Skip to main content

இரவில் சிக்கிய பாரிவேந்தர்; சுற்றிவளைத்த இளைஞர்கள் - முசிறியில் பரபரப்பு

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Youths intercepted Paarivendhar car at night in Musiri

பெரம்பலூர் நாடாளுமன்ற ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று(4.4.2024) முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாரிவேந்தர் இரவு சுமார் 9.30 மணியளவில் முசிறி அருகே உள்ள காமாட்சிபட்டியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கடைசி இடமான தண்டலை புத்தூர் கிராமத்திற்கு பிரச்சாரத்திற்காக புறப்பட்டார். அப்போது வேளகாநத்தம் அருகே  இளைஞர்கள் பாரிவேந்தர் வரும் வழியில் கற்களை வைத்து மறித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பாரிவேந்தரின் உதவியாளர்கள் வாலிபர்களிடம் ஏன் எதற்காக மறிக்கிறீர்கள் என கேட்டதற்கு பாரிவேந்தர் கடந்த 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பெரம்பலூருக்கு மூவானூர், வேங்கைமண்டலம் மற்றும் வேளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து இரண்டு பேருந்துகளில் பொது மக்களை அழைத்துக் கொண்டு சென்றோம். அப்படி சென்றபோது பெரம்பலூருக்கு முன்பாக உள்ள அம்மாபாளையம் என்ற இடத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Youths intercepted Paarivendhar car at night in Musiri

காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், தற்போது வரை அவர்களின் உடல் நலம் காக்க அவர்களுக்கு எவ்வித மருத்துவ உதவி செய்யாதது ஏன்? நீங்கள் வேட்புமனு செய்ய நாங்கள் வந்து விபத்தில் சிக்கிய நிலையிலும், ஐஜேகே கட்சியினர் நடந்து கொண்ட முறை நியாயமானதா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரச்சார வாகனங்கள் பாரிவேந்தர் வந்த வாகனத்திற்கு பின்னால் அணிவகுத்து நின்றது. கிராமத்திற்கு வரும் வழியில் எல்லையில் கல் வைத்து வாலிபர்கள் சாலையை மறித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையடுத்து பாரிவேந்தர் சம்பந்தப்பட்ட வாலிபர்களிடம் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் வேண்டுமானால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். இதற்கு நாளை உரிய தீர்வு எடுக்கப்படும் என கூறினார். பின்னர் வாலிபர்கள் கற்களை அகற்றி வழிவிட்டனர். அதனைத் தொடர்ந்து தண்டலைபுத்தூர் கிராமத்தில் பாரிவேந்தர் பிரச்சாரம் முடித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

சார்ந்த செய்திகள்