Skip to main content

இரட்டை சதத்துடன் முப்பெரும் சாதனைகளை கைவசப்படுத்திய இஷான் கிஷன்

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

Ishan Kishan achieved triple feat with double century

 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை வங்கதேசம் வென்று தொடரையும் கைப்பற்றிய நிலையில் இன்று சட்டோகிராமில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஜோடி பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தது. நிதானமாக ஆடிய கிஷன் 85 பந்துகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் பின் வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் அடுத்த 18 பந்துகளில் 50 ரன்களை விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் 126 பந்துகளில் 200 ரன்களை அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற இஷான் கிஷன் உலகின் அதிவேக இரட்டை சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். 

 

இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 138 பந்துகளில் 200 ரன்கள் அடித்ததே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையைத் தனது மட்டையால் இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.

 

வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையையும் இஷான் கிஷன் பெற்றுள்ளார். இதற்கு முன் 1999 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போட்டியில் கங்குலி 183 ரன்களை அடித்தவர் என்பதே சாதனையாக இருந்தது.

 

மேலும் வங்கதேசத்தில் நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் இஷான் கிஷன் பெற்றுள்ளார். இதற்கு  முன் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 185 ரன்களை எடுத்திருந்தார்.

 

இன்றைய ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் உடன் கைகோர்த்து ஆடிய விராட் கோலியும் தனது 44 ஆவது சதத்தை அடித்தார். சிறப்பாக ஆடிய அவர் 91 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்ஸர் படேலின் அதிரடியில் இந்திய அணி 50 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்களை குவித்தது.

 

தொடர்ந்து ஆட வந்த வங்கதேச அணி 12 ஓவரில் 74 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.

 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.