Skip to main content

தங்கையை எதிரியாய் பாவித்த அண்ணன்; ஒப்பிட்டுப் பேசியது குற்றமா? - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :22

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
parenting-counselor-asha-bhagyaraj-advice-22

ஒருவரோடு மற்றவர்களை ஒப்பிட்டுப் பேசுவதால் மிகவும் மனம் பாதித்த குழந்தைக்கு அளித்த கவுன்சிலிங் பற்றி,  குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார். 

நாம் அடிக்கடி பார்த்து பழகிய, கூட பிறந்தவர்களோடு கம்பேர் செய்யும்போது ஏற்படும் பிரச்சனை தான் இதுவும். வந்திருந்த பெற்றோர் தனது டீன் ஏஜ் நெருங்கும் மகன் அவனது தங்கச்சியிடம் அவ்வளவு வெறுப்பாக இருக்கிறான் என்றும், அவர்களிடமும் ஒழுங்காகவும் பேசுவதில்லை என்றும், தங்கை கூட உட்கார்ந்து சாப்பிடுவது கூட இல்லை. நான் இருக்கும்போது அவளை பற்றி பேசவே கூடாது என்கிறான். நாங்கள் இதை எப்படி ஹேண்டில் செய்வது என்று கேட்டார்கள். நான் முதலில் அண்ணன், தங்கை இருவரிடமும் பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்த தங்கை இரண்டு வயது அண்ணனை விட இளையவள். ஆனால் அவள் அவ்வளவு பாசமாக இருக்கிறாள். எடுத்தவுடன், என் மேலே தான் எல்லா தவறும். நான் நன்றாக படிப்பேன். அண்ணாவிற்கு அவங்களுடைய படிப்பு பொறுத்தவரை அப்படி இல்ல. வீட்டிற்கு வருபவர்கள் முன்னாடி நான் தான் அதிகமாக கவனிக்கும் படி இருக்கிறேன் என்று புரிதலோடு பேசுகிறாள்.

எனக்கு அண்ணாவை ரொம்ப பிடிக்கும் என்று பாசமாக இருக்கிறாள். ஆனால் எதிரில் அவள் பேச பேச, அவளது அண்ணா அவ்வளவு குறைகள் அடுக்குகிறான். சிறு வயதிலிருந்து அவ்வளவு புகார்கள். தங்கச்சி நல்லா படிக்கிறாள், நீ படிக்கவில்லை, தங்கச்சி நல்லா காய்கறி சாப்பிடுகிறாள். நீ இல்லை அப்படி என்று அவ்வளவு கம்பேர் செய்கிறார்கள். அதனால் தான் நான் தனியாக போய்விட்டேன். இனிமேல் நான் ஹாஸ்டல் போய் விடுகிறேன். இல்லையென்றால் அவள் போய்க்கொள்ளட்டும். நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு எதற்கு கவுன்சிலிங் என்றே புரியவில்லை என்றான். இதுமட்டுமல்லாது அவனை பெற்றோர்கள் அடித்தும் இருக்கிறார்கள். பொதுவாக எல்லார் வீட்டிலும், இரண்டாவது குழந்தை இருந்தால் முதல் குழந்தையையே பொறுத்துக் கொள்ளுமாறும், விட்டுக் கொடுத்து போகுமாறும் சொல்கிறோம். முதல் குழந்தை வந்தவுடன் அதற்கு முதல் வாரிசு என்று அரவணைத்தல் என்பது பெரும்பாலும் இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் போய் விடுகிறது.   

