Skip to main content

ரஷ்யாவை போருக்கு இழுக்க அமெரிக்கா முயற்சி - புதின் பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

putin

 

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்து, அதைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அந்தநாட்டின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்தநிலையில் தற்போது ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது.

 

இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது. ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன. மேலும் அமெரிக்கா சிறிய அளவிலான படைகளை அனுப்பப்போவதாக அறிவித்துள்ளது. அதே நிறத்தில் ரஷ்யா எல்லைகளில் உள்ள படைகளுக்கு இரத்தத்தை அனுப்ப ஆரம்பித்தது. இதனால் போர்ப்பதற்றம் அதிகமானது.

 

இதற்கிடையே ரஷ்யா உக்ரைன் எல்லையில் குவித்துள்ள படைகளைத் திரும்ப பெற, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணி விரிவுபடுத்தப்படுவது தவிர்க்கப்படும், நேட்டோவில் உக்ரைனை சேர்க்கப்படாது என்பது போன்ற உத்தரவாதங்களை வலியுறுத்தியது. ஆனால் அதனை ஏற்க மறுத்துள்ள அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும்  பதற்றத்தை குறைப்பது தொடர்பாக வேறு சில முன்மொழிவுகளை ரஷ்யாவிடம் முன்வைத்தன.

 

இதனைதொடர்ந்து புதின், அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் அளித்துள்ள முன்மொழிவுகளை ஆராய்ந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்தார். இந்தநிலையில் புதின், அமெரிக்கா ரஷ்யாவை போருக்கு இழுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; அமெரிக்கா மற்றும் நேட்டோவின் முன்மொழிவுகளை கிரெம்ளின் ஆராய்ந்து வருகிறது. ஆனால் அந்த முன்மொழிவுகள் போதுமானதாக இல்லை. ரஷ்யாவின் அடிப்படையான கவலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பது ஏற்கனவே தெளிவாக தெரிகிறது. உக்ரைன் ஒரு நேட்டோ உறுப்பினராக இணைந்து, இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குகிறது என்று கற்பனை செய்வோம். நாம் நேட்டோ அணியுடன் போருக்குச் செல்ல வேண்டுமா? இதைப்பற்றி யாராவது யோசித்தீர்களா?.

 

வாஷிங்டனின் முதன்மையான அக்கறை உக்ரைனின் பாதுகாப்பில் இல்லை. அதன் முதன்மையான அக்கறை ரஷ்யாவை கட்டுப்படுத்துவதில் உள்ளது. அந்த இலக்கை அடைய உக்ரைன் ஒரு கருவியே. ஒருவித ஆயுத மோதலுக்கு நம்மை இழுத்து, ஐரோப்பாவில் உள்ள அவர்களது நட்பு நாடுகளின் உதவியுடன், அமெரிக்காவில் அவர்கள் இப்போது பேசிக்கொண்டிருக்கும் கடுமையான பொருளாதாரத் தடைகளை நமக்கு எதிராக விதித்து ரஷ்யாவை கட்டுப்படுத்தலாம். இதில் (உக்ரைன் பிரச்சனையில்) தீர்வைக் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறேன். தீர்வை கண்டுபிடிப்பது எளிதாக இருக்காது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இவ்வாறு புதின் தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்