பிரபல சின்னத்திரை நடிகையான வி.ஜே சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்காகப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வி.ஜே சித்ரா, தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு, நள்ளிரவில் தான் தங்கியிருக்கும் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்குத் திரும்பியுள்ளார். அதனையடுத்து, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது முகத்தில் நகக் கீறல் மற்றும் காயம் இருந்ததால் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஓட்டலில் அவருடன் தங்கியிருந்த அவரது வருங்கால கணவர் ஹேம்நாத்தும் விசாரணையின் பிடியில் உள்ளார்.
வி.ஜே சித்ராவின் மறைவையடுத்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "ஆற்றல் மிகுந்த வாழ்க்கை மிக விரைவாகப் பறிக்கப்பட்டுள்ளது. வெகுதொலைவிற்கு அவர்களைத் தள்ளியது எது? தனிப்பட்ட முறையில் அவரை எனக்குத் தெரியாது. ஆயினும், வலியை உணர முடிகிறது. நீங்கள் தேடியது உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.