Skip to main content

குடித்துவிட்டு அலப்பறை; கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

 wife who pours boiling oil on her husband

 

நெல்லையில் குடித்துவிட்டு தகராறு செய்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

நெல்லை மாவட்டத்தின் தெற்கு வீரவநல்லூரின் பாரதி நகரைச் சேர்ந்தவர் மாதவன் (40). கூலித்தொழிலாளியான இவருக்கும் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (35) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்தது. தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 

தினந்தோறும் குடித்து விட்டு வரும் மாதவன் அன்றாடம் தன் மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதுண்டாம். இதனால் கணவன், மனைவிக்கிடையே உரசல்கள், வாய்த்தகராறுகள். இதனால் மனம் உடைந்து நொறுங்கிப் போன மனைவி அய்யம்மாள் கணவனின் ரோதனை தாங்காமல் வீரவநல்லூரிலிருக்கும் தன் தாய் வீட்டில் குடியேறி விட்டாராம்.

 

இதனிடையே நேற்று முன்தினம் வழக்கம் போல் குடித்து விட்டு மனைவியின் வீட்டுக்குச் சென்ற மாதவன் அங்கேயும் தகராறு செய்தவர், குடிபோதையில் இரவு அங்கேயே உறங்கியிருக்கிறார். தாய் வீடு வரை வந்து தகராறு பண்ணிய கணவன் மீது கடுங்கோபத்திலிருந்த மனைவி அய்யம்மாள், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தன் கணவன் மீது கொதிக்கிற எண்ணெய்யை ஊற்றியிருக்கிறார். இதனால் அலறிப் படுகாயம் அடைந்த மாதவனை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்க, அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சம்பவ குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிகார கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் வீரவநல்லூர் பகுயை உலுக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்