Skip to main content

 தலை துண்டிக்கப்பட்ட இளைஞர்; காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Youth incident in Madurai over love issue

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அழகேந்திரன். பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அழகேந்திரன் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர் கள்ளிக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த நிலையில் அழகேந்திரன் மதுரை மாவட்டம் வேளான்பூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகே தலை தனியாகத் துண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கும், பெற்றோருக்கும் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அழகேந்திரனின் உடலைக் கைபற்றி பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அழகேந்திரன் மாற்றுச் சமூக பெண்ணை காதலித்து வந்துள்ளார். அது அந்தப் பெண்ணின் உறவினரான பிரபாகரன் என்பவருக்குத் தெரியவர உடனே அழகேந்திரனை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனால், அழகேந்திரன் காதலைத் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சம்பவத்தன்று தனியாகப் பேச வேண்டும் என்று கூறி அழகேந்திரனை, பிரபாகரன் அழைத்துச் சென்றுள்ளார். 

பின்னர் காதல் விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர். அப்போது தகராறு முற்றியதன் காரணமாக ஆத்திரமடைந்த பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து அழகேந்திரனின் தலையைத் துண்டித்துள்ளார். பின்னர் உடலையும், தலையையும் அங்கேயே போட்டுவிட்டு பிரபாகரன் தப்பித்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே அழகேந்திரனை ஆணவ படுகொலை செய்துவிட்டதாக  அவரது பெற்றோர் மற்றும் உறவினர், தமிழ் புலிகள் அமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பிரபாகரனை  கைது செய்த காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்