Skip to main content

"நான் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதை வெளிப்படுத்த முடியவில்லை" - மலாலா...

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

malala graduated from oxford university

 

பெண் கல்விக்காகப் போராடிவரும் பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (22), ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். 

சிறுவயது முதல் பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெண் கல்விக்காக பல்வேறு போராட்டங்களை ஏற்றுக்கொண்டு வரும் மலாலா, 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியாக இருந்தபோது, தீவிரவாதிகளால் சுடப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த மலாலா உலகம் முழுதும் பிரபலமானார். அவரது சேவைகளைப் பாராட்டி உலகம் முழுதும் பல்வேறு அமைப்புகள் அவரை கௌரவித்து வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த மலாலா, தனது படிப்பை முடித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மலாலா, "ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளேன். நான் எந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. இதனை தொடர்ந்து என்னவென்று எனக்கு தெரியாது. இப்போதைக்கு வாசிப்பு மற்றும் தூக்கம்தான்" எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெண்கள் புர்கா அணியாவிட்டால் ஆண்களின்...'-எச்சரிக்கும் தலிபான்கள்! 

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 

Taliban warns womens... if not to wear burqas

 

கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு பெண் குழந்தைகளின் கல்வி என்பது கேள்விக் குறியானது. பெண்கள் உடலையும், முகத்தையும் மறைக்கும் அளவிற்கு 'புர்கா' அணிய வேண்டும், பாடசாலைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே திரைச்சீலை அமைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தலிபான்கள் மேற்கொண்டனர்.

 

பெண் கல்வி மற்றும் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயல்களை தலிபான்கள் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என நோபல் பரிசு பெற்ற மலாலா உள்ளிட்ட பெண்ணிய ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தங்களது முழுஉடலை மறைக்கும் வகையில் 'புர்கா' அணியவேண்டும், பண்பாடு மற்றும் மத ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பெண்கள் தங்களது முகத்தை முழுவதுமாக மூடிக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ள தலிபான்கள், இந்த உத்தரவை மீறும் பெண்களுடைய ஆண் உறவினர்களின் அரசு வேலைகள் பறிக்கப்படும் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை உத்தரவை வழங்கியிருக்கிறார்கள்.

 

 

Next Story

''பெண் குழந்தைகள் படிக்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்''-மலாலா கருத்து

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

"The Taliban should allow girls to study," she said-malala speech

 

பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை தலிபான்கள் வழங்காவிட்டால் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என நோபல் பரிசு வென்ற மலாலா தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் ஆப்கானிஸ்தானில் பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மலாலா ''பெண் குழந்தைகள் கல்வி அறிவை பெறுவதற்கு தலிபான்கள் அனுமதிக்க வேண்டும். பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை தலிபான்கள் வழங்காவிட்டால் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள்'' என்றார்.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பெண் குழந்தைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மலாலா மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமுற்ற மலாலா இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தார். அதனையடுத்து மலாலாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.