Skip to main content

பள்ளி விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல்; நெல்லை வாலிபர்கள் கைது!

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

yercaud  school issue two nellai youngsters arrested

 

ஏற்காட்டில், பள்ளி விடுதிக்குள் புகுந்து பிளஸ்2 மாணவர்களை சரமாரியாக தாக்கியதாக நெல்லையைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மான்ட்போர்டு ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். ஆக. 6ம் தேதி பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி, ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக பள்ளியில் தயாரிக்கப்பட்ட கேக் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஏலம் விடப்படும். இதன்மூலம் திரட்டப்படும் நிதி, ஆதரவற்றவர்களின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். 

 

அதன்படி, நடந்த ஏலத்தில் ராட்சத கேக் ஒன்றை பத்தாம் வகுப்பு மாணவர்கள் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். இந்த கேக்கை ஏலம் எடுப்பதில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

 

பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஏலத்தில் வெற்றி பெற்றதால் ஆத்திரம் அடைந்த பிளஸ்2 மாணவர்கள், ஏலம் எடுத்த 4 மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவன், தான் தாக்கப்பட்டது குறித்து சென்னையில் உள்ள தனது அண்ணன் மாணிக்கராஜா என்ற வாலிபருக்கு தகவல் அளித்துள்ளார். அவர், நெல்லையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் அளித்து, அவர்களில் சில பேரை உடனடியாக பள்ளிக்கு வரும்படி அழைத்துள்ளார். 

 

இதற்கிடையே, மாணிக்கராஜாவும் மான்ட்போர்டு பள்ளிக்கு வந்து சேர்ந்தார். அவரும், உடன் வந்த உறவினர்களும், பள்ளி விடுதிக்குள் புகுந்து தூத்துக்குடி மாணவனை தாக்கிய பிளஸ்2 மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதனால் சம்பவத்தன்று பள்ளி விடுதி வளாகமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. விடுதி ஊழியர்கள், பள்ளி நிர்வாகிகள் அங்கு வந்ததால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. 

 

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த துரைராஜ் (23), சரவண ஐயப்பன் (22) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.