இந்த விஷயத்தில் பெற்றோரின் தவறுதான் அதிகம் இருக்கிறது. அந்த சிறுமி சொல்கிறாள், என்னால் தான் வீட்டில் சண்டை நடக்கிறதென்று நிறைய நாள் அழுது இருக்கிறேன். ஆனால் நான் யாரிடமும் சொன்னதில்லை. அம்மா அண்ணா சண்டை போடும்போது நான் கேட்டிருக்கிறேன். அண்ணா ஒருநாள் சொல்லிருக்காங்க, கடைசியா உன் மடியில் எப்போது படுத்திருந்தேன் என்று. நான் என்ன செய்ய முடியும் ஆண்ட்டி என்று கேட்கிறாள். அண்ணாவிற்கு எப்படி இப்போது கவுன்சிலிங் தேவைப்படுதோ, இன்னும் சற்று காலத்தில் அந்த தங்கைக்கும் கவுன்சிலிங் தேவைப்படும். அந்த அளவு குற்ற உணர்ச்சி இருந்தது அவளிடம். இந்த கவுன்சிலிங்கில் அடுத்ததாக நான்கு பேரையும் உட்கார வைத்து பேச வைத்தேன். அந்த பையனிடம் உனக்கு என்னவெல்லாம் கோவமோ, என்னவெல்லாம் சொல்லணுமோ சொல்லலாம் என்று சொல்லிவிட்டு, அவன் முடிக்கும் வரை குறுக்கே எதுவும் பேசக்கூடாது என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு அவனை பேசச் சொன்னேன். அந்த சிறுவன் ஒரு மூன்று மணி நேரம் பேசினான். முதலில் அவ்வளவு புகார்கள் அவன் தங்கை மீது. தான் ஏதாவது பெற்றோர்க்கு செய்ய வந்தால் கூட அவள் முந்திக்கொண்டு செய்து விடுகிறாள். 

என்னை அவள் அம்மா அப்பாவிடம் நெருங்க விடுவதே இல்லை. என்னால் இவ்வளவு தான் படிக்க முடியும். இதற்கு மேல் அந்த செஷனை நான் தொடரவில்லை. அடுத்த செஷனில் தங்கை இல்லாமல், அம்மா, அப்பா என்று அந்த சிறுவனுடன் பேச வைத்தேன். பெற்றோர் பற்றி இவ்வளவு விஷயங்கள் சொல்லியிருப்பதை காட்டி, இதற்கெல்லாம் அவனையே ஒவ்வொன்றாக என்ன தீர்வு என்று சொல்லுமாறு கேட்டேன். முதலில் தங்கையை முன்னிலைப்படுத்தாதீர்கள். ஏதாவது ஒரு பொருள் வாங்கினால் கூட அவளை கேட்பதற்கு என்னிடம் கேளுங்கள். என்னிடம் ஒரு கருத்து கூட கேட்பதில்லை பின்னே நான் எதற்கு இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றான். பெற்றோர் மறுத்தபோதும் கூட, அந்த சிறுவன் எப்போதோ மூன்று நான்கு வருடம் முன்பு நடந்த விஷயங்களை நினைவுகூர்ந்து சொல்கிறான். அடுத்ததாக தங்கையை மீண்டும் அழைத்து அவளை பேசச் சொன்னேன். அவள் அண்ணனுக்காக ஏங்கி பேசியதை  அப்படியே பதிவு செய்து அவளது அண்ணணிடம் போட்டுக் காட்டினேன். அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அமைதியாக இருந்தான். முயற்சி செய்வதாக சொன்னான்.

அந்த சிறுவனிடம் பெற்றோர்களுடன் இருக்கும் விஷயம் இருக்கட்டும். நீங்கள் இருவரும் தினசரி பதினைந்து நிமிடம் நேரம் ஒதுக்கி உங்களுக்குள் இருக்கும் விஷயங்களை மனம் விட்டு பேசுங்கள். அந்த சிறுமியும் அவ்வளவு பொறுமையாக எந்த வித தடங்கலும் இன்றி கேட்டுக்கொண்டாள். பெற்றோர்கள் குழந்தைகளை ஓரளவு வளர்ந்த பின் நெருக்கத்தை, பிரியத்தை அவ்வளவாக காட்டாமல் தள்ளிப் போய்விடுகிறார்கள். அந்த நெருக்கம் காலங்கள் போக போக குறைந்து இருக்கலாமே தவிர, இல்லாமல் இருக்கக்கூடாது. என்ன வயது ஆனாலும் அவ்வப்போது அணைப்பது, லவ் யூ சொல்வது, நேரம் ஒதுக்குவது என்பது இருக்க வேண்டும். அவர்கள் ஏதாவது பேச வந்து, அது சிறிய விஷயமாக இருந்தாலும் கூட கண்டிப்பாக எடுத்ததும் அதனை தவறான கோணத்தில் கையாளாமல், முழுமையாக அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். குறிப்பாக அண்ணன், தங்கை இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும்போது, அவர்கள் அடித்து கொள்ளாதவரை நீங்கள் குறுக்கே போய் நீ சரி நீ தப்பு என்று போகாதீர்கள் என்று தான் நான் சொல்வேன். கண்டிப்பாக கம்பேர் செய்யவே கூடாது.

