Skip to main content

"ஜனநாயகம் என்பது விலங்குகளுக்கு அல்ல; பாஜக அரசு வெட்கக் கேடானது" - கஸ்தூரி காட்டம்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

kasthuri about manipur issue

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

 

அதனை எதிர்த்துப் பழங்குடியினப் பட்டியலில் இருக்கும் சமூகத்தினர் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இதனிடையே கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கொலை, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்; நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

 

இந்த மணிப்பூர் சம்பவத்திற்கு திரைப் பிரபலங்கள் வைரமுத்து, அக்‌ஷய் குமார், ஜி.வி. பிரகாஷ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பல கேள்விகளை அடுக்கியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட பதிவில், "ஜனநாயகம் என்பது மக்களுக்கானது; விலங்குகளுக்கு அல்ல. இந்த அரக்கர்கள் விலங்குகளை விட மோசமானவர்கள். அவர்களுக்கு இதயங்கள் இல்லையா? அவர்களுக்கு தாய் இல்லையா? இந்த பயங்கரம் மே 3 ஆம் தேதி நடந்தது. இப்போதுதான் வெளியில் தெரிகிறது. இன்னும் எத்தனை கொடுமைகள் நடந்துள்ளதோ? பெண்களை இழிவுபடுத்துவதன் மூலம் மைத்தேயி சமூகம் வெற்றிபெற முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்களா?

 

இது மிகப்பெரிய அவமானம் மற்றும் மிகப்பெரிய இழப்பு. ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் நினைவில் கொள்ளுங்கள்; பெண்களை இழிவுபடுத்தியவர்கள் அழிக்கப்பட்டனர். மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பாஜக அரசு வெட்கக் கேடானது. பாஜகவின் பெண் தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? நமது பெண் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கும் இப்போதுதான் தெரிய வந்தது என்கிறார்கள். நீங்கள் இணையம், டிவி, தகவல் தொடர்பு சேனல்களை நிறுத்தலாம். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. உண்மை வெளிவரும்; அது வெற்றி பெறும்.

 

பிரேன் சிங்கின் தலைமையில் 4 பாஜக எம்எல்ஏக்கள் உட்பட 10 குக்கி சமூக எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் 2 பேர் அமைச்சர்கள். கடந்த காலங்களில் குக்கி உரிமைகளைப் பறித்ததற்காக பலர் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்தனர். இப்போது அவர்களின் நிலைப்பாடு என்ன" எனக் கொந்தளித்துப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்