Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 17

Published on 19/12/2019 | Edited on 06/01/2020

ஸ்மிருதி இராணியின் தொகுதி நிதி ஊழல்!- SMRITI IRANI MPLAD SCAM (GUJARAT)

BJP  SCAM A TO Z PART 17


மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தி, அதில் ஊழல் செய்ததாக மத்திய தணிக்கைக் குழு குற்றம்சாட்டியது. தனது தொகுதியில் ஸ்ரீ சாரதா மஜ்தூர் காம்தார் ஷாகரி மான்டில் என்ற அமைப்புக்கு கட்டுமான பணிகளுக்காக தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 6 கோடி ரூபாய் ஒதுக்கினார். ஆனால், நிதி ஒதுக்கியதில் எம்.பி. நிதி ஒதுக்கீடுக்கான வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறியது.

 
மகாராஷ்டிரா பருப்பு ஊழல்! TUR SCAM (MAHARASHTRA)

BJP  SCAM A TO Z PART 17

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அமைச்சராக இருந்தவர் கிரிஷ் பபாட். இவர் உணவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த சமயத்தில், கிலோ 90 ரூபாய்க்கு விற்ற பருப்பு, திடீரென்று 200 ரூபாய்க்கு உயர்ந்தது. இந்த விலை உயர்வை அமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விலை உயர்வை அவர் வேண்டுமென்றே தடுக்காமல், வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு வியாபாரிகள் லாபம் சம்பாதித்தனர் என்றும் அவர்களிடம் அமைச்சர் தனக்குரிய கமிஷனைப் பெற்றார் என்றும் கூறப்பட்டது.

 

மகாராஷ்டிரா டெண்டர் ஊழல்! TENDER SCAM (MAHARASHTRA)

BJP  SCAM A TO Z PART 17

மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்திற்கு டெண்டர் விட்டதில் அந்த மாநில பாஜக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த பங்கஜ முண்டே மிகப்பெரிய ஊழல் செய்ததாக உச்சநீதிமன்றமே குற்றம்சாட்டியது. அமைச்சர் தனக்கு வேண்டிய சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ரூ.6,300 கோடி அளவுக்கு டெண்டர் விட்டதை உச்சநீதிமன்றம் தடை செய்தது. டெண்டர் கோரும் விதிமுறைகளை மீறி அமைச்சர் நடந்துகொண்டதாகவும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பெரிய தொழில் அதிபர்களுக்கு வழங்கியதாகவும் உச்சநீதிமன்றம் கூறியது.