Skip to main content

மனைவி கொலை: நாடகமாடிய சென்னை வடபழனி கோவில் குருக்கள் நண்பருடன் கைது

Published on 09/04/2018 | Edited on 09/04/2018
Vadapalan-murder 600.jpg


கடந்த 5ஆம் தேதி கணவரை கட்டிப்போட்டு மனைவி படுகொலை என்ற செய்தி பரவியதும் சென்னை வடபழனி பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மனைவியை நண்பருடன் சேர்ந்து கணவனே கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
 

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த கோவில் குருக்கள் பாலகணேசன். இவரது மனைவி ஞானப்பிரியா. கடந்த 4-ந்தேதி நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கணவர் பாலகணேஷ் வீட்டுக்கு வெளியில் கழிவறை அருகே கை, கால்களும் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார். 
 

கொள்ளையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து பாலகணேசை கட்டிப் போட்டு விட்டு ஞானப்பிரியாவை கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த கொலை குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
 

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணவர் பாலகணேசிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தவர்கள் உருட்டு கட்டையால் என்னை தாக்கி கட்டி போட்டு விட்டு மனைவியை கொலை செய்து விட்டு தப்பியதாக முதலில் வாக்குமூலம் கொடுத்தார்.
 

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போட்டு பார்த்ததில் பால கணேஷ் கூறியது பொய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலகணேசிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். 
 

போலீசார் விசாரணையில் பாலகணேஷ் கூறுகையில், திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு குழந்தை இல்லை. இந்த விசயத்தில் என் மனைவி என்னை கிண்டல் செய்து வந்தார். இதனால் என் மனைவியை கொலை செய்ய நண்பர் மனோஜ் உடன் இணைந்து திட்டம் தீட்டினேன். நண்பனுடன் சேர்ந்து மது அருந்தினேன். பின்னர் வீட்டுக்கு வந்து மனைவியை கொன்றோம். 4ஆம் தேதியே இந்த சம்பவம் நடந்தது. 5ஆம் தேதி காலையில் வீட்டு உரிமையாளர் பார்த்து போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார் என கூறியுள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்