Skip to main content

காதலிக்க மறுத்த மாணவி; தாயையும், மகளையும் வெட்டிய இளைஞர் 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

young man who incident the woman who refused to love him and his mother

 

முசிறி தாலுக்கா கல்லூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல்(19). அதேபோல் சீதேவி மங்கலத்தைச் சேர்ந்தவர் 17 வயதான கல்லூரி மாணவி. இவர் துறையூர் அருகே புத்தனாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சண்முகவேல் சனமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது பாடலூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் போது கல்லூரி மாணவிக்கும் சண்முகவேலுக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது. 

 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் நடைபெற்ற விவசாய சங்கத் தலைவர் கொலையில் சண்முகவேல் மீதும் வழக்கு உள்ளது. இதனை அறிந்த கல்லூரி மாணவி இவருடைய நடவடிக்கை பிடிக்காததால் அவரை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சண்முகவேல் சீதேவி மங்கலத்தில் உள்ள கல்லூரி மாணவியின் வீட்டுக்கு சென்று தன்னை காதலிக்குமாறு மாணவியை வற்புறுத்தி உள்ளார். அப்போது அவரை திட்டி வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த சண்முகவேல் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் கல்லூரி மாணவியின் தலையில் வெட்டி உள்ளார். அதனை தடுக்க முயன்ற போது கையிலும் வெட்டியுள்ளார். இதனை கண்ட அவரது தாயார் ஓடி வந்து காப்பாற்ற முயன்ற போது அவரையும் கை மற்றும் தலையிலும் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இதனைத் தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற சண்முகவேல் பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சமயபுரம் சிறுகனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்