Skip to main content

காவல்துறை அதிகாரிகளின் மனிதநேயமற்ற செயல் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 14

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

rajkumar-solla-marantha-kathai-14

 

காவலர்களிடம் இருக்கும் மன அழுத்தம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார்

 

டிஐஜி  விஜயகுமாரின் மரணம் குறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. கற்பனையில் பேசுவது தவறு. காவலர்களுக்கு நிச்சயமாக மன அழுத்தம் இருக்கிறது. காலத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் மனநிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. வெளிமாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளிடம் வேலை செய்வதில் மொழி உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருக்கின்றன. ஏதாவது சொன்னால் நம்மைத் திட்டி விடுவாரோ, மாற்றி விடுவாரோ என்கிற பயம் அவருக்குக் கீழே உள்ளவர்களிடம் இருக்கிறது. 

 

போனை எடுக்கவில்லை என்றால் கூட உயரதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியும். ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக போலீஸ், இப்போது இந்தியாவிலேயே ஐந்தாவது இடத்துக்கு சென்றுவிட்டது. உயரதிகாரிகளிடம் பயம் இருப்பதால் மற்றவர்களால் உண்மைகளை அவர்களிடம் சொல்ல முடிவதில்லை. காவல்துறையில் சாதி, மத அடிப்படையில் முன்னுரிமை கொடுக்கும் போக்கும் நீண்டகாலமாக இருக்கிறது. இங்கு போலீசாருக்கு சங்கம் உருவாகிவிடக் கூடாது என்பதில் சிலர் உறுதியாக இருக்கின்றனர். கேரளாவில் கூட போலீசுக்கு சங்கம் இருக்கிறது.

 

காவல்துறையினருக்கு பட்ஜெட்டில் நிறைய பணம் ஒதுக்குகின்றனர். ஆனால் அவை சரியாக அவர்களுக்குப் பயன்படுவதில்லை. ஒருகாலத்தில் போலீசாரை நன்றாகவே அரசாங்கம் கவனித்து வந்தது. சமீபகாலமாகத் தான் இதில் மாற்றம் தெரிகிறது. ஒரு போக்குவரத்துக் காவலரோ, சட்டம் ஒழுங்கு காவலரோ மெத்தனமாக செயல்பட்டால் அது நாட்டுக்கு ஆபத்தானது. சமீபத்தில் ஒரு பெண் காவலர் ஒரு ரவுடியை சுட்டுப் பிடித்துள்ளார். இது மிகவும் பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கென கமிட்டி அமைத்து அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டும். 

 

அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை மன்னிக்கலாம். நேர்மையாக வேலை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அனைவரும் பணியில் சேர்கின்றனர். சாதாரண பதவியில் இருக்கும் காவலர்களை அவர்களுடைய உயரதிகாரிகள் வீட்டு வேலை, தோட்ட வேலை எல்லாம் செய்யச் சொல்கிறார்கள். இதுவும் அவர்களுடைய மன அழுத்தத்துக்கு ஒரு காரணம். களத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவர்களுடைய தன்மானத்தை யாரும் சீண்டிப் பார்க்கக்கூடாது. அவர்களையும் மனிதர்களாக மதிக்க வேண்டும்.

 

 

Next Story

ஆறு கோடி இன்சூரன்ஸ்; அதிகாரிகளை ஏமாற்ற நடந்த நாடகம் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 28

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
rajkumar-solla-marantha-kathai-28

நண்பர்கள் மூவர் இணைந்து போலி லைப் இன்சூரன்ஸ் வாங்கி மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

கடந்த வருடம் பேப்பரில் வந்த பிரபலமான வழக்கு இது. அந்த நபர் அமெரிக்காவில் நல்ல பெரிய பதவியில் வேலை செய்து கொண்டிருந்தவர். கொரோனா காலத்தில் வேலை இழந்து ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தும் தோல்வி அடைந்து ஊருக்கு திரும்புகிறார்.

வந்தவர் ஆறு  கோடி ரூபாய்க்கு லைஃப் இன்சூரன்ஸ் வாங்குகிறார். மூன்று நண்பர்களுடன்  சேர்ந்து திட்டம் செய்கின்றனர். அதாவது அவரைப் போலவே உள்ள போலி நபர் ஒருவரை கொலை செய்து இறந்ததாக லைஃப் இன்சூரன்ஸ் வாங்க திட்டமிடுகின்றனர். அதற்காகவே போலி நபரை கிராமத்திற்கு அழைத்துச் சென்று பாம்பாட்டியை வைத்து பாம்பை கடிக்க வைத்து அந்த நபரை கொன்று விடுகின்றனர்.  

இன்னொரு கூடுதல் போலி நபர் இறந்த உடலை வாங்குகிறார். இறந்த நபரை வைத்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்க வருகிறார்கள்.  எங்கள் கம்பெனி இன்வெஸ்டிகேசனை ஆரம்பிக்கிறது. எதற்காக அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார், ஏன் பாலிசி எடுத்த மூன்று மாதத்தில் இறந்தார் என்று விசாரித்தோம். பாலிசி எடுத்த உண்மையான அமெரிக்கா நபர் காணவும் இல்லை. அந்த உடலை வாங்கியவர் தன்னை நாமினியில் போட்டிருக்கிறார். 

ஆனால் எல்லாமே முரண்பாடாக இருந்ததில் எங்களுக்கு சந்தேகம் வந்தது. பின்னர் விசாரித்ததில் இறந்தது நிஜ நபரும் இல்லை, பாடியை வாங்கியவரும் போலி. உண்மையான நபர் ஏற்கெனவே இறந்தும் வேறு இருக்கிறார் என்று தெரியவந்தது. மூன்று போலிகள் சேர்ந்து இந்த போலி இன்சூரன்ஸ் நாடகத்தை நடத்தி இருக்கின்றனர். உண்மையைக் கண்டுபிடித்த போலீஸ், விசாரணைக்கு உட்படுத்தி எல்லாரையும் கைது செய்து ரிமாண்டும் செய்து விட்டனர். இந்த வழக்கு இன்னும் ட்ரயலில் தான் இருக்கிறது. 

Next Story

கொள்ளை அடித்து உதவி; மும்பையை கலக்கிய பெண் தாதா - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 27

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
rajkumar-solla-marantha-kathai-27

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது.  75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.

இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. 

போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.