Next Story

குழந்தைக்குக் கொடுத்த பிரஸர்; டிப்ரசனுக்கு போன தாய் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :24

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
parenting counselor asha bhagyaraj advice 24

குழந்தைகள் பற்றியே யோசித்து தன் நிலையை இழந்திருக்கும் பெண்மணிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி  நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

என்னிடம் கவுன்சிலிங் வரும் குழந்தைகளுக்கு எவ்வளவு மெண்டல் ஹெல்த் முக்கியமோ அந்த அளவு அவர்களுடைய பெற்றோர்களுடைய மெண்டல் ஹெல்த்தும் முக்கியம். ஏனென்றால், அவர்களது மனவலிமையே குழந்தைகளுக்கு சென்றடையும். என்னிடம் வந்திருந்த அந்த பெற்றோர்க்கு குழந்தையின் படிப்பு, அவர்களது உலகத்தைச் சுற்றியே முழுமையாக இருபத்தி நான்கு மணிநேரமும் யோசித்து யோசித்து இப்போது அவர்களுக்கு தங்கள் குழந்தையைக் கண்டாலே பிடிப்பதில்லை. அவர்கள் அம்மா என்று அழைத்தாலே கோவம் வருகிறது என்றார். நான் இப்படி இருந்ததே இல்லை. அவர்களும் இப்போது என்னிடம் நெருக்கம் முன்பு போல காட்டுவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும் மேடம் என்று கவலையுடன் என்னைப் பார்க்க வந்திருந்தார்.

குழந்தைகளை இயல்பாக விட்டிருந்தாலே அவர்கள் நன்றாக தான் படிப்பில் நாட்டம் காட்டுகின்றனர். ஆனால், இப்போதுள்ள பெற்றோர்கள் அவர்கள் படிப்பில் சிறக்க ஒவ்வொரு பாடத்திலும் இன்னும் சிறப்பாக பயில நிறைய வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். அது குழந்தைகள் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் அவர்களது ஸ்ட்ரெஸ்ஸில் பங்கெடுத்து மிகவும் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். இந்தப் பெற்றோர்க்கு இரண்டுமே பெண் குழந்தைகள் வேறு. அவர்கள் பதின் வயதை அடைவதால் கண்டிப்பாக தன்னுடைய அரவணைப்பு அவர்களுக்கு வேண்டும் என்பது தெரிந்தாலும் தன்னால் முடியவில்லை என்றார். அவர்கள் பள்ளியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாரம் முழுவதும் தினசரி ஸ்பெஷல் வகுப்புகள் சேர்த்து அதைப் பற்றியே நினைத்து, அவரை பற்றி நினைக்காமல் உடல்நிலையே பாதிக்குமளவிற்குச் சென்றிருக்கிறார்.

அவரது உடல்நிலை கேடே அவரது உள்ளத்தையும் பெரிதளவு பாதித்து இருக்கிறது. சரியாக சாப்பிடுவது, தூங்குவது எல்லாமே மறந்து போய் பிடிக்காமல் இருந்தார். அவர் தன் குழந்தைகள் ஒன்றாவது வகுப்பு படிக்கும்போதே அவர்கள் பத்தாவதில் என்னவெல்லாம் செய்யவேண்டும், தான் வெளிநாட்டில் படிக்க இருந்து ஆனால் முடியாமல் போன இடத்தில் இவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று ஒரு நோட்டில் குறித்து வைத்திருந்திருக்கிறார். பின்னாடி மேலும் பேசியதில் தெரிந்தது, இவரது தந்தையும் இதே போலதான் தன்னைப் படிக்க வைக்கும் நடவடிக்கை இருந்ததாக குறிப்பிட்டார். இதுதான் அவரை அறியாமல் இவருக்கும் வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.

