Skip to main content

பயமுறுத்துகிறதா கனவுத் தொல்லை?

Published on 01/06/2018 | Edited on 01/06/2018


 

Dream trouble


மனிதனுக்கு தூக்கம் என்பது அவசியம். ஆனால், பலரும் தூக்கமின்றி அவதிப்படு கிறார்கள். கனவுகள் வந்து தூக்கத்தை இல்லாமல் செய்துவிடும். நீரில் மூழ்குவது, காட்டில் தனியாக நின்றுகொண்டிருப்பது, படிக்கட்டில் நிற்பது,  படியிலிருந்து கீழே இறங்குவது, சேற்றில் மாட்டிக்கொண்டிருப்பது, நிர்வாணமாக அலைந்துகொண்டிருப்பது, கப்பலில் இக்கட்டான சூழலில் சிக்கித் தவிப்பது- இப்படி எத்தனையோ கனவுகள்!
 

 

 

 

 

வானத்திலிருந்து நட்சத்திரங்கள் உதிர்வது, சரீரம் மெலிந்து இறப்பது, புறா, கழுகு, காகம் ஆகியவற்றைப் பார்ப்பது, அரக்கனைப் போன்ற மனிதனைப் பார்ப்பது, நெருப்பு, வறண்டுபோன நதியைக் காண்பது, பற்களைக் கடிப்பது, ஒட்டகத்தின்மீது, கழுதையின்மீது அமர்ந்து பயணிப்பது, பள்ளத்தில் மாட்டிக்கொள்வது, நெருப்பில் 
நடப்பது, மரணத்தைப் பார்ப்பது- இவற்றைக் கனவில் கண்டால் மனித உடலில் ஏதாவது பிரச்சினைகள் இருக்கின்றன என்று அர்த்தம்.
 

ஊஞ்சலில் அமர்ந்திருப்பது, பாட்டு பாடிக்கொண்டிருப்பது, பொருட்களை உடைத்தல், கருப்பு நிறத் துணி அணிந்த பெண்ணுடன் உறவு கொள்ளுதல், எண்ணெய், சாணம், சேறு ஆகியவற்றை உடலில் பூசிக்கொள்ளுதல், கோழி, நாய், பாம்பு, நரி, ஓநாய், பூனை, கீரி, ஈ, தேள் ஆகியவற்றைக் கனவில் காண்பவர்களும் உண்டு.

விருப்பமான பொருட்கள் காணாமல் போவது, சவரம் செய்வது, இனிப்பு சாப்பிடுவது, காய்ந்த மரம், இரும்பு அடிக்கும் கொல்லன், மலைமீது ஏறுவது- இவை பிரச்சினைகளை அறிவிக்கும் கனவுகள்!
 

ஒருவரின் உடலில் வாதம், கபம், பித்தம் சரியாக இல்லாமலிருந்தால் இத்தகைய பல கனவுகள் வரும்.
 

ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி நீசமாகவோ அஸ்தமனமாகவோ இருந்தால், அவருக்கு ரோகாதிபதி தசை நடந்தால், உறங்கச் செல்லும்போது உடலில் வாய்வுத் தொல்லைகள் அதிகமாகும். கனவுகள் வரும். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் 3, 6, 8, 12-ல் பலவீனமாக இருந்தால் அவருக்கு கனவுகள் அதிகமாக வரும்.

 

 

 

 

 

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனுக்கு 8-ல் சனி இருந்தால், அவருக்கு வயிறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் இருக்கும். பண இழப்பு ஏற்படுமோ, நம்மை யாராவது ஏமாற்றி விடுவார்களோ என்றும் நினைப்பார். அதனால் தூக்கத்தில் கெட்ட கனவுகள் வரும்.
 

ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது மாரகாதிபதி தசை நடந்தால், அவர் ஊரைவிட்டு வெளியேறுவதைப்போல கனவு காண்பார். 
 

ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் சேர்ந்திருந்தால், பல பெண்களுடன் இருப்பதைப்போல கனவு வரும். கனவில் பெண்களிடம் அவர் ஏமாந்து விடுவார். தன் மனைவி தன்னைவிட்டு விலகிப்போய்விடுவாளோ என்ற பயம் ஏற்படும்.
 

செவ்வாய், சுக்கிரன், ராகு 6, 8, 12-ல் இருந்தால், சண்டை போடுவதைப் போலவும், மற்றவர்களுடன் வாதம் செய்வதைப்போலவும், தன்னை யாரோ ஏமாற்றுவதைப்போலவும் கனவு வரும்.
 

ஜாதகத்தில் சனியும் ராகுவும் 12-ஆவது வீட்டைப் பார்த்தால் பேய், பிசாசு, பாம்புகள் கனவில் வரும், நிர்வாணமாக நடப்பதைப்போல கனவு காண்பார்.

சனி, ராகு, சந்திரன் 12-ல் இருந்தால் சேற்றில் மாட்டிக்கொள்வதைப்போல, குளத்தில் விழுவதைப்போல கனவு காண்பார். சுக்கிரன், சந்திரன்,  புதன் 12 அல்லது 6-ல் இருந்தால், பெண்கள் தொல்லை தருவதைப்போல கனவு வரும். 12-ல் ராகு, 6-ல் சனி இருந்தால், முன்னோர்கள் கனவில் வந்து அழைப்பார்கள்.
 

சந்திரன், ராகு 12-ல் இருந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டால், சிங்கம், புலி துரத்துவதைப்போலவும், கழுதை, ஒட்டகத்தில் சவாரி செய்வதைப் போலவும், மலைப்பகுதியில் மாட்டிக்கொள்வதாகவும் கனவு தோன்றும். புதன், சந்திரன், சனி 6, 8, 12-ல் இருந்தால் அல்லது சந்திரனுக்கு முன்பும் பின்பும் பாவ கிரகம் இருந்தால், தினமும் கனவுத் தொல்லைகள் இருக்கும்.
 

பரிகாரங்கள்
 

 

 

 

 

உரிய நேரத்தில் சாப்பிடவேண்டும். இரவு உணவை கை- கால்களைக் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். சிறிது வெல்லம் சாப்பிடுவது நல்லது. ஆஞ்சனேயரின் நாமத்தை உச்சரித்துவிட்டு படுக்கவேண்டும். வீட்டில் தென்கிழக்கில் நீர் பிடித்து வைக்கக்கூடாது. மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு வரும். தெற்கு, கிழக்கு திசைகளில் தலை வைத்துப் படுக்க வேண்டும். பாம்பு, சேறு, நீரில் மூழ்குவது- இவற்றைக் கனவு காண்பவர்கள் தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். கழுதை, பாம்பு, தேள், நீர், நிர்வாணம் ஆகியவற்றை கனவில் காண்பவர்கள் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடவேண்டும். வீட்டில் தேவையற்ற பொருட்களை நீக்கி, படுக்கையறையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தலைப்பகுதியில் நீர் வைக்கக்கூடாது. லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிவது நல்லது. வீட்டில் மகாமிருத்யுஞ்சய யந்திரத்தை வைத்தல் நலம்.

 

மகேஷ் வர்மா