Skip to main content

‘பொன்னியின் செல்வன்'; ரஜினியை ஏன் மறுத்தேன்..? - மணிரத்னம் விளக்கம்

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

maniratnam explain why not act rajinikanth ponniyin selvan movie

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

 

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய மணிரத்னம், “எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த வரலாற்று படங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் ஆபரணங்கள் கிரேக்க நாட்டு முறையை சார்ந்தவை. ஆனால், நான் நிறைய படித்து ஆராய்ச்சி செய்துதான் இப்படத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறேன். சண்டைக்கு செல்லும்போது ஆபரணங்கள் இருக்காது. உடைகளும் மெட்டல் இல்லாமல் தோல் உடைகள்தான் இருக்கும். அதன்படிதான் இப்படத்திலும் பயன்படுத்தி இருக்கிறேன்.

 

இப்படத்திற்கு வசனங்கள் முதலில் தூய தமிழில்தான் அமைக்க முடிவு செய்தோம். ஆனால், சரளமாக பேசமுடியவில்லை, உணர்வுகளையும் கொண்டுவர முடியவில்லை. எனவே, சுலபமாக பேசும் அளவிற்கு மாற்றிக் கொண்டோம். ஆனால், ஜெயமோகன் எழுதும்போது தூய தமிழில் தான் எழுதிக் கொடுத்தார்.

 

பொன்னியின் செல்வனை நானும் படித்திருக்கிறேன். அதிலிருந்து என்னுடைய விளக்கத்தை கூறி காட்சிப்படுத்தி இருக்கிறேன். படம் எடுக்கும் வரை இத்தனை நாட்களாக எல்லோரும் புத்தகத்தைப் படித்துவிட்டு எங்கு இருந்தார்களோ, நானும் அங்கேதான் இருந்தேன். தளபதி படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால் ஒரு செய்தி..' என்ற பாடலை இப்படத்திற்கு ஒரு ட்ரைலராக வைத்துக் கொள்ளலாம். பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலியின் வேடத்தை தான் அந்த பாடலில் பயன்படுத்தி இருப்பேன். அதை தவிர என்னுடைய முந்தைய படங்களில் வேறு எதையும் நான் எடுக்கவில்லை. மாற்றங்கள் என ஏதும் இல்லை, முழு சுதந்திரம் கிடைத்தது போல் உள்ளது. ஒரே படத்தில் கதை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லாமல் 2 பாகங்கள் எடுக்கலாம். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளார்கள் என்பது வரவேற்கத்தக்கது.

 

'பொன்னியின் செல்வன்' படத்தை எடுக்க அது வசதியாக அமைந்தது. இத்தனை வருடங்கள் எடுக்காமல் இருந்தது சரி என்று தோன்றுகிறது. இப்படத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும்போது ஒவ்வொருவரையும் இந்த பாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாக யோசித்து தான் முடிவு செய்தேன். அது சரியாகவும் வந்திருக்கிறது. கல்கியின் இந்த கதைக்கு, ஜெயம் மோகன், குமரவேல் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. பின் தயாரிப்புப் பணிகள்தான் மீதம் இருக்கிறது.

 

மேலும், பல காட்சிகளை புத்தகத்தில் இருப்பது போல காட்சிப்படுத்த முடியாது. அதை புரிய வைக்கவும் முடியாது. ஆகையால், சினிமாவிற்கு ஏற்றபடி காட்சிகளை சுலபமாக அனைவரும் புரிந்து கொள்ளுமாறு அமைத்திருக்கிறேன். மணிரத்தினம் இப்படித்தான் படம் எடுப்பார் என்று என்னை பற்றி கணிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும். அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறேன்.

 

ரஜினியை நடிக்க வைத்தால் கல்கி மற்றும் ரஜினி என இருவரின் ரசிகர்களிடமும் மாட்டி கொள்ள நேரிடும். ஆகையால் அவரை வேண்டாம் என்று கூறி விட்டேன். ட்ரைலர் பார்த்ததும் முழு படத்தையும் கணிக்க கூடாது. முழு படத்தையும் பார்த்து விட்டு தான் நிறை குறைகளை கூற வேண்டும். அதை மீறி வரும் எதிர்மறை விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டேன். த்ரிஷா நன்றாக தமிழ் பேசினார். அன்று நந்தினி பாத்திரத்திற்கு இந்தி ரேகா தான் சரியான தேர்வாக இருந்தார். இப்போது ஐஸ்வர்யா ராய் தான் சிறந்தவராக தோன்றினார்.

 

எழுத்தில் அனைத்தையும் சொல்ல முடியும். ஆனால் சினிமாவில் உடல் மொழி மற்றும் வசனங்களை வைத்து தான் ஒரு கதாபாத்திரத்தை கூற வேண்டும். அதை ஜெயமோகன் சிறப்பாக செய்தார். கொரோனா காலத்தில் நான் பயந்த ஒரே விஷயம் நடிகர் நடிகைகள் குண்டாகி விடுவார்களோ என்பதை பற்றி தான். உடற்பயிற்சி நிலையங்கள் இல்லை. ஆனால் அதற்கு அவரவர்கள் கடுமையாக உழைத்தாரகள்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.