Skip to main content

இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவு; உலகத்தலைவர்கள் இரங்கல் 

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

passed away Elizabeth II; World leaders mourn

 

இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரிட்டன் ராணி உயிரிழந்ததால் பல்வேறு உலகத் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எலிசபெத் ஒரு சகாப்தத்தைக் காட்டிலும் மேலானவர் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டாம் எலிசபெத் அவரின் தைரியம் மற்றும் கருணைக்காக உலகம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் எனக் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ராணி எலிசபெத் அவர்களின் மறைவு வேதனை அளிப்பதாகக்  குறிப்பிட்டுள்ளார். 

 

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ் ராணியின் மறைவு பேரிழப்பு எனக் கூறியுள்ளார்.  உலகம் ஒரு ஆளுமையை இழந்து விட்டது என இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 தசாப்தங்கள் நீடித்த எலிசபெத் ராணியின் ஆட்சி 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல திருப்பங்கள் கண்ட எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீண்டகாலம் ஆட்சி பீடத்திலிருந்த எலிசபெத் ராணி, தனது நாட்டுக்காகக் கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

ராணி எலிசபெத்தின் உடல் 10 நாட்களுக்குப் பின் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாகவும் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எலிசபெத் ராணியை கொல்ல சதி; இந்தியருக்கு சிறை தண்டனை

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Indian jailed because Queen of England

 

இங்கிலாந்து எலிசபெத் மகாராணியை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளிக்கு இங்கிலாந்து நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

 

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் தனது 96 வயதில் கடந்த 2022ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது, அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் போலீஸார் கைது செய்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்துள்ளார். 

 

21 வயதான இவர், கடந்த 2021ஆம் ஆண்டில், இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் சட்டவிரோதமாக நுழைய முயன்றார். முகத்தில் முகமூடி அணிந்து அந்த அரண்மனையில் ஊடுருவிய ஜஸ்வந்த சிங்கை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தை கொலை செய்ய வந்ததாக தெரிவித்தார். மேலும், கடந்த 1919ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் ராணி எலிசபெத்தை கொல்ல வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு காவல்துறையினர் ஜஸ்வந்த் சிங்கை கைது செய்தனர். 

 

இதனையடுத்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அந்த நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், அவருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

இங்கிலாந்து மன்னராக முடி சூடப் போகும் மூன்றாம் சார்லஸ்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

Charles III to be crowned King of England

 

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி உயிரிழந்தார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற நிலையில் அவரது மறைவு உலக நாடுகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு மரியாதைக்கு பிறகு அவரது உடல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. 

 

ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டனின் இளவரசர் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராகப் பொறுப்பேற்றார். மன்னராகப் பொறுப்பேற்ற சார்லஸின் முடி சூடும் விழா இன்று லண்டனில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது. சார்லஸ்ஸை அழைத்துச் செல்ல 700 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசன சாரட் வண்டி தயார் செய்யப்பட்டுள்ளது. 

 

இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடி சூடிக்கொண்ட பிறகு அவரும் அவரது மனைவி கமிலாவும் பக்கிங்காம் அரண்மனை தேவாலயத்திற்கு சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். மன்னராக முடி சூட்டப்படும் சார்லஸ்க்கு புனித எட்வர்டின் கிரீடம் அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கமிலா இங்கிலாந்து இராணியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். 

 

இந்த விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியா சார்பில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார்.