ஏதாவது ஆயுதம் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றெல்லாம் யோசித்திருந்திருக்கிறார். செல்ப் கேர் செய்திருந்தாலே அவர்கள் மனநிலை நன்றாக மாறும். ரொம்ப டிப்ரஷனாக இருந்தார். என்னுடைய காணொளியை மூன்று மாதமாக பார்த்து வந்தாலும், இதனை எப்படி போய் பேசுவது என்று காலம் தள்ளியதாகவும், ஆனால், இனிமேல் தாமதிக்க கூடாது என்று தான் வந்ததாக சொன்னார். அவருமே தன் பள்ளி, கல்லூரி படிப்பிலும், அரசு தேர்விலும் கூட சிறந்து விளங்கி இருந்திருக்கிறார். அதனால்தான் தன்னைப் போலவே தன் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்று இப்படி செய்து வந்திருக்கிறார் என்று புரிந்தது. நான் முதலில் அவர் கணவனை அழைத்து பேசினேன். இவர் தற்கொலை எண்ணம் எல்லாம் தன் மனைவிக்கு வந்திருந்தது என்பதை அறியாமல் இருந்திருக்கிறார்.

பொதுவாகப் பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனில் நிறைய மாற்றங்கள் உடலில் ஏற்படும். அதைக் குடும்பத்தில் நிறையப் பேர் புரிந்து கொள்கின்றனர். சில நேரங்களில் உதவி தேவை என்றால் நமது கணவனிடம் நாம்தான் எடுத்து சொல்லவேண்டும். அப்படி சில வருடங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதே இது ஒரு வகை விளைவு என்று சொல்லலாம். இதை உணராத அந்தக் கணவரிடம் அவருடைய மனைவிக்கு என்று ஏதும் செய்து கொடுக்குமாறும், கூட சிறிய நடைப்பயிற்சி, அவருக்கு போக நினைத்த வேலைக்கென்று அனுப்பி வைக்குமாறு சொன்னேன். ஆரம்ப காலங்களில் வேலைக்கு செல்லவேண்டாம் என்று கூறியிருந்த அவர், இப்போது தன் மனைவியின் நிலை அறிந்து வேலைக்கு அனுப்ப ஒத்துக்கொண்டார். அந்தப் பெண்மணிக்கு கல்லூரியில் பேராசரியாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. எனவே அதற்கு ஆதரிப்பதாக சொன்னார்.

இவருக்கு மூன்று செஷனுடன் முடிந்தது. வாரம் ஒருமுறை பாலோ அப் மட்டும் செய்து வருகிறேன். குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கவேண்டும்தான். ஆனால், குழந்தைகளிடம் மட்டுமே நேரம் ஒதுக்க வேண்டும் என்பது தான் தவறு. தன்னால் முடியாத போது அதைக் குழந்தைகளுக்கும் கணவருக்கும் எடுத்து சொல்லலாம். அவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் உலகத்தில் தங்கள் உலகத்தை இழந்து விடாமல் தனக்கென்று சிறிது மீ டைம் எடுத்துக்கொள்ளுதல் பெற்றோர்களுக்கு அவசியம்.

Next Story

பொறாமையால் நண்பன் செய்த செயல்; மன உளைச்சலான மாணவன் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :23

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
parenting counselor asha bhagtaeraj advice 23

கூடா நட்பினால் மனமுடைந்திருக்கும் மகனுக்கும், பெற்றோருக்கும் கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

என்னை ஒரு பெற்றோர் சந்திக்க வந்திருந்தனர். அவர்களது பதினோராம் வகுப்பு படிக்கும் மகன் ரொம்ப சாதாரணமாக தான் பழகி வந்ததாகவும், கொஞ்ச நாட்கள் முன்பிலிருந்து தனித்து வித்தியாசமான நடவடிக்கை கொண்டு இருப்பதை கவனித்து கவலையுடன் என்னிடம் சொன்னார்கள். மேலும் அவர்களது மகன் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாகவும், அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதாகவும், ஒருநாள் எதார்த்தமாக பார்த்தபோது அதில் வயதுக்கு மீறின பேச்சும், ஆபாச வார்த்தைகளுமான பேச்சுவார்த்தை (சேட்டிங்) இருந்ததை பார்த்ததும் அதிர்ந்து, அவனிடம் கடிந்து கேட்டிருக்கின்றனர்.

