Skip to main content

தீவிரவாதியின் உடலை அப்புறப்படுத்து -இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் அமைச்சர் போர்க்கொடி

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

தமிழர்களுக்குச் சொந்தமான மயானத்தில் தீவிரவாதியின் உடலை புதைத்த இலங்கை அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் இலங்கையிலுள்ள தமிழ் அமைச்சர் செந்தில்தொண்டமான். அரசின் நடவடிக்கைக்கு அமைச்சர் ஒருவரே எதிர்ப்பு தெரிவித்திருக்கும் விவகாரம் இலங்கை அரசியலில் ஏகத்துக்கும் பரபரப்பை உருவாக்கி வருகிறது. 
 

இலங்கை மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்குக் காரணமானவன் தீவிரவாதி முகமத்அசாத். அவனது உடல் பாகங்கள் தேவாலயத்தில் சிதறிக் கிடந்தது. 

 

srilanka


இந்த தாக்குதலை புலனாய்வு செய்த இலங்கையின் புலனாய்வு அமைப்புகள், தீவிரவாதி முகமத் அசாத்தின் சிதறிய உடல் பாகங்களை சேகரித்து பாதுகாத்து வந்தன. விசாரணை முடிந்த நிலையில் முகமத் அசாத்தின் உடல் பாகங்களை எங்கே புதைப்பது என இலங்கை பாதுகாப்புத்துறை போலீஸார் ஆலோசித்தபோது, மட்டக்களப்பில் முஸ்லீம்களுக்கான கல்லறை பகுதியில் புதைத்து விடுங்கள் என இலங்கை அரசு தரப்பில் சொல்லப்பட்டது. 



 

அதற்கான முயற்சியில் பாதுகாப்புத்துறை இறங்கிய போது, முகமதுஅசாத் முஸ்லீமாக இருந்தாலும் அவன் ஒரு தீவிரவாதி. அவனது உடலை புனிதமான எங்கள் கல்லறையில் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என முஸ்லீம் மக்களும் முஸ்லீம் அமைப்பினரும் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் அந்த முயற்சியை கைவிட்ட இலங்கை பாதுகாப்புத்துறையினர், அவசரம் அவசரமாக மட்டக்களப்பு, கள்ளியங்காடு தமிழர்களுக்குச் சொந்தமான இந்து மயானத்தில் தீவிரவாதியின் உடல்பாகங்களை புதைத்தனர்.
 

இதனையறிந்து மட்டக்களப்பு தமிழர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இலங்கை அரசை கடுமையாக கண்டித்திருக்கிறார் ஊவா மாகாண தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான். இது குறித்து பேசிய அவர், ‘’ இந்து மயானத்தில் தீவிரவாதியின் உடலை புதைத்ததால் சில நாட்களாகவே மட்டக்களப்பில் பதட்டமான சூழல் இருந்து வருகிறது. பாதுகாப்புத்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள தாந்தோன்றித்தனமான இந்த செயல்பாடுகளால், வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முகமது அசாத் என்பவன், மனித படுகொலைகளுக்குக் காரணமான பயங்கரவாதி. அவனை அவனது குடும்பத்தினரும் ஒட்டுமொத்த முஸ்லீம்களும் புறக்கணித்து விட்டனர். 


 

நினைத்துப் பார்த்தாலே குலை நடுங்கும் தேவாலய குண்டு வெடிப்பில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு காரணமான ஒரு தீவிரவாதியின் உடல் பாகங்களை அவனது சொந்த ஊரான காத்தான்குடி முஸ்லீம் மையவாடிகளில் புதைப்பதற்கே அனுமதி வழங்க முஸ்லீம்கள் மறுத்து விட்டனர். அது மட்டுமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எந்தவொரு முஸ்லீம் மையவாடிகளிலும் இடமளிக்கப்படவில்லை. 
 

இப்படிப்பட்ட நிலையில், முஸ்லீம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட தீவிரவாதியின் உடல் பாகங்களை இந்து மயானத்தில் இலங்கை காவல்துறையினரும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இணைந்து  புதைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பாதுகாப்புத்துறையினரின் தான்தோன்றித்தனமான இத்தகைய செயல்கள், தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே இனக்குரோதத்தை தூண்டிவிடுவதற்கு வழிகோல்வதாக இருக்கிறது. இதனை, நான் சார்ந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இன நல்லிணக்கத்தை உருவாக்கவும் அதனை பாதுகாக்கவும் துணை நிற்க வேண்டிய இலங்கை பாதுகாப்புத்துறை, இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க முற்படுவது அறிவீனச் செயலாகும்.

 

Senthil Thondaiman


 

தமிழர்களின் பாரம்பரிய வழிமுறைகளை மாற்றி இந்து மயானத்தில் ஒரு தீவிரவாதியின் உடலை அடக்கம் செய்திருப்பது  தமிழர்களின் பாரம்பரியத்தையும் நெறிகளையும் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய வழிமுறைகளை இலங்கை அரசு அழிக்க நினைப்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுக தொண்டமான் உள்பட கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். உடனடியாக புதைக்கப்பட்ட தீவிரவாதியின் உடல் பாகங்களை இந்து மயானத்திலுருந்து அப்புறப்படுத்த இலங்கை அரசை வலியுறுத்துகிறேன் ‘’ என்கிறார் ஆவேசமாக. 
 

இலங்கை அரசுக்கு எதிராக இலங்கையிலுள்ள ஒரு தமிழ் அமைச்சரே போர்க்கொடி உயர்த்துவது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தீவிரவாதியின் உடல் பாகங்கள் அப்புறப்படுத்தப்படாவிட்டால் தமிழர்களை திரட்டி பாதுகாப்புத்துறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.              


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.