம் எடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. உலக அளவில் பேசப்படக்கூடிய படமாக இந்தப் படம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இசை வெளியீட்டு விழாவையே பார்த்திபன் வித்தியாசமாக நடத்தியுள்ளார். அவர் நமக்கு கிடைத்த மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர். அவருடைய கலைச்சேவையும் நுணுக்கமும் தமிழ்த்திரையுலகிற்கு தேவை. அவருக்கு என்னுடைய பாராட்டுகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.