கேட்டதற்கு அதுபோல தான் பேசவில்லை. அது தன் நண்பன் என சொல்லியிருக்கிறான். அந்த இன்னொரு பையனை பெற்றோர்க்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களால் நம்பமுடியவில்லை. தன்னுடைய அக்கவுண்ட் தகவல் நண்பனுக்கு தெரியும் என்பதால் தன்னுடைய பெயரை இப்படி தவறாக உபயோகித்து உள்ளான் என்று சொல்ல, அதை அந்த பையனின் பெற்றோரிடம் சொல்லிவிட்டனர். பிறகு தான், இவன் மீது இருக்கும் பொறாமையால் அப்படி செய்திருக்கிறான் என்று தெரியவந்தது. அதை இந்த பையனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிக நெருங்கிய நண்பனே இப்படி செய்ததால் அவனால் சரியாக தூங்க முடியாமல், படிப்பும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கவலைப்பட்டு அழைத்து வந்திருந்தனர். அவன், அடுத்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு கூடவே நீட் தேர்வு எழுத இருப்பதாலும் மிகவும் வருத்தப்பட்டனர்.

நான் அவனிடம் முதல்படியாக அவனது சமூக வலைத்தள முகவரியை மூடச் சொல்லி அவனது நண்பனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், நினைவுகள் அனைத்தையும் அழித்து விட சொன்னேன். பிடிக்காத விஷயத்திலிருந்து முதலில் வெளி வருமாறு சொல்லி, பிடித்த ஐந்து விஷயங்களை பற்றியும், கனவுகள் பற்றியும் எழுதச் சொன்னேன். அதிலும் தன் நண்பனை சேர்த்து தான் குறிப்பிட்டிருந்தான். எல்லா நினைவுகளும் விளையாட்டு முதல் சேர்ந்து சென்ற இடங்கள் வரை தன் நண்பனை சேர்த்து தான் பேசினான். அந்த அளவு பாதித்திருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் இனிமேல் தான் எப்படி நல்ல நண்பனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டான். இப்போது அவனை பற்றி மட்டும் குறித்து யோசிக்க வேண்டும் என்றும் செல்ப் லவ் பற்றி எடுத்து சொன்னேன். இப்போது அவன் பள்ளியையும் மாற்றி விட்டார்கள்.

எனினும் கடந்த காலம் மொத்தமாக அவனிடமிருந்து அழிக்க வேண்டும் என்பதால் சிறிது காலம் எடுக்கத் தான் செய்யும். ஆனால் படிப்பை பொறுத்தவரை அவன் சீக்கிரமாக எல்லாமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருக்கிறான். பொதுவாக கவுன்சிலிங் வரும் குழந்தைகளை நான் பார்த்தவரை, குறிப்பாக பத்து, பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியை முழுமையாக நிறுத்தி விடுகின்றனர். அதற்கேற்றாற் போல அவர்களது படிப்பின் நேரமுறைகளும் அப்படிதான் இருக்கிறது. எனவே ஹாப்பி ஹார்மோன்ஸ் சுரக்கவே வாய்ப்பில்லை. அந்த பெற்றோரிடம் பையனுக்கு பிடித்த ஸ்போர்ட்ஸில் சேர்த்து விடுமாறு சொல்லி அனுப்பினேன். அதுவே அவனை கண்டிப்பாக பழைய இயல்பான நிலைக்கு மாற்றி, ஸ்ட்ரெஸ் பிரீயாக கொண்டுவர முடியும். பெற்றோர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளின் நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அந்த வயதில் அவர்களுக்கு தப்பான நட்பு கண்டுபிடிக்க தெரியாமல் போனாலும், பெற்றோர்களால் கண்டிப்பாக அதை கண்டுபிடித்து தவறான பாதையிலிருந்து காப்பாற்ற முடியும்.