பாலிவுட்டை சேர்ந்த சாஜித் கான் மீது ‘மீ டூ’ இயக்கம் தொடங்கப்பட்டபோதோ இரண்டு நடிகைகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் குற்றம் சாட்டினார்கள்.
இந்நிலையில், தற்போது ஒரு மாடல் நடிகை தனக்கு 17 வயது இருக்கும்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஹவுஸ்புல் மற்றும் ஹவுஸ்புல் 2 திரைப்படத்தை இயக்கியவர் சஜித் கான். மேலும் பிரபல நடன இயக்குனரான ஃபாராக் கானின் சகோதரர். இவர் மீது டிம்பிள் பால் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவரது அந்த பதிவில், “மீடூ இயக்கம் தொடங்கிய போது பல சாஜித் கான் குறித்து பேசினார்கள். ஆனால் எனக்கு அப்போது தைரியம் வரவில்லை. ஏனென்றால், பின்புலம் இல்லாத எந்த ஒரு நடிகரையும் போலத்தான் நானும் இருந்தேன். என் குடும்பத்துக்காக நான் உழைக்க வேண்டியிருந்தது. எனவே நான் அமைதி காத்தேன். இப்போது என்னுடன் என் பெற்றோர் இல்லை. எனக்காக நான் சம்பாதிக்கிறேன். எனவே என் 17-வது வயதில் சாஜித் கான் என்னைத் தவறாக நடத்தினார் என்பதை என்னால் இப்போது தைரியமாக சொல்ல முடியும்" என்று டிம்பிள் பகிர்ந்துள்ளார்.
ஒரு நடிகர் தேர்வின்போது இந்த சம்பவம் நடந்ததாக டிம்பிள் கூறியுள்ளார். "அவர் என்னிடம் அசிங்கமாக பேசினார். என்னைத் தொட முயற்சித்தார். அடுத்த அவர் எடுக்கப்போகும் 'ஹவுஸ்ஃபுல்' திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அவர் முன் ஆடைகளை நீக்க சொன்னார். அவர் இன்னும் எத்தனை பெண்களை இப்படி நடத்தியிருக்கிறார் என்பது கடவுளுக்கே தெரியும்.
இப்போது நான் இதை வெளியே சொல்வது அனுதாபத்தை தேட அல்ல. அது என் இளம் வயதில் என்னை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதை நான் இப்போது உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது பேச வேண்டிய நேரமில்லையா, இது போன்ற ஆட்கள் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருக்க வேண்டும். நடிகர் தேர்வில் இப்படி நடப்பதால் மட்டுமல்ல, நமது கனவுகளைச் சுரண்டி நம்மிடமிருந்து திருடுவதாலும். ஆனால் நான் நின்றுவிடவில்லை. அதே நேரம் நான் செய்த தவறு, இதுபற்றி பேசாமல் இருந்தது தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று சமூக வலைதளத்தில் சஜித் கானை கைது செய்ய வேண்டும் என்று ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஏற்கனவே தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை எதிர்கொண்டு உண்மையை நிரூபிக்கும் வரை எந்த படங்களையும் இயக்கப்போவதில்லை என்று தெரிவித்து தற்போதுவரை மௌனம் காத்து வரும் சஜித் கான், இந்த குற்றச்சாட்டிற்கும் மௌனம் காத்து வருகிறார்.