Skip to main content

நெருக்கடியான இக்காலம் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல உள்ளது - ஷிகர் தவான் பேச்சு!!! 

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

Shikhar Dhawan

 

 

கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இக்காலம் பிக்பாஸ் வீட்டில் இருப்பது போல உள்ளது என ஷிகர் தவான் கூறியுள்ளார்.

 

கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கரோனா அச்சுறுத்தல் நிறைந்த நெருக்கடியான சூழலில் இத்தொடர் நடைபெறுவதால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிசிசிஐ பலப்படுத்தியிருக்கிறது. அமீரகம் சென்ற வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கரோனா தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்ட பின் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். டெல்லி கேபிடல்ஸ் அணி வீரரான ஷிகர் தவான் நெருக்கடியான இக்காலகட்டம் குறித்து தற்போது பேசியுள்ளார்.

 

அதில் அவர், "நம் மனவலிமையை சோதிக்க இது சிறந்த தருணமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது போன்று உள்ளது. இத்தருணம் அனைவருக்கும் புதுமையானது. தனிமையில் நாம், நம்முடன் எவ்வாறு உறவாடிக்கொள்கிறோம் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது. நாமே நமக்கு சிறந்த நண்பராகவும் இருக்க முடியும், எதிரியாகவும் இருக்க முடியும். எனது உடல் வலிமை மற்றும் மனவலிமையை சரியான அளவில் வைத்துள்ளேன். உடற்பயிற்சி மற்றும் யோகா இதற்கு உதவுகிறது" என்றார்.

 

 

Next Story

RCB vs PBKS; நிதானமாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

RCB vs PBKS ipl live score update dhawan plays important knock

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். கோலி 35 ரன்களுடனும், பட்டிதார் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட்டை தொடர்ந்து சினிமா - மகத்துடன் நடிக்கும் ஷிகர் தவான்

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

Shikhar Dhawan make a debut in bollywood movie double xl

 

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தற்போது இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே நடந்த டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் ஒரு நாள் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தி கோப்பையை பெற்று கொடுத்தார் ஷிகர் தவான். 

 

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டை தாண்டி தற்போது திரையுலகிலும் காலடி வைத்துள்ளார் ஷிகர் தவான். பாலிவுட்டில் ஹுமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் எக்ஸ்எல்' (Double XL) படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சத்ராம் ரமனி இயக்கியுள்ள இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்போது ஹுமா குரேஷியுடன் தவான் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கிரிக்கெட்டில் ஜொலித்த ஷிகர் தவான் திரையுலகிலும் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.    

 

இது தொடர்பாக ஷிகர் தவான், "தேசத்திற்காக விளையாடும் ஒரு விளையாட்டு வீரராக, வாழ்க்கை எப்போதும் மிகவும் பரபரப்பாக இருக்கும். நல்ல பொழுதுபோக்குப் படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று. இந்த வாய்ப்பு எனக்கு வந்ததும் கதையைக் கேட்டதும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படம் இந்த சமுதாயத்திற்கு ஒரு அழகான செய்தியை சொல்லும். பல இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் கனவுகளை நோக்கி ஓட இப்படம் ஒரு உத்வேகமாக இருக்கும் என நம்புகிறேன்" என பேசினார்.

 

இப்படத்தை பூஷன் குமார், கிரிஷன் குமார் உள்ளிட்ட 8 பேர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஜாகீர் இக்பால் மற்றும் தமிழில் மங்காத்தா, ஜில்லா படத்தில் நடித்து பிரபலமான மஹத் ராகவேந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.