Skip to main content

நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசை!

Published on 16/04/2021 | Edited on 17/04/2021

 

bgsgsgs

 

'சின்ன கலைவாணர்', 'ஜனங்களின் கலைஞன்' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக், 19ஆம் தேதி நவம்பர் 1961ல் கோவில்பட்டியில் பிறந்தார். இவர் 1987ல் வெளியான கே.பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' படம் மூலம் அறிமுகமாகி பின்னர் 'புது புது அர்த்தங்கள்' படம் மூலம் பிரபலமானார். இப்படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது. பிறகு, 1990களின் தொடக்கத்தில் இருந்து துணைநடிகராக தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் 1997களின் இறுதியிலிருந்து மீண்டும் பிரபலமாக மாற ஆரம்பித்தார். 

 

அந்தச் சமயம் இவர் நடிப்பில் வெளியான 'காலமெல்லாம் காதல் வாழ்க', 'பொங்கலோ பொங்கல்', 'காதல் மன்னன்', 'சொல்லாமலே', 'நாம் இருவர் நமக்கு இருவர்', 'கண்ணெதிரே தோன்றினால்', 'நினைவிருக்கும் வரை', 'பூமகள் ஊர்வலம்', 'விரலுக்கேத்த வீக்கம்', 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா', 'ஆசையில் ஓர் கடிதம்' உள்ளிட்ட படங்கள் இவரை காமெடியில் மிகவும் பிரபலமடையச் செய்து இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உண்டாக்கியது. இன்னும் ஒருபடி மேலே போய் 2002ல் வெளியான திருநெல்வேலி படத்தில், சமூகத்துக்குத் தேவையான சிந்திக்க வைக்கும் கருத்துகளை தன் காமெடி காட்சிகள் மூலம் வெளிப்படுத்தியதற்காகவே இவரை ரசிகர்கள் சின்ன கலைவாணர் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

 

அதிலிருந்து இன்று வரை பெரும்பாலான படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமுதாயத்தில் உள்ள குறைகளைச் சீர்திருத்தும் நோக்கோடு எழுதப்படும் நையாண்டியைச் சிறப்பாகச் செய்து மக்களை மகிழ்விக்கத் தொடங்கினார். சமூக கொடுமைகளுக்கு எதிரான வசனங்களை தன் காமெடி மூலம் ரசிகர்களைச் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தார். அந்தச் சமயம் இவர் நடிப்பில் வெளியான 'ரன்', 'சாமி', 'பேரழகன்' உள்ளிட்ட படங்கள் இவருக்கு மூன்று ஃபிலிம்பேர் சிறந்த காமெடி நடிகர் விருதுகளைப் பெற்றுத் தந்தன. மேலும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஐந்து தமிழ்நாடு திரைப்பட விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டன. மேலும் 2006ம் ஆண்டு கலைவாணர் விருதும், 2009ஆம் இவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டது. 

 

xdhd

 

தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்ற நடிகர் விவேக் இந்த கால இடைவெளியில் நடிகர்கள் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், பிரஷாந்த், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஷால், கார்த்தி, மற்றும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஹரிஷ் கல்யாண் வரை பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இருந்தும் அவருக்கு நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற நீண்டகால ஆசை இருந்துவந்தது. இதை அவர் பல மேடைகளில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். அது இதுநாள் வரை நிறைவேறாமலே இருந்து வந்த நிலையில் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க விவேக்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. விவேக்கும் கமலுடன் முதல்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.  

 

இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கமலின் அரசியல் பிரவேசம், ஷங்கர் தெலுங்கு, ஹிந்தி படங்களை இயக்கச் சென்றது எனப் பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் விவேக் திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இந்த திடீர் மறைவால் அவரது நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா என்பது தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. 

 

இருந்தும் விவேக்கின் ஆசை நிறைவேற கடைசியாக ஒரு வாய்ப்பு இருப்பதையும் மறுக்கமுடியாது. அதுவும் கமல் - ஷங்கர் இருவரும் மனது வைக்கும் பட்சத்தில் இதுவரை கமலுடன் விவேக் நடித்த காட்சிகளை 'இந்தியன் 2' படத்தில் பயன்படுத்தி விவேக்கின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றலாம். அதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். 

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.