Skip to main content

”ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் பார்த்து நம் மக்கள் பொறாமைப்பட்டாங்களானு தெரியல...” - விக்ரம் வெற்றி குறித்து கமல் ஜாலி பேச்சு

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Kamal haasan

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் 
நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை நடைபெற்றது. 

 

இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “ஒரு படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று ஒற்றையாளாக நின்று யாரும் கூறிவிட முடியாது. 200 பேர் வேலை பார்க்கும் இடத்தில் ஒருவர் தவறு செய்தால்கூட படத்தின் தோல்விக்கு அது காரணமாக அமைந்துவிடும். வேலை கிடைத்தால் போதும் என்று சினிமாவிற்கு வந்தவன் நான். எனக்கு சினிமாவில் நடிகனாக வேண்டும் என்றெல்லாம் ஆசை இருந்ததில்லை. அந்த ஆசையை கிளப்பிவிட்டது பாலச்சந்தர் அவர்கள்தான். கடைசிவரை ஸ்டூடியோவிற்கு ஆட்டோ ரிக்‌ஷாவில் வரவேண்டுமா, வீடு கட்ட ஆசை இல்லையா, போய் நடிக்க ஆரம்பி என்றார். 

 

கடந்த 10 வருட காலத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸான என்னுடைய படம் இதுதான். அதற்கு முக்கிய காரணம் மகேந்திரனும் தம்பி உதயநிதியும். இந்த வெற்றி ஈஸியாக வந்ததில்லை. அதனால் அதை நான் ஈஸியாகும் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. இங்கு பேசியவர்கள் கமல் சார் எனக்கு கார் கொடுத்தார், எனக்கு படம் கொடுத்தார் என்றெல்லாம் பேசினார்கள். உழைக்கும் மக்கள் அவர்களுடைய தினக்கூலியில் இருந்து சிறிய பணத்தை நம் படத்திற்கு கொடுத்துள்ளார்களே, அதுதான் மிகப்பெரிய கிப்ட். 

 

உங்களுடைய படத்தை பெஸ்டிவலில் ரிலீஸ் செய்யுங்கள், அல்லது ரிலீஸ் பெஸ்டிவலாக இருக்க வேண்டும் என்று அன்புச்செழியன் சொன்னார். அந்த வாழ்த்து பலித்துவிட்டது. விக்ரம் படத்தை மக்கள் பெஸ்டிவலாகக் கொண்டாடுகிறார்கள். அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். கே.ஜி.எஃப் பார்த்து நம் மக்கள் பொறாமைப்பட்டுவிட்டார்களா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தப் படத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் வாழ்த்திக்கொண்டு இருந்தார்கள். அந்த வாழ்த்தும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்” எனத் தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

“உடையாத உடல்; சரியாத மனம்” - கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 vairamuthu congratulates Kamal Haasan

 

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பல துறைகளிலும் வல்லவர் நடிகர் கமல்ஹாசன். திரைத்துறையையும் தாண்டி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினைத் தொடங்கி அரசியல் செயல்பாடுகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி திரைப் பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

அவரது எக்ஸ் பக்கத்தில் "நாம் வாழும் காலத்தின் கர்வ காரணங்களுள் ஒன்று கலைஞானி கமல்ஹாசன். இத்துணை நீண்ட திரைவாழ்வு அத்துணை பேர்க்கும் வாய்க்காது. வாழ்வு கலை இரண்டிலும் பழையன கழித்துப் புதியன புகுத்தும் அந்தண மறவரவர். எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு இனி என்ன வேண்டும்?  உடையாத உடல் வேண்டும்; சரியாத மனம் வேண்டும். வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார்