Skip to main content

“ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்” - பா. ரஞ்சித்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
pa.ranjith about puducherry issue in j.baby press meet

பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள இப்படம் மகளிர் தினமான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா. ரஞ்சித், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். படம் குறித்த கேள்விக்கு,  “நம்ம வீட்டில் இருக்கிற பெரியவங்களை நாம எப்படி பாக்குறோம். அந்த பார்வையை கண்டிப்பாக இந்த படம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் படி செய்யும். முதியோர் இல்லத்தில் விட்ட பெரியோர்களை, அந்த குடும்பங்களில் இருப்பவர்கள், இந்த படத்தை பார்க்கும்போது சின்ன புரிதல் ஏற்படும். சில மாற்றங்களை உருவாக்குவதற்கு இந்த படம் முதற்படியாக இருக்கும். நீலம் தயாரிப்பில் ஒரு படம் உருவாகிறது என்றால், எங்களுக்கு என்று சில அளவுகோல்கள் இருக்கிறது. சில சமூகங்களுக்கு எதிரான, பாலின சார்பு, தவறான கருத்துக்கள் கொண்ட படங்கள் எடுக்கக் கூடாது என்பது தான் ஐடியா. அந்த வகையில் இந்த பட கதை, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான படமாக இருந்தது.” என்றார்.

புதுச்சேரி குழந்தை படுகொலை சம்பவம் தொடர்பான கேள்விக்கு, “அது உண்மையிலே பதட்டமாக இருந்தது. எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு. அந்த செய்தியை பார்த்தவுடன் ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டேன். ஆனால் வீட்டில் சொல்லவில்லை. இந்த சம்பவம் பெரிய பயத்தை உருவாக்கியிருக்கு. அந்த பயம் வெறும் குற்றத்தில் ஈடுபட்டவர்களை மையப்படுத்தியே இல்லை. சமூகத்தில் நிறைய பிரச்சனை இருக்கு. அதை சரியாக நாம் கையாள்வதில்லை. சொல்லியும் கொடுக்கப்படவில்லை. நம்முடைய கல்வி நிலையங்கள் நமக்கு சரியான கல்வியை போதிக்கிறதா என்பது பிரச்சனையாக இருக்கிறது. அதோடு சேர்ந்து இந்த போதை பழக்கவழக்கங்கள். இது தனி மனித பிரச்சனையா என பார்த்தால் இல்லை. ஒரு சமூகத்தினுடைய பிரச்சனையாத்தான்  இருக்கு. ஒட்டுமொத்த சமூகமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கு.

இன்றைக்கு குற்றம் செய்தவன் மாட்டிக்கிட்டான். ஆனால் அப்பாக்களாக, மாமாக்களாக, சித்தப்பாக்களாக என நிறைய பேர் யாருமே இன்னும் மாட்டவில்லை. பெரிய தண்டனை தர வேண்டும் என்பது முக்கியம் தான். மாட்டாத நிறைய பேர், மாட்டியவர்களை குற்றம் சொல்லவே மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த சமூகம் இந்த குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தான் இதற்கு  காரணம். இங்கிருக்கிற அரசியல் இயக்கங்கள், கல்வி நிறுவனங்கள், சமூக கூடங்கள் என எல்லாருமே பொறுப்பேற்க வேண்டும். நாம் என்ன வாழ்க்கை வாழுறோம். என்ன மாதிரியான மனநிலையில் இருக்கோம். ஏன் இந்த எண்ணம் தோன்றுது. அதை எப்படி தடுத்து நிறுத்தலாம். அதற்கான பயிற்சிகளில் நாம் போக வேண்டும். இதற்கு அடிப்படையாக கல்விதான் பிரச்சனை என நினைக்கிறேன். கல்வியோடு இங்கு இருக்கிற பகுத்தறிவற்ற தன்மையும் ஒரு மோசமான இடத்திற்கு கொண்டு போகிறது. இந்த பயிற்சி அடிப்படையாக நமக்கு உருவாகும் போது கண்டிப்பா இதுபோன்ற பிரச்சனைகள் களையலாம். இது ஒவ்வொரு தனிமனிதனுக்கு உண்டான ஒரு பொறுப்புணர்வு. இதை எல்லாருமே உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.